அக்கா மகாதேவி

அக்கா மகாதேவி (Akka Mahadevi, கன்னடம்: ಅಕ್ಕ ಮಹಾದೇವಿ) 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கன்னடப் பெண் கவிஞர்[1]. வீர சைவ நெறியைக் கடைப்பிடித்த அக்கா மகாதேவியின் பாசுரங்கள் கன்னட மொழியில் தமக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்தன[2]. வசனா எனப்படும் முறையில் எழுதப்பட்ட அக்கா மகாதேவியின் பாசுரங்கள், கன்னட பெரும் கவிகளான பசவன்னா, சென்னா பசவன்னா, கின்னாரி பொம்மையா, சித்தாராமைய்யா, அல்லமாபிரபு, தாசிமைய்யா ஆகியோரின் பாசுரங்களை ஒத்தவையாக இருந்தன. இவர் மொத்தம் 430 வசனா பாசுரங்களை இயற்றினார். இவரின் மீது மக்கள் கொண்ட விருப்பத்தின் காரணமாகவே இவர் "அக்கா" என அழைக்கப்படுகின்றார். சிவனின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட அக்கா மகாதேவி, அவரையே தனது உளமார்ந்த கணவனாகப் பாவித்துக்கொண்டார்.

அக்கா மகாதேவி

பிறப்பு தொகு

அக்கா மகாதேவி, இன்றைய கன்னட மாநிலம், சிமோகா மாவட்டத்தில் உள்ள உடத்தடி என்ற ஊரில் பிறந்தார்[3]. 25 வயது வரை மட்டுமே வாழ்ந்தார் என நம்பப்படுகின்றது. இதைத் தவிர இவரது பிறப்பு, இறப்பு, வயது, இளமைப்பருவம் பற்றிய வேறு சரியான தகவல்கள் இல்லை.

மகாதேவியக்கா தொகு

வடகர்நாடகத்தில் பசவண்ணர் கி.பி.12ஆம் நூற்றாண்டில் தோன்றி லிங்காயத்து சமயத்தைப் பரப்பினார். இந்நெறியைப் பின்பற்றிய அடியரர் சிவசரணர் எனப்படுவர். இவர்கள் தமது கருத்துகளையும் இறை அனுபவங்களையும் பாடல் வடிவில் எழுதி வைத்தார்கள். இவை 'வசனங்கள்' எனப்படும். இவர்களுள் பெண்கள் பலர் இருந்தார்கள். இவர்களுள் ஒருவரே அக்கமாதேவி. இவர் அக்கமாதேவி என்றும் மகாதேவியக்கா என்றும் அழைக்கப்பட்டார். 'அக்கா என்ற சொல் வீரசைவ சமயத்தில் இவரை மட்டுமே குறிக்கப் பயன்பட்டது. அக்கமாதேவியின் வசனங்கள் பட்டறிவின் களஞ்சியம்; உணர்ச்சி வெள்ளம்; கவிதைப் பெட்டகம்; பெண்களுக்கே உரிய வகையில் எளிய சொற்களையும் அழகிய உவமைகளையும் பயன்படுத்தித் தம் கருத்துகளை இவர் வெளிப்படுத்தினார். எளிமையும் தெளிவும் இவர்தம் கருத்துகளில் மிளிர்கின்றன.

சிவனடியாரானப் பின்னணி தொகு

அக்கமாதேவி வடகர்நாடகத்திலுள்ள உடுதடி என்னும் ஊரில் விமலர் என்பவருக்கும் சுமதி என்பவருக்கும் மகளாகப் பிறந்தார். இருவரும் சிவநெறிப்படி மகளை வளர்த்தனர். சிவவழிபாடு இவர் வாழ்க்கை நெறி ஆகியது. சிரீசைலம் என்னும் ஊரைப் பற்றியும் அங்கு உறையும் இறைவன் மல்லிகார்ச்சுனனைப் பற்றியும் கேள்விப்பட்டார். அந்த இறைவனையே தம் கணவனாக வரித்துக்கொண்டார். அந்நாளில் அவ்வூரையாண்ட கெளசிகன் என்ற மன்னன் உலாப் போகும்போது அக்கமாதேவியைக் கண்டு, அவள் அழகில் மயங்கி, மண்ம் செய்துகொள்ள விரும்பினான். அவள் மணத்துக்கு ஒப்புக்கொள்ளாவிடில் பெற்றோர் உயிரிழக்க நேரிடும் என்பதற்காக அக்கமாதேவி அரசனை மணக்க ஒப்புக்கொண்டார். தம் வழிபட்டுக்குத் தடை விதிக்கக் கூடாதென்றும், தடை ஏற்படுமானால் மூன்று முறை பொறுத்துக்கொள்வதாகவும் கூறினார். மணம் நிறைவேறியது. ஆனால் அக்கட்டுப்பாட்டின்படி அவனால் நடக்க முடியவில்லை. எனவே அக்கமாதேவி அரண்மனையை விட்டு வெளியேறினார். கெளசிகன் தொட்ட ஆடைகளையும் களைந்துவிட்டு, கூந்தல் உடலினை மறைக்கக் கலியாண நகரம் சேர்ந்தார். பசவண்ணர் முதலிய வீரசைவ அடியார்கள் அங்கே அனுபவ மண்டபத்தில் கூடியிருந்து தம் இறை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இவரின் அறிவுரைகள் தொகு

"அகந்தை கூடாது; பசிக்கும்போது பிச்சை எடுத்து உண்ண வேண்டும்; ஏரி, குளங்களில் உள்ள நீரைக் குடித்துக் கோயில்களில் படுத்து உறங்க வேண்டும்; மாயை, உலகம் என்ற வடிவத்தில் எல்லோரையும் மயக்குகிறது; இதிலிருந்து விடுபட ஒரு குருவை அணுக வேண்டும்; குருவே உய்யும் நெறி காட்டுவார்." இவ்வாறெல்லாம் தம் வசனங்களில் பாடியிருக்கிறார் அக்கமாதேவி. "சென்ன மல்லிகார்ச்சு" என்பது இவர் தம் வசனங்க்களில் பதித்துக்கொண்ட முத்திரையாகும். வாழ்க்கையின் மறைபொருளை மக்களுக்கு மிகத் தெளிவாக விளக்கினார். வீரசைவ வசன இலக்கியத்தில் 'அக்கா'வின் இடம் இணையற்றதாகும்.

நம்பிக்கைகள் தொகு

 

12ம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னட பெண் கவி இவர் ஒருவரே என நம்பப்படுகின்றார். தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இறைவன் சிவனுக்காக ஈன்ற இவர், சமூகங்களில் நிலவும் போலியான சமயச் சடங்குகளை வெறுத்தார். உலக வாழ்வைத் துறந்த துறவு வாழ்வின் மூலம் கடவுளை அடைய முடியும் என நம்பினார். விலங்குகள், பறவைகள், மலர்கள் போன்றவற்றையே தனது நண்பர்களாக கொண்டார்.

அக்கா மகாதேவி, சிறு வயது முதலே சிவனடியாராக இருந்ததால் கடைசிவரை திருமணம் செய்யவில்லை என நம்பப்படுகின்றது. துறவியாக மாற விரும்பி, அதன் முதல் படியான அம்மண நிலையை ஏற்கக் கலங்கியபொழுது இறைவன் இவரின் உடல் முழுவதும் மயிர்க்கற்றைகள் வளரும் படி செய்து கூச்சத்தைப் போக்கியதாகவும் நம்பப்படுகின்றது.

ஆனால் ஒரு சாரார் அக்கா மகாதேவிக்கு சிறு வயதிலேயே பெற்றோர்களால் திருமணம் நடத்திவைக்கப்பட்டது என கூறுகின்றனர்[4]. இவரது கணவர் பெயர் கவுசிகா எனவும், இவர் ஒரு குறுநில மன்னர் எனவும் கூறப்படுகின்றது. கவுசிகா சமண சமயத்தை பின்பற்றியவர் என்பதனாலேயே அக்கா மகாதேவி இவரிடம் இருந்து பிரிந்து துறவறம் மேற்கொண்டதாக கூறுகின்றனர்.

மறைவு தொகு

அக்கா மகாதேவி இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள சிறிசைலத்தில் இறைப் பேரொளியுடன் கலந்து மகாசமாதியாகிவிட்டதாக நம்பப்படுகின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-05. பார்க்கப்பட்ட நாள் 2009-09-02.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-08. பார்க்கப்பட்ட நாள் 2009-09-02.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-05. பார்க்கப்பட்ட நாள் 2009-09-02.
  4. http://www.vasumathi.net/womencomposers.htm

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கா_மகாதேவி&oldid=3540362" இலிருந்து மீள்விக்கப்பட்டது