அங்கணா மாலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலை

அங்கணா மாலை என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டத்தில், மகாராசகடை என்ற ஊருக்கு அருகே அமைந்துள்ள ஒரு மலையாகும். இம்மலையின் உயரம் 3385 அடி ஆகும். இம்மலையின் மையத்தில் பழைய ஊர் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன.

அங்கணா மாலையில் உள்ள கோட்டை மதில்களின் ஒரு தோற்றம்
அங்கணா மாலை காட்டு வீர ஆஞ்சிநயர்
அங்கணா மாலை வெங்கடரமண சுவாமி கோயில்
அங்கணா மாலை வெங்கடரமண சுவாமி கோயிலில் உள்ள இராமன், இலக்குவன், சீதை, அனுமன் சிலைகள்

பெயர் வரலாறு தொகு

பருகூருக்கு அடுத்த காரகுப்பம் பகுதியில் விஜயநகரப் பேரரசின் ஹரிஹரர் காலத்திய கல்வெட்டு கிடைத்துள்ளது. அந்தக் கல்வெட்டில் அங்கண நாட்டுப் பால சமுத்திரத்தைச் சேர்ந்த மதுகன் என்ற அதிகாரி குறிப்பிடபட்டுள்ளார் இதில் குறிப்பிடப்பட்டுள்ள அங்கண நாடு இந்த மலையையும் இதனருகில் உள்ள மகராஜாகடை உள்ளிட்ட பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது.[1]

கோட்டை தொகு

இந்த மலை மீது விஜயநகர பேரரசின் மன்னர்களால் கட்டப்பட்ட காட்டரண் மிக்க மலைக்கோட்டை உள்ளது. இந்த மலைக்கோட்டையானது இரண்டு அரண்களை உடையது. இம்மலையின் உச்சியில் கோட்டை அரண்களும், இடிபாடுகளுடன் பல கட்டடங்களும், தானியக் களஞ்சியங்களும், சுனைகளும் முகலாயர் பள்ளிவாசலும், சமாதியும் உள்ளன. இந்தக் கோட்டை சிலகாலம் மராட்டியப் பேரரசின் வசம் இருந்ததற்கு ஆடையாளமாக அவர்கள் பயன்படுத்திய மோடி எழுத்தாலான ஒரு கல்வெட்டு உள்ளது.[2] இக்கோட்டை ஐதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருடன் ஆங்கிலேயருக்கு நடைபெற்ற போர்களில் பெரும் பங்கு வகித்தது. கிருட்டிணகிரி, தரும்புரி மாவட்டங்களில் உள்ள பாராமகால் என்றழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளில் இது ஒன்றாகும்.[3]

மலைக் கோட்டை வளாகத்தில் உள்ள களஞ்சியங்களை உள்ளூர் மக்கள் நெய் களஞ்சியம், பால் களஞ்யம் என குறிப்பிடுகின்றனர். மேலும் சிலகட்டிடங்களை ஆட்டு பட்டி, மாட்டு பட்டி என்றும் குறிப்பிடுகின்றனர். மலையின் நடுவே *நீதிமையம்* என்றழைக்கபடும் கட்டடம் உள்ளது. மேலும் மலையில் நான்கு குளங்கள் அமைந்துள்ளன. மலையில் சுரங்கப்பாதை அமைந்தள்ளது. இங்கு எப்பொழுதும் குளிர்ச்சியான காற்று வருகின்றன. இம்மலையில் பாண்டவர் வீடுகள் என்றழைக்கப்படும் தொல்பழங்கால சின்னங்கள் உள்ளன.

மலையின் மேல் உள்ள கோவில்கள் தொகு

இந்த மலையேறும் வழியில் கோட்டைக்கல் பறையின் இடதுபுறமாக சுமார் ஒரு கி.மீ தொலைவில் அங்கால்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலினாலேயே இம்மலை அங்கணா மலை என பெயர் பெற்றது. மலையின் உச்சியில் வெங்கடரமண சுவாமி கோயில் உள்ளது. மலைக் கோட்டை மதிலை ஒட்டி காட்டு வீர ஆஞ்சிநயர் கோயில் அமைந்துள்ளது. இந்த அனுமார் ஓரே கல்லில் சுமார் எட்டடி உயரத்தில் செதுக்கப்பட்டவராக உள்ளார். இந்த கோவிலில் வருடந்தோரூம் ஆடி 18, அனுமன் ஜெயந்தி போன்ற நாட்களில் சிறப்பு பூசைகள் நடைப்பெறுகின்றன. மலையேற்ற பாதையில் நடுமையத்தில் பாறையில் *சாமி பாதம்* அமைந்தள்ளது.  இதை முழங்கால் பாறை என்று உள்ளூர் மக்கள் அழைக்கப்படுகின்றனர்.

பெருங்கற்கால சின்னங்கள் தொகு

மலையின் மேல் உள்ள பூதிகன் மலைக்குன்று, பாண்டவூரார் பாறை-பாண்டவர் பாறை போன்ற இடங்களில் பெருங்கற்கால கறுப்பு, வெள்ளை பாறை ஓவியங்கள் கானப்படுகின்றன. இந்த ஒவியங்களில் வீடு, வேட்டைக்காட்சி, வட்டங்கள், குழு நடனம், மனிதர் மற்றும் விலங்குகளின் கை அச்சு போன்ற சித்தரிப்புகள் உள்ளன.

இங்குள்ள பூதிகன் மலைக்குன்றில் மேல் உள்ள பாண்டுவுரார் பாறை என்னும் இடத்தில் பெருங்கற்காலக் கற்பதுக்கைகள்  கண்டுபிடிக்கப்பட்டன. இக்கிராமத்தில் இருந்து கற்பதுக்கை உள்ள இடத்துக்குச் செல்ல சுமார் 3.5 கி.மீ வனப்பகுதிக்குள் பயணிக்க வேண்டும். பெரும்பாலான கற்திட்டைகள் மனித மற்றும் இயற்கையின் பேரழிவுக்கு உட்படாமல் நல்ல நிலையிலே உள்ளன. இங்கு மூன்று விதமான கற்பதுக்கைகள் காணப்படுகின்றன.  பெரும்பாலான கற்திட்டைகளில் கிழக்கு பக்கத்தில் இருக்கும் கல்லில் மட்டும் ஓட்டை போட்டுள்ளனர். மேலும் கற்திட்டைகளைச் சுற்றி ஒன்று அல்லது இரண்டு கல் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஓவியங்கள் இங்குள்ள கற்பதுக்கைகளின் உட்புறத்தில் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன.

அதே போல பல இடங்களில் பழைய ஓவியங்கள் மீது தற்கால ஓவியங்களும், கிறுக்கல்களும் அதிகம் காணப்படுகின்றன.  அகையால் சில பழைய ஓவியங்களை அடையாளப்படுத்துவதில் சிரமம் இருக்கின்றது. பெரும்பாலான ஓவியங்களில் விலங்குகளோடு மனித உருவம் சேர்ந்து காட்டப்பட்டுள்ளது. அதுபோல கற்திட்டையின் இடு துளைக்கு எதிர் புறம் உள்ள மேற்கு பக்கத்தில் உள்ள சுவர்களிலே மட்டுமே ஓவியங்கள் அதிகம் வரையப்பட்டுள்ளது. மேலும், கற்திட்டைகளில் விலங்குகளை வேட்டையாடுதல், மதம் பிடித்த வன விலங்குகளை அடக்குதல், வில், அம்பு மற்றும் வாளுடன் மனித உருவங்கள், நடனக் காட்சிகள், மற்றும் குறியீடுகள் போன்றவை வரைந்திருப்பது  குறிப்பிடத்தக்கவைகளாகும். மற்றொரு கற்திட்டையில், வீடு, வேட்டைக்காட்சி, வட்டங்கள், குழு நடனம், மனிதர் மற்றும் விலங்குகளின் கை அச்சு உள்ளன. விலங்குகளை போக்குவரத்துக்கும், வேட்டைக்கும் பயன்படுத்தியது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் மனித உருவங்கள் ஆயுதங்களுடனும், ஆயுதமற்றும், விலங்கு மீது அமர்ந்த படியும், நேருக்கு நேர் சண்டை புரிவது என காணக்கிடைக்கின்றது. வட்டமானது சூரியனை குறிக்கும் விதமாக உள்ளது. கதவு மற்றும் சுவர்களில் கை அச்சு பதிக்கும் வழக்கம் தொன்று தொட்டு இன்றும் தமிழக கிராமப்பகுதிகளில் இருந்து வருவதேயாகும். அவ்வழக்கம் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இருந்துள்ளதை இவ்வோவியங்கள் மூலம் அறிய முடிகிறது.  மற்றொரு கற்திட்டையில், குழுவாக கூடியுள்ள மனிதர்கள், கேடயத்துடன் உள்ள வீரன், சூரியன், மரம் மற்றும் விலங்கு உருவங்கள் , வேட்டைக்காட்சிகள், நடனம் போன்றவை காட்டப்பட்டுள்ளன.

இதையும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 120. 
  2. தா. பார்த்திபன், தொல்லியல் சிறப்புக் கட்டுரை: காவேரிபட்டிணம் நாட்டியத் தாரகை சதிக்கல் 15 ஆகத்து 2018
  3. தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 308
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கணா_மாலை&oldid=3753374" இலிருந்து மீள்விக்கப்பட்டது