அரசியல் கருத்துக்கள்-கிரேக்கம்

கிரேக்க அரசியற் கருத்துருக்கள்

அரசியல் கருத்துக்கள், கிரேக்கம் அல்லது கிரேக்க அரசியற் கருத்துருக்கள் (Political thoughts of Greek) முற்காலத்திலேயே கிரேக்கர்கள், அரசியல் கருத்துகளைக் கையாண்டனர்.[1] சிறு நகர ஆட்சிப் பகுதிகளில் வசித்து வந்தனர். அவர்களுடைய அரசியல் மலர்ச்சியானது, ஓமருடைய பெருங்காப்பியக் காலங்களில் தோன்றியதாகக் கொள்ளலாம். நாளடைவில், அங்கிருந்த முடியாட்சிகள் மறைந்து, ஆலி கார்க்கி என்னும் 'சிலராட்சி' தோன்றி, பொதுமக்களைப் பகைத்துக் கொண்டன. கி.மு. 7ஆம், 6ஆம் நூற்றாண்டுகளில் பொதுமக்களின் சார்பாகச் சிலர் கிளம்பிச் 'சிலராட்சிக்'காரர்களை நீக்கிவிட்டு, தாங்களே அதிகாரத்தைக் கைப்பற்றினர். இவர்களை 'நாட்டின் அபகாரிகள் ' (Tyrants)[2] என்பர். இவர்களில் சிலர் நல்ல முறையில் ஆட்சி புரிந்தனராயினும், படைப் பலத்தையே நம்பி ஆண்டு வந்ததால், இவர்களும் மக்களுடைய வெறுப்பிற்கு ஆளாயினர். பிறகு வந்த ஆட்சி, கிரேக்க மக்களாட்சி ஆகும். அதில் கி. மு. 5ஆம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்த, பெரிக்னீசின் நிருவாகம் மிக்க புகழ்பெற்றது.[3] கிரீசின் தென் பகுதியில், இருந்த சுபார்ட்டர்கள் தமக்கு ஒருவகைக் கம்யூனிசச் சமத்துவத்தையும், அச்சமூகத்திலிருந்த தாழ்த்தப்பட்டோரிடம் அடக்குமுறையையும் கையாண்ட, இருவகைப் போக்குக்கள் காணப்பட்டன.[4]

பெரிக்னீசின்(Pericles) நிருவாகத்துறை மிகவும் புகழ் பெற்றது

பொதுவான கருத்துருக்கள் தொகு

கிரேக்க அரசியல் அறிஞர்களுடைய பொதுவான கருத்துக்கள் நிலவின. அவை யாதெனில்,

  1. மனிதனுடைய வாழ்க்கை இயற்கைக்கும், அறிவுக்கும் பொருத்தமானதாக இருக்க வேண்டும்
  2. எல்லா மனிதருக்கும் அறிவு உண்டாகையால், அறிவுக்குட்பட்ட மிக உயர்ந்த முறையில் வாழ்க்கை அமைய வேண்டும்
  3. இல்வாழ்க்கை சாத்தியமாவதற்கு மனிதர்கள், ஒன்றாக வாழ்ந்து ஒன்றாகப் பொது அலுவல்களில் ஈடுபடவேண்டும்
  4. ஆதலால், தனி மனிதனின் நலங்கள் நாட்டோடு இணைந்து நிற்கின்றன
  5. இவ்விணைப்பு இயலுமாறு, தனி மனிதர்கள் தங்கள் தனித்துவத்தை நாட்டின் தன்மைக்குக் கீழ்படித்திக்கொள்ள வேண்டும்.

இவ்வித ஒன்றிணைவு, முற்காலத்தில் கிரீசில் இருந்த நகர ஆட்சிகளில் தான் இயலும்; அந்நகர ஆட்சிகளின் அரசாங்கத்தில் மகளிரும், அடிமைகளும் நீங்கலாக, ஏனைய குடிமக்கள் யாவரும் கலந்து கொள்ள முடியும். இவ்வித ஆட்சியை, நேர்முக மக்களாட்சி என்று கூறுகிறார்கள்.[5] கிரேக்கர்களுடைய கருத்துப்படி, தனி மனிதர்கள் மீது, நாட்டின் ஆட்சி அதிகாரம் செலுத்தக்கூடிய ஆதிக்கத்திற்கு அளவில்லை. அக்கால அரசாங்கங்களுடைய அலுவல், சட்டத்தை அமல் செய்வதேயன்றி, தற்கால நாடுகளைப் போலச் சட்ட ஆட்சி அன்று.

தனிக் கருத்துருக்கள் தொகு

சோபிசுடு: கி. மு. 5 ஆம் நூற்றாண்டில் பொதுமக்களின் உள்ளக் கிளர்ச்சியைத் தூண்டி, தங்கள் விருப்பம்போல் அரசியலில் ஆதிக்கம்பெறச் சில தலைவர்கள் தோன்றினார்கள். தனி மனிதர்கள் தங்கள் நலங்களைத் தாங்களே ஆராய்ந்து அறியவேண்டும் என்றும், இயல்பில் மனிதன் சுயநலமுடையவன், நாட்டின் சட்டங்கள், மனிதனுடைய அறிவின் போக்கிற்கு முரணாகக் கூடும். ஆயினும், அறிவே உண்மைக்கு வழிகாட்டி என்றும், இவர்கள் கூறினர். இவர்கள் சோபிசுடுகள் (Sophists) என்றழைக்கப்பட்டனர்.[6]

சாக்ரட்டீசு: சோபிசுடுக் கொள்கைகளைப் பின்பற்றியவர், அறிஞர் சாக்ரட்டீசு (கி. மு. 469-399) என்பவர். ஐயம், வினா, விடை, அறிவுரை என்னும் முறையைப் பின்பற்றி, அதீனிய இளைஞர்கட்கு, அறிவு புகட்டி வந்த சாக்ரட்டீசு, அரசியல் கருத்துக்களுக்கு அற அடிப்படை ஒன்றைக் கற்பித்தார். மக்களாட்சி, மக்களிடையே பொய்ம்மையான சமத்துவத்தையே நாட்டுகின்றது; திருவுளச்சீட்டு முறையில் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பது நல்ல முறையன்று; திறமைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் நாட்டின் நிருவாகம் நடத்தப்பெறுவதே நல்லது என்பவை அவருடைய கருத்துக்கள் ஆகும்.

டயஜினசு என்பவரைப் போன்ற சினிக்குகள் (Cynics), வாழ்க்கையின் மேற்போக்குக்களையும் அரசியல் பிணக்குக்களையும் மறக்கவேண்டும்" என்றனர். டயஜினஸ் தம்மை, ' உலகக்குடி' என்று கூறிக் கொண்டார்.

பிளேட்டோ :சாக்ரட்டீசின் மாணவரான பிளேட்டோ (கி. மு. 427-347) பொதுவாகச் சாக்ரட்டீசைப் பின்பற்றுபவராயினும், மிகுந்த திறமைசாலிகளே உண்மையை யறிய முடியும் என்று கருதினார். அவருடைய குடியரசு என்னும் நூலில் மிகுந்த அறிவும் திறமையும் படைத்த தத்துவ அறிஞர்கள் அரசாங்கத்தை நடத்துபவர்களாயிருக்கவேண்டும் என்றார். அறிவின் எல்லையைக் கண்ட, அவ்வறிஞர்களே அரசியலறிஞர்களாகவும் இருத்தல் வேண்டும் என்றார். மக்கள் ஆட்சி என்பது பாமரர் ஆட்சி என்று பிளேட்டோ கருதினார். சிலராட்சியும், நாட்டின் அபகாரிகளின் ஆட்சியும்கூட நேர்முறைக்குப் புறம்பானவை என்பது அவர் கருத்து. அவர் பிற்காலத்தில் இயற்றிய பிற நூல்களில் குடியாட்சி, பிரபுக்களாட்சி, மித ஜனநாயகம் ஆகிய ஆட்சிமுறைகளை ஓரளவு அங்கீகரித்தார். நேர்முக மக்களாட்சி அவரால் ஒதுக்கப்பட்டது. நாட்டின் அடிப்படை நீதியாதல் வேண்டும் என்பதே பிளேட்டோவின் முக்கியமான கருத்து ஆகும்.[7]

அரிஸ்டாட்டில் தொகு

பிளேட்டோவின் மாணவரான அரிசுடாட்டில் (கி. மு. 384-322) ஆசிரியரைப் போல இலட்சியவாதியல்லர். அரசியல் கட்டமைப்புகளின் வளர்ச்சியையே, அவர் முக்கியமாகக் கருதினார்; அரசியல் அமைப்புக்களின் ஒப்பு-ஆராய்ச்சி வேண்டும் என்றார். அவருடைய அரசியல் என்னும் நூல் இம்முறையையே கூறுகிறது. சமுதாயம் என்பது குடும்பம், கூட்டம் என வளர்ந்து வரும் ஒரு நிறுவனம் ; மனிதன் சமூகமாகக் கூடி வாழ்பவன்; தனி மனிதன் தன்னுடைய விருப்பங்களையும் இலட்சியங்களையும் எய்தி, நல்வாழ்வை அடைவதற்கு உதவ வேண்டியதே நாட்டின் ஆட்சிக் கடமை ; அந்நல்வாழ்க்கையை அடைய மனிதர்கள் கல்வி பயின்றிருக்க வேண்டும்; அதற்குப் போதிய ஒழிவு வேண்டும்; அடிமைகள் ஏனைய அலுவல்களைக் கவனித்தால் குடிகளுக்கு ஒழிவு கிடைக்கும்; ஆகவே அடிமைகள் என்போர் இருக்கவேண்டும் என்பவை அவருடைய கருத்துக்கள் ஆகும். அவர் அரசாங்க அமைப்புச் சமநிலையுடையதாயும், புரட்சிக்கு இடம் கொடாததாயும் இருக்கவேண்டும் என்று கருதினார். இவருடைய கருத்துக்களின் பெருமையால், இவரை 'அரசியல் நூலின் தந்தை' என்றனர்.[8]

எபிக்யூரசு தொகு

இவர் (கி. மு. 312-270) என்பவர்[9] அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் எந்த ஆட்சியையும் ஏற்றுக்கொள்ளலாம் என்றும், திறமை வாய்ந்த யதேச்சாதிகாரமும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே என்றும் கூறினார். அறிஞர்கள் அரசியலில் தலையிடக் கூடாதென்றும், அநீதியைத் தடுப்பதற்கு மக்கள் தமக்குள்ளே செய்து கொள்ளும் ஏற்பாடு சட்டம் என்றும் அவர் கூறினார். அவர் தத்தம் தேவைகளை, ஒவ்வொருவரும் நிறைவேற்றிக் கொள்ள முயலவேண்டும் என்றார். எபிக்யூரியர்களுக்குப் பிறகு வந்தவர்கள், சுடோயிக்குகள்[10] ஆவர். சீனோ (சு. கி.மு. 336-சு. 264) என்பவர் இவர்களின் தலைவர். எல்லா மனிதர்களையும், எல்லாக் காலத்திலும் உட்படுத்தும், இயற்கைச் சட்டம் ஒன்று உண்டு என்பது அவர் கருத்து. பின்னர், இத்தகைய அரசியற் கருத்துக்கள், ரோமானிய அறிஞர்களிடையே பரவலாயின.

மேற்கோள்கள் தொகு

  1. http://www.yourarticlelibrary.com/political-science/an-introduction-to-ancient-greek-political-thought/40139
  2. https://www.britannica.com/topic/tyrant
  3. https://www.ancient.eu/pericles/
  4. https://getrevising.co.uk/grids/the-merits-and-demerits-of-spartan-society
  5. https://www.enotes.com/homework-help/how-did-greeks-contribute-democracy-359855
  6. https://www.iep.utm.edu/sophists/
  7. "Plato: The Failure of Democracy". Archived from the original on 2019-12-30. பார்க்கப்பட்ட நாள் 2020-01-08.
  8. https://www.scholarshipsads.com/aristotle-as-father-of-political-science/
  9. https://www.britannica.com/biography/Epicurus
  10. https://plato.stanford.edu/entries/stoicism/