ஆட்டைப் பெரிய திருவிழா

ஆட்டைப் பெரிய திருவிழா சோழ அரசர்களால் கொண்டாடப்பட்ட ஒரு திருவிழா. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இத்திருவிழா கொடியேற்றத்துடன் 10 நாட்கள் நடைபெற்று வந்தது. ஆட்டை என்பது ஆண்டு என்று பொருள்[1]

சோழ அரசர்கள் தம்மிடையே பலவிதமான நிபுணத்துவம் வாய்ந்த குழுக்களை வைத்து தம் அரசவையையும், மக்களையும் நேர்த்தியான முறையில் ஆண்டு வந்தனர். சோழ அரசர்களின் மிக வலிமையான நினைவுச் சின்னமாக இன்றும் கெம்பீரமாக விளங்கி வருவது இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட"தஞ்சைப் பெரிய கோயில்" ஆகும்.

நிபுணர் குழு தொகு

மன்னன் இராஜராஜன் தம் நிபுணர் குழுவாக பெருந்தச்சர், பெருங்கணி, கடிகையர் மற்றும் சிவயோகியர் ஆகியோர் பொறுப்பில் பிடாரர் தளிகைப் பெண்டுகள், உடுக்கை வாசிப்பான், முத்திரைச் சங்கு ஊதுவான், சகடை கொட்டுவான் இவர்களோடு கோல் இனமை செய்வான் ஒருவரும் இருந்தார்.

வழிபாட்டுக் கொள்கை தொகு

கோல் இனமை செய்யும் இவரின் வழிகாட்டுதலில் ஒவ்வொரு நாளும் வளிமண்டல நாள் சூழ் திறம் அன்றைய நாளின் நட்சத்திரப் பண்பிற்கேற்ப கரண முயற்சிகளால் திருத்தமாடப் பெற்றது. இதுவே தஞ்சைப் பெரிய கோயிலின் முதன்மையான வழிபாட்டுக் கொள்கை ஆகும்.

இராஜராஜனின் தனிச்சிறப்பு தொகு

போர் வெற்றிகளால் பிறநாட்டுக் கருவூலங்களைக் கொள்ளை கொண்டு தனது அரச வலிமையை ஊக்கப்படுத்திக் கொண்ட மன்னன், தமிழர் மரபின் பல அறிவுத்துறைகளை அவ்வவற்றின் படைத் தகமை வழிநின்று மீட்டெடுத்தான். அந்தந்தத் துறை சார்ந்த பல வல்லுநர் குழுக்களின் நம்பிக்கையைப் பெற்றான். வல்லுநர்களின் கொள்கை முடிவுகளில் மன்னன் தலையிட்டதே இல்லை.

குஞ்சரமல்லன் உள்ளிட்ட மூவர் குழுவினரிடம் கோயிலின் கட்டுமான வடிவமைப்புப் பொறுப்பை ஒப்படைத்ததோடு அவர்களின் குடிவழியினரும் தொடர்ந்து ஊதியம் பெற்றுப் பணியாற்றக் காணிகளை நிவந்தங்களாக ஏற்படுத்தினான்.

தஞ்சைப் பெரிய கோயிலின் வடிவமைப்புக் கொள்கை தொகு

பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம் என்று கருவூரார் தனது திருவிசைப் பாவில் குறிப்பிடும் கருங்கல் கட்டுமானம், அதன் முன்புறம் ஒரு நாடக சாலை, திருமுற்றம் திருவாசல் என்ற நேர்கிழக்கு அச்சுக்கோட்டு அமைப்பில் இராஜராஜன் திருவாசலும் கேரளாந்தக வாசலும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய அளவுகளால் திட்டமிடப்பட்டிருக்கின்றன. உயரம், கால்புறவாய், பத்தி, சுவர்க் கால்கள் திண்ணை வரியின் உயரம் ஆகியவை ஒன்றன் நிழல் மற்றதனைச் சுட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. சிறிய கோபுரத்தின் நடுக் கலசத்தின் நிழல் பெரிய கோபுரத்தின் சுவர்க்கால்களில் ஏறி மறைவது உற்று நோக்கத்தக்கது. நிழலின் வழியே வடசெலவு தென்செலவுத் திருப்பத்தின் எல்லையினை வரைவு செய்து ‘கிட்டிக்கல்’ அமைத்திருப்பதான நுட்பம் மேலாய்வுக்கு உரியது.

இரண்டு கோபுரங்களுக்கும் இடையில் ஒரு நிழல் காண் மண்டியம் அமைக்கப்பட்டு அதன் அருகில் இருந்தே ஆட்டைப் பெரிய திருவிழா அறிவிப்புச் செய்யப்பட்டிருப்பதாகக் கருத இடம் இருக்கிறது.

ஆட்டைப் பெரிய திருவிழாவின் முதல் மூன்று நாட்கள் ‘திருப்பறையளவு’ செய்யப்பட்டிருக்கிறது. இது புத்தாண்டு அறிவிப்பேயன்றி வேறில்லை என்று கருதலாம்.[சான்று தேவை]

மன்னன் இராஜராஜன் தனது மெய்கீர்த்தியில் குறிப்பிடும் ‘அகவிளங்கும் யாண்டு’ பற்றிய வெற்றிச் செய்தியினை யாரும் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று பெருமையுடன் குறிப்பிடவே மன்னனின் பெருந்தச்சுக் குழுவினர் இத்தகு கட்டுமான வடிவமைப்பைத் திட்டமிட்டு உருவாக்கினரோ என்று ஐயப்படவைக்கிறது.

ஆட்டைப் பெரிய திருவிழா அறிவிப்பு தொகு

பெருந்தச்சுக் குழுவினரைப் போல ‘கடிகையார்’ என்றொரு குழுவினரை ஏற்படுத்தி ‘ஆட்டைப் பெரிய திருவிழா’வை உரிய நாளில் அறிவிப்பு செய்யும் பொறுப்பையும் ஒப்படைத்தான் என்று தெரிகிறது. ஆட்டைப் பெரிய திருவிழாவின் முதல் மூன்று நாட்கள் ‘திருப்பறையறைவு’ செய்யப்பட்டது என்றும் அதனைத் தொடர்ந்து ‘9’ நாட்கள் திருமேனி எழுந்தருளுநாள் விழாக்கள் கடைப்பிடிக்கப்பட்டன என்று தெரிகிறது.

ஆட்டைப் பெரிய திருவிழாவும் தமிழ் புத்தாண்டும் தொகு

தமிழ்ப் புத்தாண்டு எது?.. சித்திரை முதல் தேதியா, தை முதல் தேதியா என்ற சர்ச்சை ‘ஆட்சிக்கு ஆட்சி’ மாறிமாறி எழுந்துவரும் நிலையில், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் புதுத் தகவல் ஒன்று கூறுகின்றனர். இதுகுறித்து தமிழ் அறிஞரும் ஆய்வாளருமான தென்னன் மெய்ம்மன் கூறியது [2]

சோழர் காலத்தில் பழந்தமிழர்கள் சூரியனை வழிபட்டு, அதன் அடிப்படையிலான நாட்காட்டியைப் பின்பற்றினர். அதன் அடிப்படையில் இன்று (5.1.2014) தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. சூரியன் நகருவதால் ஏற்படும் நிழலை அங்குலம் அங்குலமாக கணக்கிட்டே சோழர்கள் நாட்காட்டியை நிர்ணயித்தார்கள். சூரியன் வடக்கில் ஆறு மாத காலமும் தெற்கில் ஆறு மாத காலமும் வலசை செல்லும் தன்மை கொண்டது. தமிழ் இலக்கியங்கள் இதை வட செலவு, தென் செலவு என்று குறிப்பிடுகின்றன.

அதன்படி மார்கழி மாதத்தின் அமாவாசை (ஜனவரி 1-ம் தேதி) முடிந்த மூன்றாம் நாள் (ஜனவரி 4-ம் தேதி) மாலை பிறை தெரியும். அதற்கு மறுநாள்தான் (ஜனவரி 5-ம் தேதி) தை முதல் நாள். ராஜராஜ சோழன் சதயம் தொடங்கி பூசம் வரை 12 நாட்கள் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடினான்.[சான்று தேவை]

12-ம் நாள் முழு நிலவுடன் தைப்பூசத் திருவிழா நிறைவுறும். அதன் பெயர் ‘ஆட்டைத் திருவிழா’. இதற்கான ஆதாரங்கள் தஞ்சாவூர் பெரிய கோயில் ராஜராஜன் திருவாசல் கல்வெட்டிலேயே இருக்கின்றன.[சான்று தேவை] அதன் அடிப்படையில் 04.01.2014 மாலை பிறை தெரிந்த நிலையில், ஜனவரி 5-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. அன்றும் இன்றும் என்றென்றும் திருச்சதய விழா, வரலாறு.கொம்
  2. [1], பிறை தெரிந்துவிட்டது... இன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு, தி இந்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்டைப்_பெரிய_திருவிழா&oldid=3597691" இலிருந்து மீள்விக்கப்பட்டது