உலக இளையோர் நாள் 2016

உலக இளையோர் நாள் 2016 என்பது கத்தோலிக்க திருச்சபை இளையோரை மையப்படுத்தி 2016ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் உலக அளவில் கொண்டாடுகின்ற ஒரு சமய நிகழ்ச்சி ஆகும். ஒரு வாரம் நீடிக்கின்ற இந்த சமய நிகழ்ச்சி போலந்து நாட்டின் கிராக்கோவ் நகரில் நிகழும் என்று பிரேசிலின் ரியோ டி ஜனேரோ நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாள் 2013-ன் போது திருத்தந்தை பிரான்சிசு 2013, சூன் 28ஆம் நாள் அறிவித்தார்.

XXIX உலக இளையோர் நாள்
நாள்25 - 31 ஜூலை 2016
இடம்கிராக்கோவ், போலந்து
கருப்பொருள்"இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்." (மத் 5:8)

திருத்தந்தை வழங்கிய அறிவிப்பு தொகு

 
திருத்தந்தை போலந்தில் உலக இளையோர் நாள் 2016 நடக்கும் என அறிவித்த போது போலந்து நாட்டுத் திருப்பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்த காட்சி

ரியோ டி ஜனேரோவில் நிகழ்ந்த உலக இளையோர் நாள் 2013 கொண்டாட்டத்தின் இறுதி நாளாகிய 2013, சூன் 28ஆம் நாள் சுமார் 3 மில்லியன் மக்கள் பங்கேற்புடன் நடந்த திருப்பலியின்போது திருத்தந்தை இந்த அறிவிப்பை வழங்கினார். இச்செய்தியைக் கேட்டதும், கூட்டத்திற்கு வந்திருந்த போலந்து நாட்டுத் திருப்பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

கிராக்கோவ் பேராயர் அறிக்கை தொகு

அடுத்த உலக இளையோர் நாள் கொண்டாட்டம் போலந்தின் கிராக்கோவ் நகரில் நிகழும் என்ற அறிவிப்பைக் கேட்டதும் கிராக்கோவ் மறைமாவட்டப் பேராயர் கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ஜீவிஸ் en:Stanislaw Dziwisz "அடுத்த உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தை கிராக்கோவில் நடத்துவது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது எங்களுக்கு அளிக்கப்பட்ட பெரும் மரியாதையும் பொறுப்பும் ஆகும்" என்று கூறினார்.

மேலும், போலந்து நாட்டில் கிறித்தவம் அறிமுகம் ஆன 1050ஆம் ஆண்டாகிய 2016இல் இளையோர் கொண்டாட்டம் நிகழப்போவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் தொடங்கிய நிகழ்ச்சி தொகு

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலில் பிறப்பு நாடாகிய போலந்தில், அதுவும் அவர் பேராயராகப் பணிபுரிந்த கிராக்கோவ் மறைமாவட்டத்தில் உலக இளையோர் நாள் 2016 நிகழவிருப்பதும், அத்திருத்தந்தையின் செயலராகப் பணியாற்றிய கர்தினால் ஜீவிஸ் தற்போது கிராக்கோவில் பேராயராகப் பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்கன.

உலக இளையோர் நாள் என்னும் கொண்டாட்டத்தை கத்தோலிக்க திருச்சபையின் முக்கியதொரு நிகழ்ச்சியாக 1984இல் தொடங்கிவைத்தவர் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்தான். போலந்து நாட்டில் முதன்முறையாக உலக இளையோர் நாள் 1991ஆம் ஆண்டு செஸ்டகோவா en:Czestochcowa நகரில் நிகழ்ந்தது. அதில் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பங்கேற்றார்.

உலக இளையோர் நாள் 2016: நிகழ்ச்சி நிரல் தொகு

உலக இளையோர் நாள் 2016 – நிகழ்ச்சிகள் கீழ்வருமாறு:[1]

  • செவ்வாய், சூலை 26, 2016

தொடக்கத் திருப்பலி: கிராக்கோவ் நகர் கர்தினால் தனிசுலாவு சீவிசு (Stanisław Dziwisz) தலைமை தாங்குகிறார். திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுலுக்கு இவர் பல்லாண்டுகள் செயலராகப் பணிபுரிந்தவர்.

  • புதன், சூலை 27, 2016

திருத்தந்தை பிரான்சிசு கிராக்கோவ் நகரின் “இரண்டாம் யோவான் பவுல் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வந்து சேர்கிறார். திருத்தந்தை பிரான்சிசுக்கு வாவெல் அரசு கோட்டையில் வரவேற்பு நிகழ்கிறது. திருத்தந்தை பிரான்சிசு, போலந்து நாட்டு அதிபரை சந்திக்கிறார். திருத்தந்தை பிரான்சிசு, போலந்து நாட்டு ஆயர்களை சந்தித்து உரையாற்றுகிறார். புனித தனிசுலாசு கல்லறையில் அமைதி மன்றாட்டு நிகழ்கிறது. இங்கு, புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலின் மீபொருள்கள் வணக்கத்துக்கு வைக்கப்பட்டுள்ளன. சிற்றாலயத்தில் நற்கருணைக்கு வழிபாடு நிகழ்கிறது. இரவு உணவுக்குப் பின் திருத்தந்தை, கிராக்கோவ் ஆயர் இல்லத்தின் முகப்பிலிருந்து பொதுமக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றார்.

  • வியாழன், சூலை 28, 2016

திருத்தந்தை பிரான்சிசு, பாலிசு நகருக்குச் செல்கையில் காணிக்கை அன்னை சபை சகோதரிகள் இல்லத்தில் சிறிதுநேரம் செலவிடுகிறார். திருத்தந்தை பிரான்சிசு, போலந்து நாட்டில் புகழ்பெற்ற செசுட்டகோவா (Częstochowa) நகர் சென்று, அங்குள்ள யசுன கோரா துறவற இல்லம் செல்கிறார். அங்குதான் “கருப்பு அன்னை மரியா” (Black Madonna) என்று அழைக்கப்படுகின்ற மரியா திருவோவியம் உள்ளது. போலந்து நாடு கிறித்தவ சமயத்தைத் தழுவி 1050 ஆண்டுகள் நிறைவின் தருணத்தைக் கொண்டாடும் வகையில் திருத்தந்தை பிரான்சிசு திருப்பலி நிறைவேற்றுகிறார். கிராக்கோவ் நகரின் திறவுகோல்கள் திருத்தந்தை பிரான்சிசுக்கு அளிக்கப்படுகின்றன. திருத்தந்தை பிரான்சிசு, புவோனியா பூங்காவுக்கு சாலைத் தொடருந்தில் (tram) செல்கிறார். அங்கு உலக இளையோர் நாள் வரவேற்பு நிகழ்கிறது.

  • வெள்ளி, சூலை 29, 2016

திருத்தந்தை பிரான்சிசு, போலந்து நாட்டில் அமைந்துள்ள நாசி அவுஷ்விட்ஸ் வதை முகாமுக்கு வருகை தருகிறார். பின்னர் பிர்க்கனாவு வதைமுகாம் செல்கிறார். திருத்தந்தை பிரான்சிசு, குழந்தைகள் மருத்துவ இல்லம் செல்கிறார். புவோனியா பூங்காவில் (Błonia Park) திருத்தந்தை பிரான்சிசு, இளையோரோடு சேர்ந்து சிலுவைப் பாதை வழிபாடு நிகழ்த்துகிறார். இரவு உணவுக்குப் பின் திருத்தந்தை, கிராக்கோவ் ஆயர் இல்லத்தின் முகப்பிலிருந்து பொதுமக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றார்.

  • சனி, சூலை 30, 2016

திருத்தந்தை பிரான்சிசு, புனித மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்காவின் சிற்றாலயம் செல்கிறார். திருத்தந்தை ஊர்தியில் திருத்தந்தை பிரான்சிசு இறையிரக்கத்தின் சிற்றாலயம் செல்கிறார். திருத்தந்தை பிரான்சிசு, திருக்கதவு வழியாக நுழைகின்றார். இளையோர் ஒப்புரவு வழிபாடு நிகழ்கிறது. திருத்தந்தை பிரான்சிசு ஐந்து இளையோருக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்குகிறார். திருத்தந்தை பிரான்சிசு, குருக்களோடும், துறவியரோடும், குருமாணவரோடும் சேர்ந்து புனித இரண்டாம் யோவான் பவுல் திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார். திருத்தந்தை பிரான்சிசு, கிராக்கோவ் பேராயரோடும் பன்னிரு இளையோரும் நண்பகல் உணவு அருந்துகிறார். திருத்தந்தை பிரான்சிசு இளையோரோடு சேர்ந்து திருவிழிப்பு வழிபாடு நிகழ்த்துகிறார்.

  • ஞாயிறு, சூலை 31, 2016

திருத்தந்தை பிரான்சிசு, நற்பணிக் கட்டடங்களை அர்ச்சிக்கிறார். திருத்தந்தை பிரான்சிசு, உலக இளையோர் நாளின் இறுதி திருப்பலி நிறைவேற்றுகிறார். அடுத்த இளையோர் நாள் எந்த ஆண்டில் எந்த நகரில் நடைபெறும் என்ற அறிவிப்பு வழங்கப்படுதல். திருத்தந்தை பிரான்சிசு, உலக இளையோர் நாள் தன்னார்வப் பணியாளரை சந்திக்கிறா. திருத்தந்தை பிரான்சிசு, கிராக்கோவ்-பாலிசு வானூர்தி நிலையம் செல்கிறார். பிரியாவிடை நிகழ்ச்சி.

  • பிற நிகழ்ச்சிகள்:

திருத்தந்தை பிரான்சிசு கலந்துகொள்கின்ற நிகழ்ச்சிகள் தவிர வேறு பல நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. குறிப்பாக, மறைக்கல்வி வகுப்பு நிகழ்ச்சிகள், இளையோர் விழாக் கொண்டாட்டம், இறை அழைத்தல் மற்றும் பல்கலைக் கழக பரப்புரைகள், நூல் வெளியீட்டுக் காட்சியமைப்புகள், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நிகழ்கின்றன.

ஆதாரம் தொகு

கிராக்கோவில் உலக இளையோர் நாள் 2016 பரணிடப்பட்டது 2013-08-01 at the வந்தவழி இயந்திரம்

  1. கிராக்கோவில் உலக இளையோர் நாள் 2016 - நிகழ்ச்சிகள்[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_இளையோர்_நாள்_2016&oldid=3235597" இலிருந்து மீள்விக்கப்பட்டது