ஆன்றி முவாசான்

பிரான்சு வேதியியலாளர்
(என்றி முவாசான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெர்டினாண்டு பிரடரிக் ஆன்றி முவாசான் (Ferdinand Frederick Henri Moissan) (செப்டம்பர் 28, 1852 - பெப்ரவரி 20, 1907) பிரான்சு நாட்டைச் சேர்ந்த வேதியியல் அறிஞர்[1]. இவர் புளோரின் வளிமத்தைப் பிற சேர்மங்களில் இருந்து பகுத்து பிரித்தெடுத்துக் கண்டுபிடித்தார். இதற்காக இவருக்கு 1906 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது[2].

என்றி மோய்சான்
பிறப்பு(1852-09-28)செப்டம்பர் 28, 1852
பாரிசு, பிரான்சு
இறப்புபெப்ரவரி 20, 1907(1907-02-20) (அகவை 54)
பாரிசு, பிரான்சு
தேசியம்பிரான்சு
துறைவேதியியல்
பணியிடங்கள்ஃசோர்போன் (Sorbonne)
கல்வி கற்ற இடங்கள்மொ கல்லூரி (Collège de Meaux)
உயர்கல்விக்கான பயிற்சிப்பள்ளி (École Pratique des Haute Études)
ஆய்வு நெறியாளர்பியர் பால் டெஃகிரெயின்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
பால் லெபி
மௌரிசு மெசிலேன்சு
அறியப்படுவதுஃவுளூரினை பிரித்தெடுத்து உறுதிசெய்தது
விருதுகள்வேதியியலுக்கான நோபல் பரிசு (1906)

வாழ்க்கை தொகு

முவாசானின் குடும்பத்தினர், பிரான்சில் தூலூசு (Toulouse) என்னும் இடத்தில் இருந்து பாரிசுக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு இவர் செப்டம்பர் 28, 1852 இல், கிழக்குத் தொடர்வண்டித் துறையில் (இரயில்வே) பணிபுரிந்த பொறுப்பாளர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார். 1864 இல் மொ (Meaux) என்னும் ஊருக்கு இடம்பெயர்ந்து சென்று, அங்குப் பள்ளியில் கல்வி பெற்றார். ஆனால் பல்கலைக்கழகத்தில் சேர அனுமதி பெறும் தகுதிச் சான்றிதழ் ("grade universitaire" ) பெறாமலே பள்ளியில் இருந்து சென்றுவிட்டார். பின்னர் பாரிசில் ஒரு வேதியியலாளராகப் பணிபுரியத்தொடங்கினார். அங்கு ஆர்சனிக்கு (arsenic) கலந்ததைக் குடித்து உயிர்போகும் நிலையில் இருந்த ஒருவரைக் காப்பாற்றினார். அதன்பின் வேதியியலை முறையாகப் பயில முடிவு செய்து எடுமான் ஃவிரெமி (Edmond Frémy) அவர்களின் செய்முறைச் சாலையில் சேர்ந்தார். அதன் பின் பியர் பால் துரியான் (Pierre Paul Dehérain) அவர்களின் செய்முறைச்சாலையில் சேர்ந்தார். அங்கு துரியான் அவர்களின் வலியுறுத்தலால் கல்விசார் பணியைப் பின் தொடர ஒப்புக்கொண்டார். பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான தகுதி பெறும் பாக்குலோரியா (baccalauréat) என அழைக்கப்பட்ட இளநிலை பட்டத்தைப் பெறுவதில் முதலில் தோல்வி அடைந்து, பின்னர் 1874 இல் வெற்றி பெற்றார். அவர் பாரிசில் இருந்த பொழுது வேதியியலாளர் அலெக்ஃசாந்திரே லியோன் எட்டார் (Alexandre Léon Étard) என்னும் வேதியலாளரோடும், வாசுக்கு (Vasque) என்னும் செடியியலாளருடனும் நண்பராக இருந்தார்.

முவாசான் முதன் முதலாக 1874 இல் தாவரத்தில் கார்பன்-டை-ஆக்சைடும், ஆக்சிசனும் நிகழ்த்தும் மாற்றங்களைப் பற்றி அறிவியல் கட்டுரை ஒன்றை, துரியானுடன் சேர்ந்து எழுதினார். அதன் பின்னர் தாவரவியலை விட்டுவிட்டு, கரிமமற்ற வேதியியல் துறையில் ஆய்வு செய்யத் தொடங்கினார், குறிப்பாக தீப்பிடிக்கும் இரும்பு பற்றிய வேதியியலில் ஈடுபட்டார். இவருடைய கருத்துகளை அக்காலத்தில் முன்னணியில் இருந்த கரிமமற்ற வேதியியல் அறிவியலாளர்கள் இருவர் வரவேறனர். இவர்கள் ஆன்றி துவ்யெல் (Henri Etienne Sainte-Claire Deville) என்பாரும் துபாய் (Debray) என்பாரும் ஆவர். முசாசான் 1880 இல் முனைவர் பட்டம் பெற்ற பின்னர் அவருடைய நண்பர் இலாண்டுறீன் (Landrine) அவருக்கு பகுப்பாய்வு வேதியியலில் பணிபுரிய வாய்ப்புத் தந்தார். முவாசான் 1882 இல் இலியோனீ இலியுகோன் (Léonie Lugan) என்பாரை மணந்தார். இவர்களுக்கு 1885 இல் ஒரு மகன் பிறந்தார். 1880 களில் இவர் ஃவுளூரின் ஆய்விலும், அதனைப் பெரிய அளவில் விளைவிப்பதிலும் ஆழ்ந்து இருந்தார். ஆனால் இவருக்கான தனி செய்முறையகம் (ஆய்வகம், செய்களம்) ஏதும் இல்லை. அங்கு அருகில் இருந்த பற்பல செய்முறையகங்களைப் பயன்படுத்தினார், எடுத்துக்காட்டாக சார்லசு பிரீடேல் (Charles Friedel) அவர்களின் செய்களம். அங்கே இவருக்கு 90 புன்சென் மின்கலங்கள் (Bunsen cell) கிடைத்தன. இவற்றை இணைத்து உருகிய ஆர்சனிக்கு டிரைக்குளோரைடு மின்பகுப்பாய்வு செய்யும் பொழுது, அங்கே வெளிப்பட்ட வளிமத்தைக் கூர்ந்து அறிந்தார். இவ்வளிமம், மீண்டும் ஆர்சனிக்கு டிரைக்குளோரைடால் உள்வாங்கப்பெற்றது. பின்னர் ஐதரச புளூரைடு மின்பகுப்பாய்வு செய்த பொழுது சூன் 26, 1886 அன்று புளூரின் (ஃவுளூரின்) வளிமம் கிடைத்தது. உண்மையை உறுதி செய்யும் முகமாக, பிரான்சிய அறிவியல் உயர்கல்வி மன்றம் (French academy of science) மூன்று பேரை, மார்சிலென் பெர்த்திலோ (Marcellin Berthelot), ஆன்றி துபாய், எடுமான் ஃவிரெமி ஆகியோரை, அவர்களின் சார்பாளர்களாக அனுப்பியது. முவாசானால் மீண்டும் அந்த விளைவைச் செய்து காட்ட இயலவில்லை, காரணம் ஐதரச புளூரைடில், முன்பு செய்த ஆய்வில் கலந்திருந்தவாறு சிறிதளவு பொட்டாசிய புளூரைடு கலந்து இருக்கவில்லை. இதனை பகுத்தறிந்து, திருத்திப் பின்னர் பலமுறை செய்து காட்டினார். இதற்குப் பரிசாக 10,000 பிரான்சிய வெள்ளியாகிய "பிராங்கு" தந்தனர்.

 
ஆன்றி முவாசான் (1852-1907) செய்முறையகத்தில் மின் கீற்று உலையைக் கொண்டு செயற்கையாக வைரம் உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தபோது எடுத்தபடம்

அடுத்து வந்த ஆண்டுகளில், அதாவது 1891 ஆம் ஆண்டு வரை, இவர் புளூரின் வேதியியல் ஆய்வில் ஆழ்ந்து இருந்தார். இவர், புளூரின் கூறாக உள்ள பல வேதியியல் மூலக்கூறுகளைக் கண்டுபிடித்தார். எடுத்துக்காட்டா பால் இலெபோ (Paul Lebeau) என்பவரோடு சேர்ந்து 1901 இல் கந்தக ஃகெக்சாபுளூரைடு (கந்த அறுபுளூரைடு, SF6) கண்டுபிடித்தார். இவருடைய ஆய்வின் பயனாய் போரான், செயற்கை வைரம் முதலான்வற்றைப் விளைவிப்பதில் முக்கிய முன்னேற்றங்கள் நடந்தன. மின்சாரத்தால் சூடாக்கப்பட்ட அடுப்புகள் 3500°செ வரை வெப்பநிலை எய்தும்படியாக செய்ய முடிந்தது. இதற்காக 80 வோல்ட்டு அழுத்தத்தில் 2200 ஆம்பியர் மின்னோட்டம் பாய்ச்ச வேண்டி இருந்தது (1990 வரை)

மேற்கோள்கள் தொகு

  1. ""Henri Moissan - Biographical"". Nobelprize.org. Nobel Media AB - 2014. Web. 19 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
  2. ""Henri Moissan - Facts"". Nobelprize.org. Nobel Media AB - 2014. Web. 19 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்றி_முவாசான்&oldid=3737966" இலிருந்து மீள்விக்கப்பட்டது