எஸ். புண்ணியமூர்த்தி

எஸ். புண்ணியமூர்த்தி (இறப்பு: ஏப்ரல் 15, 2006) இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளரும், செய்தி வாசிப்பாளருமாவார். தனது திறமையினால் பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப்பிரிவின் பணிப்பாளராக நியமனம் பெற்றார். வானொலி அஞ்சல், நேர்முக வர்ணனையில் புகழ் பெற்றவர்.

வானொலியில் தொகு

புண்ணியமூர்த்தி யாழ்ப்பாண மாவட்டம், ஊர்காவற்றுறை, கரம்பொன் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை வானொலியில் 1952 சூலை 17 இல் பகுதிநேர அறிவிப்பாளராக சேர்ந்து கொண்டார். பின்னர் அப்பதவியில் நிரந்தரமாக்கப்பட்டார். ஓர் அரச திணைக்களமாக விருந்த இலங்கை வானொலி 1967 இல் கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்ட பின்னர், முதலாம் தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார். 1971 இல் செய்திப் பிரிவு மறுசீரமைக்கப்பட்ட சமயம் தமிழ்ப் பகுதி தனிப்பகுதியாக்கப்பட்டது. இப்பகுதியின் முதலாவது தலைவராக புண்ணியமூர்த்தி பதவியுயர்வு பெற்றார். அவர் 1987 இல் ஓய்வுபெறும்வரை இப்பதவியை வகித்து வந்தார். கண்டதும் கேட்டதும் செய்திச்சுருள், வளரும் பயிர், எமது அதிதி, சுழலும் ஒலிவாங்கி, நாளைய சந்ததி, இசைச் சங்கமம், இசையும் கதையும் ஆகிய நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார்.

வெளி நாடுகளில் பயிற்சி தொகு

புண்ணியமூர்த்தி மேற்கு `ஜேர்மன் அரசின் புலமைப்பரிசில் பெற்று 1973 இல் செருமனி சென்று ஒலிபரப்புத் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். இதுதவிர, 1975 இல் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வானொலியின் வகிபாகம்' என்பது பற்றிய ஒருமாத கால கருத்தரங்கிலும் அவர் பங்குபற்றினார். புண்ணியமூர்த்தி 1974 இல் இலண்டன் பி.பி.சி. சென்று செய்தித் துறையில் ஒரு மாத காலம் சிறப்புப் பயிற்சியும் பெற்றார். 1981 ஆம் ஆண்டில் புதுடில்லியில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட பிராந்திய மாநாட்டில் இலங்கையிலிருந்து அறிக்கை செய்வதற்கு அங்கு சென்ற குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

கெளரவம் தொகு

புண்ணியமூர்த்திக்கு கனடாவில் ரொரன்டோ நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற `தமிழர் தகவல்' மாதாந்த சஞ்சிகையின் 15 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவில் நான்கு தசாப்த வானலை வித்தகர் என்ற விருது வழங்கப்பட்டது அவருக்குக் கிடைத்த பெருங்கௌரவமாகும்

எழுதிய நூல் தொகு

தனது வானொலி அனுபவங்களை " செய்திகள் - வாசிப்பது எஸ். புண்ணியமூர்த்தி" என்ற பெயரில் ஆங்கில நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._புண்ணியமூர்த்தி&oldid=2659317" இலிருந்து மீள்விக்கப்பட்டது