ஒன்னுக்குறுக்கி நாகமுனீசுவரர் சுவாமி கோயில்

ஒன்னுக்குறுக்கி நாகமுனீசுவரர் சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒன்னுக்குறுக்கி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயிலில் அருகில் உள்ள மலை நாகமுனீசுவரர் மலை என அழைக்கப்படுகிறது.

அருள்மிகு நாகமுனீசுவரர் சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:ஒன்னுக்குறுக்கி, தேன்கனிக்கோட்டை வட்டம்
சட்டமன்றத் தொகுதி:தளி
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:நாகமுனீசுவரர்
சிறப்புத் திருவிழாக்கள்:மகாசிவராத்திரி

வரலாறு தொகு

ஒரு காலத்தில் ஒன்னுக்குறுக்கி கிராமத்தில் முனேகவுடு என்பவர் வேளாண்மை செய்தும், கல்நடைகளை வளர்த்தும் வாழ்ந்துவந்தார். இவரது மாடுகளில் ஒன்று பால்கறக்காமல் இருப்பதைக் கண்டு, அது மேய்ச்சலுக்குப் போகும்போது அதைப் பின்தொடர்ந்து சென்று பார்த்தார். அப்போது அந்த மாடு ஒரு புற்றின் அருகில் சென்று புற்று கண்ணில் பால் சொரிந்ததையும், அந்தப் பாலை அதில் இருந்த ஒரு நாகம் அருந்துவரைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தர். அன்று அவரது கனவில் தோன்றிய சிவபெருமான் தானே நாகத்தின் வடிவில்வந்து காட்சியளித்ததாக கூறினார். இதைக் கண்டு மகிழ்ந்து அந்தப் பசுவை சிறப்பாக வளர்த்து வந்தார். இந்நிலையில் அந்தப் பசுமாடு திடீரென இறந்துவிட்டது. இதைக் கண்டு மிகவும் வருந்திய முனேகவுடு இறைவனை வேண்டி. நீ எனக்கு காட்சியளித்தது உண்மையாக இருந்தால் இப்புற்று மண்ணே மருந்தாகி பசுமாட்டை உயிர்ப்பிக்க வேண்டும் என வேண்டினார். அதிலிருந்து மூன்றுபிடி மண்ணை பசுமாட்டின் மீது துவினார். உடனே பசுமாடு உயிர்பெற்று எழுந்தது. இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் அந்தப் புற்று உள்ள இடத்தில் கோயில் கட்டி வணங்கத் துவங்கினர் என கூறப்படுகிறது.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயில் கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்டுள்ளது. கோயிலின் முன்பு கருடக் கம்பம் அமைந்துள்ளது. கோயிலின் இடப்புறம் திருக்குளம் உள்ளது. கருவறையில் நாகமுனீசுவரர் ஐந்து தலை நாகம் குடைபிடித்த நிலையில் அமர்ந்து உள்ளார். கோயிலில் விநாயகர், சுப்பிரமணியர் போன்றோரின் சிலைகள் மற்றும் நவக்கிரகங்களும் பிரத்திடைச் செய்யப்பட்டுள்ளன.

திருவிழாக்கள் தொகு

ஒவ்வொரு திங்கள். வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மாசி மாதம் தேர்த் திருவிழா பதினாறு நாட்கள் சிறப்பாக நடத்தப்படுகிறது.

அமைவிடம் தொகு

தேன்கனிக்கோட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒன்னுக்குறுக்கியில் இக்கோயில் உள்ளது. இந்த ஊருக்கு தேன்பனிக்கோட்டை மற்றும்கெலமங்கலம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. பக். 117-119.