ஓய்மானாடு என்பது சோழநாட்டுக்கும், தொண்டைநாட்டுக்கும் இடையில் பரந்து கிடந்த சங்ககால நாடுகளில் ஒன்றாகும். இதன் கிழக்கில் வங்கக்கடலும், மேற்கில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்ட மலாடு என்னும் மலையமானாடு ஆகும். இடைக்கழி நாடு எனவும் இதனை வழங்கினர்.

சங்ககாலத்தில் ஓய்மானாட்டுத் தலைவன் நல்லியக்கோடன். இவன் ஓவியர் பெருமகன் என்று போற்றப்படுகிறான்.[1] ஓவியத்தை ஓவச் செய்தி என்பர்.[2] மற்றும் ஓவம் என்றும் குறிப்பிடுவர்.[3] ஒவியம் வரைவோரை ஓவமாக்கள் என்றும் குறிப்பிடுவர்.[4] இந்த ஓவியர் > ஓவர் என்னும் சொல்லுக்கும் ஓய்மான் என்னும் சொல்லுக்கும் தொடர்பு இல்லை. காரணம் நாட்டுமக்கள் ஓவியராக விளங்கினர் என்பது சாலாது.

‘ஓ’ என்னும் பெயர்ச்சொல் ஏரி நீரை அடைக்கும் மதகுப் பலகையைக் குறிக்கும்.[5]

ஓய்மானாட்டில் ஏரிகள் அதிகம். எனவே ஏரிகளில் பல மதகுகள் ஓ-பலகையைக் கொண்டிருந்ததால் இதனை ஓய்மானாடு என்றனர். ஓய்மானாட்டின் தலைநகர் நன்மாவிலங்கை. மாவிலங்கை.[6] இந்நாடு ஆழ்ந்த அகழிகளைக் கொண்டும், நெடிய மதில்களை கொண்டும் விளங்கியது.புறம் 379 இந்நாடே அருவாநாடு, அருவாவடதலை நாடு ஆகியவற்றை அடக்கியிருந்ததாக கருதுகின்றனர்.[7]

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. சிறுபாணாற்றுப்படை 122
  2. அகநானூறு 5-20.
  3. பட்டினப்பாலை 49
  4. புனைவினை ஓவ மாக்கள் ஒள்அரங்கு ஊட்டிய துகிலிகை.
  5. துனை செலல் தலைவாய் ஓ இறந்து வரிக்கும் காணுநர் வயாம் கட்கு இன் சேயாறு – மலைபடுகடாம் 475
  6. பொருபுனல் தரூஉம் போக்கரு மரபின் தொன் மாவிலங்கை கருவொடு பெயரிய நன்மாவிலங்கை - சிறுபாணோற்றுப்படை 118-120
  7. உ.வே. சாமிநாதய்யர் எழுதிய பத்துப்பாட்டு, புறநானூறு உரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓய்மானாடு&oldid=2797999" இலிருந்து மீள்விக்கப்பட்டது