கமலாட்சி ஆறுமுகம்

கமலாட்சி ஆறுமுகம். (பிறப்பு: ஆகத்து 24, 1934) இவர் மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஓய்வு பெற்ற துணைத் தலைமை ஆசிரியையும் கூட. பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் பல பொறுப்புகள் வகித்து வருகிறார்.

இலக்கியத்துறை தொகு

1949ம் ஆண்டு முதல் சிறுகதைகள், நாடகங்கள், குறுநாவல் போன்ற தமிழ்ப் படைப்பிலக்கியங்களையும் கட்டுரைகளையும் படைத்துவரும் இவரின் ஆக்கங்கள் மலேசிய தேசிய தினசரிகளிலும், வார இதழ்களிலும் மற்றும் மலேசியா சிற்றிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. அத்துடன், மலேசியா வானொலியிலும் இவரின் பல ஆக்கங்கள் ஒலிபரப்பாகியுள்ளதுடன் மலேசியா வானொலி நாடகங்களில் குரல் கொடுத்துமுள்ளார். ==பாலர் பள்ளி தோற்றம்==

ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் புந்தோங் முனிசிபல் சமூக மண்டபத்தில் 15 ஆம் திகதி 1976-ஆம் ஆண்டு, ஈப்போ வட்டாரத்தில் முதல் தமிழ்ப் பாலர் பள்ளியை அமைத்த பெருமையும் திருமதி கமலாட்சி ஆறுமுகத்தையே சாரும். 1976 ஆம் ஆண்டின் ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு.எல்.கிருஷ்ணன் அவர்களும் துணைத் தலைவர் திருமதி செண்பகவள்ளி நடராஜா அவர்களும் செயலாளராக திருமதி கமலாட்சி ஆறுமுகம் அவர்களும் ‘தமிழ்ப் பாலர் பள்ளி’ தொடங்கப்படுவதற்கு முன்னிலை வகித்தார்கள். ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் இப்பாலர் பள்ளியை தொடங்குவதற்கு திருமதி கமலாட்சி அவர்களோடு இணைந்து அன்றைய தலைமை ஆசிரியர் தொண்டர் மாமணி பி.எஸ் கோவிந்தன், வணிகப் பெருமகனார் திரு.வி.கே. கல்யாண சுந்தரம், அருட்செல்வர் ஆர்.எஸ் சிவம், டாக்டர் பி.கோமளம் போன்றவர்களின் ஆதரவுடன், நிதியுதவிகள் பெறப்பட்டன. இப்பாலர் பள்ளி தொடங்கி 38 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது, அப்பள்ளியை, ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா, ‘தாடிக்கா அம்மன் செமர்லாங்’ எனும் பெயரில் நடத்தி வருகின்றது. இப்பாலர் பள்ளியின் தொடக்க விழாவில் அருட் செல்வர் சிவம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினர். ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் இத்தகைய பணி பாராட்டுக் குரியது பயன்தரத் தக்கது என்று அவர் புகழ்ந்துரைத்தார். அத்தகைய கால கட்டத்தில் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும் என்ற திருமதி கமலாட்சி ஆறுமுகம் அவர்களின் கோரிக்கைகேற்ப ஈப்போ நகரின் வணிகப் பிரமுகர் திரு.வி.கே.கல்யாண சுந்தரம் அவர்கள் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் 50 வெள்ளி மாதந்தோறும் வழங்கினார். அதுமட்டுமின்றி, இப்பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்குத் தினந்தோறும் பாலும் உணவும் இலவசமாக திரு.அருட்செல்வர் , ஆர் எஸ். சிவம் அவர்களின் குடும்பத்தின் சார்பாக வழங்கப்பட்டது.

புனைப் பெயர்கள் தொகு

இவர் கமலச் செல்வி, கண்மணி ஆகிய புனைப்பெயர்களிலும் தமிழ் இலக்கியம் படைத்து வருகின்றார்.

எழுதியுள்ள நூல்கள் தொகு

  • சிந்தனை மலர்கள் (1989)
  • தியாகங்கள் (சிறுகதைத் தொகுப்பு, 2001).

இதழாசிரியையாக தொகு

மலாயா தமிழ்ப் பள்ளியாசிரியர்கள் சங்கத்தின் தேசிய உதவித் தலைவராக இவர் செயலாற்றியுள்ளார். இச்சங்கத்தின் வெளியீடான "ஆசிரியர் ஒளி" இதழின் ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

விருதுகளும், பரிசுகளும் தொகு

  • தமிழ்ப் பணிச் செல்வி - சுவாமி இராமதாசர் வழங்கிய விருது (1976)
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கப் பணமுடிப்பும் பாராட்டும் (1984)
  • தேசிய அளவிலான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பிரதமர் அவர்களால் வழங்கப் பட்டது (1985)
  • விஜிபி சந்தனம்மாள் அறக்கட்டளை விருது (1990)
  • எழுத்தாளர் தின விருது (1993)
  • பேராக் மாநில எழுத்தாளர் சங்க மூத்த எழுத்தாளர் விருது (1994)
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கிய டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது (2003)
  • அரசாங்க விருதுகளாக பிபிஎன் மற்றும் பிபிரி

மேலும் பல மலேசியா நிறுவனங்களினால் விருதுகளும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலாட்சி_ஆறுமுகம்&oldid=3238306" இலிருந்து மீள்விக்கப்பட்டது