காமினி கௌஷல்

காமினி கௌஷல் (Kamini Kaushal) இந்தி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர், நீச்சா நகர் (1946), மற்றும் பிரஜ் பஹு (1955) போன்ற படங்களில் நடித்த கதாபாத்திரங்களின் மூலமாக அறியப்படுகிறார். இதில் நீச்சா நகர் திரைப்படம், 1946இல் நடைபெற்ற கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு வெற்றி பெற்றது. மேலும், பிரஜ் பஹு திரைப்படம் இவருக்கு பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுத் தந்தது.[1] இவர், 1946 முதல் 1963 வரை திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். அதில் தோ பாய் (1947), ஷாகீத் (1948), ஜித்தி (1948) ஷப்னம் (1949), நதியா கே பார் (1948) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இவர் 1963 முதல் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அவை மக்களிடையே வரவேற்பை பெற்றன. மேலும் இவர் ராஜேஷ் கன்னாவுடன் மூன்று படங்களிலும், மனோஜ் குமாருடன் எட்டு படங்களிலும் மற்றும் சஞ்சீவ் குமாருடன் ஒரு படத்திலும் நடித்துள்ளார்.

காமினி கௌஷல்
2011, ஜெய்ப்பூரில் காமினி கௌஷல்
பிறப்புஉமா காஷ்யப்
16 சனவரி 1927 (1927-01-16) (அகவை 97)
லாகூர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
(தற்போது பஞ்சாப், பாக்கித்தான்)
பணிநடிகை, தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1946-முதல் தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்நீச்சா நகர் (1946)
ஷாகீத் (1948)
நதியா கே பார் (1948)
பிரஜ் பஹு (1954)
ஷாகீத் (1965)
விருதுகள்பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருது (1956)
பிலிம்பேரின் வாழ்நாள் சாதனையாளர் விருது (2015)

இளமைப்பருவம் தொகு

காமினி கௌஷல், உமா காஷ்யப் என்கிற பெயருடன் லாகூரில் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்களும், மூன்று சகோதரிகளும் இருந்தனர்.[2] இவரது தந்தை சிவ ராம் காஷ்யப், தாவரவியல் பேராசிரியராக பஞ்சாப் பல்கலைக்கழகம், லாகூர், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போது பாக்கித்தான்) இல் பணிபுரிந்தவர் ஆவார். பேராசிரியர் காஷ்யப், இந்திய தாவரவியலின் தந்தை என அறியப்படுகிறார்..[3] இவரது தந்தை ஒரு குறிப்பிடத்தக்க தாவரவியலாளராக இருந்து, ஆறு வகை தாவரங்களை கண்டுபிடித்தார். காமினியின் ஏழாவது வயதில் நவம்பர் 26, 1934 அன்று அவரது தந்தை காலமானார். இவர், லாகூரிலுள்ள கின்னெர்ட் கல்லூரியில் பி. ஏ. ஆங்கில இலக்கியம் படித்தார். 1946இல் சேத்தன் ஆனந்த் மூலமாக நீச்சா நகர் திரைப்படத்த்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவரது இளமைப் பருவம் குறித்து ஒரு பேட்டியில், தான் முட்டாளாவதற்கு தனக்கு நேரமில்லை எனவும், கிடைக்கும் நேரத்தை நீச்சல், சவாரி செய்தல், சறுக்கு விளையாட்டு மற்றும் வானொலி நாடகங்களில் பங்கெடுத்தல் மூலமாக செலவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். வானொலி நாடகங்களில் பங்கு பெறுவதால் தனக்கு 10 ரூபாய் ஊதியம் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.[2] இவரது மூத்த சகோதரி, ஒரு வாகன விபத்தில் இறந்துவிட்டார்.[2] மூத்த சகோதரியின் இரண்டு பெண் குழந்தைகளுக்காக, காமினி தன் சகோதரியின் கணவரையே மணந்து கொள்ள முடிவு செய்தார். அதனால் 1948இல் மும்பை துறைமுகத்தில் முதன்மை பொறியியலாளராக இருந்த மூத்த சகோதரியின் கணவர் பி. எஸ். சூத் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் வசித்தார்.[2] இவரது மூத்த சகோதரியின் மகளான கும்கும் சோமானி, காந்தியின் தத்துவம் குறித்து குழந்தைகளுக்கான ஒரு நூலை எழுதியுள்ளார். மற்றொரு மகளான கவிதா சாஹ்னி ஒரு ஓவியராவார். காமினிக்கு ராகுல், விதுர் மற்றும் ஷ்ரவண் என்கிற மூன்று மகன்கள் உள்ளனர்.[2] 1950 களில், தம்பதியினர் மும்பையிலுள்ள மஸாகோனில் பெரிய, பரந்த, விசாலமான, மாளிகையில் வாழ்ந்து வந்தனர், இது அவரது கணவருக்கு மும்பைத் துறைமுகம் வழங்கியதாகும்.[4]

தொழில் தொகு

காமினி, 1942 முதல் 1945 வரை கல்லூரியில் படிக்கும் போது தில்லியில் மேடை நாடகங்களில் நடித்துள்ளார். 1937 முதல் 1940 வரை பிரிவினைக்கு முன்பான காலத்தில், லாகூர் வானொலியில் குழந்தை நட்சத்திரமாக "உமா" என்கிற பெயரில் பணிபுரிந்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. Biraj Bahu awards, ஐ.எம்.டி.பி இணையத்தளம்
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Entertainment » Kamini Kaushal". Filmfare. பார்க்கப்பட்ட நாள் 19 July 2015.
  3. "College Botany" by Ganguli, das and Dutta (Calcutta 1972)
  4. Stars At Home – Kamini Kaushal, "cineplot.com"

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமினி_கௌஷல்&oldid=3908760" இலிருந்து மீள்விக்கப்பட்டது