கிம்புலன் கோயில், யோக்யகர்த்தா

இந்தோனேசியக் கோயில்

கிம்புலன் கோயில் (Kimpulan) (புஸ்தகசாலா கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) கி.பி. 9 முதல் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்து கோவிலாகும். இது இந்தோனேசியாவில் யோக்யகர்த்தாவில் ஸ்லெமன் என்னுமிடத்தில் உள்ள கலியுராங் என்னுமிடத்தில் உள்ளது. இந்தோனேசியா இஸ்லாமிய பல்கலைக்கழக உலில் அல்பாப் மசூதி பகுதியில் (இந்தோனேசியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் அல்லது யுஐஐ), கலியுராங் சாலையில் அமைந்துள்ளது. கோயில் சுமார் ஐந்து மீட்டர் நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்தது. சதுர வடிவில் அமைந்த ஆண்டிசைட் கல் சுவர்கள் மற்றும் விநாயகர், நந்தி, மற்றும் லிங்கம் - யோனி ஆகியோரின் சிலைகளை வெளிப்படுத்த கோயிலின் பகுதிகள் அகழ்வாராய்ச்சிக்காக தோண்டப்பட்டுள்ளன.

கிம்புலன் கோயில் அகழ்வாராய்ச்சி தளம். அருகில் இந்தோனேசியா இஸ்லாமிய பல்கலைக்கழக உலில் அல்பாப் மசூதி

கண்டுபிடிப்பு தொகு

ஒரு புதிய பல்கலைக்கழகத்திற்காக நூலகத்தை நிர்மாணிப்பதற்கான அடித்தளங்களை அமைப்பதற்காக நில அகழ்வாராய்ச்சியின் போது இந்த கோயில் 11 டிசம்பர் 2009 ஆம் நாளன்று தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது.[1] இந்த கண்டுபிடிப்பு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது மற்றும் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் தூண்டியது. செய்தி உடனடியாக அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட தளத்திற்கு பல பார்வையாளர்களை ஈர்த்தது. யோக்யகர்த்தாவில் உள்ள தொல்பொருள் அலுவலகம் (பிபி 3) அங்கு வரக்கூடிய அதிக எண்ணிக்கையிலான ஆர்வமுள்ள பார்வையாளர்கள் அகழ்வாராய்ச்சி இடத்திற்கு தீங்கு விளையும் என்று அஞ்ச ஆரம்பித்தனர். மேலும் அவர்கள் அந்த இடத்தில் ஏதாவது கொள்ளை நடக்கக்கூடும் என்றும் அஞ்சினர். இதன் விளைவாக, அந்த பகுதி தகரம் வேலிகளால் சூழப்பட்டு மூடப்பட்டது; பார்வையாளர்கள் உள்ளே செல்ல இயலா நிலையில் இது அமைக்கப்பட்டது.

சாம்பிசரி (9ஆம் நூற்றாண்டு இந்துக் கோயில்), மொராங்கன் (யோக்யகர்த்தாவின் சிறப்புப்பகுதியில் உள்ள இடம்) மற்றும் கெடுங்கான் (சாம்பிசரி கோயிலுக்கு அருகிலுள்ள கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்துக் கோயில்களின் எச்சங்கள்) ஆகிய இடங்களில் உள்ள கோயில்களைப் போல் இக் கோயில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக மவுண்ட் மெராபி எனப்படுகின்ற ஒரு பண்டைய எரிமலை வெடிப்பின் காரணமாக புதைக்கப்பட்டுவிட்டதாக முன்னர் நம்பப்பட்டு வந்தது. யோக்யகர்த்தாவில் இந்த கோயிலின் கண்டுபிடிப்பு சமீபத்தில் யோககர்த்தாவில் மிகவும் உற்சாகமான தொல்பொருள் கண்டுபிடிப்பாக அமைந்துவிட்டது. இதைப் போலவே மற்ற பண்டைய கோயில்கள் இன்னும் அருகிலேயே மவுண்ட் மெராபி எரிமலை வெடிப்பின் காரணமாக நிலத்தடியில் புதைந்துள்ளதா என்ற ஒரு என்ற ஊகத்திற்கு வழிவகுத்தது,

வரலாறு தொகு

மேற்கொண்ட இக்கோயில் தொடர்பாக ஆய்வு மற்றும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி யோககர்த்தா தொல்பொருள் அலுவலகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த கோயில் இந்து சைவ பிரிவினைச் சார்ந்தது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது, மேலும் சிற்பங்களின் செதுக்குதல் மற்றும் சிலைகளின் கலையமைப்பு ஆகியவற்றைக் கொண்டு இந்தக் கோயிலானது கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரையேயான இடைப்பட்ட காலத்தில்,மாதரம் இராச்சியத்தின்போது, கட்டுப்பட்டு இருக்கலாம் என்று உறுதியாக நம்ப முடிகிறது.

தொல்பொருள் ஆராய்ச்சியின்போது மேற்கொள்ளப்பட்ட கண்டுபிடிப்பில், இந்த கோயில் கேண்டி யுஐஐ (யுனிவர்சிட்டாஸ் இஸ்லாம் இந்தோனேசியா கோயில்) என்ற வகையிலேயே பொது மக்களால் அறியப்பட்டது, ஏனெனில் இது யுஐஐ வளாக மைதானத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் யோககர்த்தாவின் தொல்பொருள் அலுவலகம் (பிபி 3) இந்தக் கோயிலுக்கு கேண்டி கிம்புலன் அதாவது கிம்புலன் கோயில் என்று பெயர் சூட்டியது. அந்த இடம் அமைந்துள்ள இருப்பிடமான கிம்புலன் கிராமத்திற்கு உள்ள பெயரே அதன் தொல்லியல் தளத்திற்கும் சூட்டப்பட்டது. இருப்பினும் இந்தோனேசியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வக்ஃப் அறக்கட்டளை வாரியம் மற்றொரு பெயரை பரிந்துரைத்தது. அப்பெயர் "நூலகம்" என்று பொருள் கொள்ளும்படியான சமஸ்கிருதத்தில் புஸ்தசாலா என்று அழைக்கப்பட்ட பெயராகும். ஏனெனில் கோயிலின் தளம் முதலில் பல்கலைக்கழக நூலகமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அப்பெயர் தெரிவு செய்யப்பட்டது.[1] பல்கலைக்கழகத்தின் கல்வித் தன்மையை வலியுறுத்துஙம் வகையில் "புஸ்தகசாலா" என்ற பெயரும் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் அந்த தொல்லியல் தளத்தில் விநாயகர் கண்டுபிடிக்கப்பட்ட இடம் ஜாவாவில் உள்ளது. பாரம்பரியமாக கற்றல், அறிவுசார், ஞானம் மற்றும் அறிவின் கடவுள் என்று விநாயகர் அறியப்படுகிறார்.

கட்டிடக்கலை தொகு

இந்த கோயில் ஒரு இந்து சைவ கோயிலாகும். இருப்பினும் இந்த காலத்தில் காணப்படுகின்ற ஒரு கோயிலின் கட்டட அமைப்போடு ஒத்து நோக்கும்போது இதன் கட்டட அமைப்பு மிகவும் அசாதாரணமானது. பொதுவான மத்திய ஜாவா இந்து கோவில்களைப் போலல்லாமல், இக்கோயில் கல் பிரதான அமைப்பு மற்றும் உயர்ந்த கூரை ஆகியவை காணப்படவில்லை. மேலும் இந்த கோவில் அளவில் சிறியதாக உள்ளது. மேலும் எளிமையான அலங்காரங்களைக் கொண்டு அமைந்துள்ளது. இது காலாவின் செதுக்கலுடன் சுவர் கல் அடித்தளத்தோடு பல சதுரங்களைக் கொண்டுள்ளது. படிக்கட்டுகளில் காலா எனப்படும் பைரவர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. உள் அறைகளில் விநாயகர், நந்தி, மற்றும் லிங்கம்-யோனி ஆகிய சிலைகள் உள்ளன.

இதுவரை, இந்த கோயிலின் வரலாறு மற்றும் கட்டிடக்கலை ஒரு சாதாரணமானது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கோயிலின் உடல், நெடுவரிசை மற்றும் கூரை அநேகமாக மரத்திலிருந்தோ அல்லது காலப்போக்கில் சிதைந்துபோன எந்த தடயங்களிலிருந்தோ அமைக்கப்பட்டிருக்கலாம். உயரமான மேரு பாணியிலான கூரையுடன் கூடிய அமைப்பு தற்போதைய பாலினிய கோயிலில் காணப்படுகின்ற கலைப்பாணியை ஒத்திருந்தது. மாதரம் இராச்சியத்தின் அரச தேசிய கோயிலாக இருந்த அற்புதமான மற்றும் செழிப்பான அலங்கரிக்கப்பட்ட பிரம்பானான் கோயிலைப் போலல்லாமல், கிம்புலன் கோலில் தலைநகரின் புறநகரில் உள்ள ஒரு கிராமத்தின் பொது மக்களால் கட்டப்பட்ட ஒரு சாதாரண கிராமக் கோயில் எனலாம்.

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 [1], Kompas daily, accessed February 2010