கே. ஜி. கண்ணபிரான்

கே. ஜி. கண்ணபிரான் (K.G.Kannbiran)(1929 - 2010)மக்கள் உரிமைகளுக்காகப் போராடிய ஓர் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆவார். முப்பதாண்டுகளுக்கும் மேலாக மக்கள் குடியியல் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்காக தமது பணிவாழ்வை அர்ப்பணித்தவர்.ஆந்திராவின் மக்கள் குடியியல் உரிமைக் குழு (PUCL)வின் தலைவராக 1978 முதல் 1994ஆம் ஆண்டுவரைப் பணியாற்றிப் பின்னர் தேசியத் தலைவராக பணியாற்றினார். ஆந்திரப் பிரதேச நக்சலைட் இயக்கத்தினருக்கும் மாநில அரசுக்கும் இடையே உரையாடல்கள் நிகழப் பாடுபட்டார். நிறுவனச் சட்டங்கள், வரி விதிப்புச் சட்டங்கள், சிவில் சட்டங்கள் ஆகியவற்றில் நிபுணராகவும் இருந்தார்.

வாழ்க்கை வரலாறு தொகு

1929ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த கண்ணபிரான் பொருளியலில் முதுகலைப் பட்டமும் சட்டப் படிப்பும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முடித்த பிறகு 1961ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் செகந்தராபாத்தில் தமது வழக்கறிஞர் பணியைத் துவங்கினார். இவருக்கு வசந்தா என்ற மனைவியும் இரு மகன்களும் ஓர் மகனும் உள்ளனர். செவ்வியல் இந்திய இசையில் விருப்பமுள்ளவர். நீரிழிவுநோய்வாய்ப்பட்டிருந்த கண்ணபிரான் தமது 81வது அகவையில் 30 திசம்பர், 2010 அன்று மரணமடைந்தார்.

பணிவாழ்வு தொகு

இடதுசாரி சார்புள்ள கண்ணபிரான் 1960கள் முதலே அரசிற்கு எதிரான கருத்துக்கள் கொண்டவர்களின் வழக்குகளில் ஈடுபாடு கொண்டார். மாற்றுக்கருத்துக்களை சகிக்காத அரசின் செயல்களுக்கு எதிராகப் போராடினார். அவசரநிலையின்போது பல அரசியல் கைதிகளின் வழக்குகளை எடுத்துக் கொண்டார். செகந்திராபாத் சதி வழக்கு, பார்வதிபுரம் சதி வழக்கு ஆகியவற்றில் வழக்காடினார்.

நக்சலைட் இயக்கத் தலைவர்களுக்கும் ஆந்திர அரசிற்கும் இடையே பாலமாக விளங்கினார். 1987ஆம் ஆண்டில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஏழு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளையும் பிறரையும் மக்களின் போர் இயக்கம் கடத்தியபோது அவர்களது விடுதலைக்கான பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்காற்றினார்.1991ஆம் ஆண்டில் முன்னாள் நடுவண் ஆய அமைச்சர் பி. சிவசங்கரின் மகனும் சட்டப்பேரவை உறுப்பினருமான சுதீர்குமாரின் கடத்தலின்போதும் 1993ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர் டி. சீனிவாசலு கடத்தப்பட்டபோதும் ஆந்திர அரசு இவரது உதவியையே நாடியது.[1]

குசராத் கலவரங்களை விசாரணை செய்ய அமைக்கப்பட்ட "அக்கறை மிக்க குடிமக்கள் தீர்ப்பாயத்தில்" (Concerned Citizen's Tribunal) உறுப்பினராக இருந்தார். இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக நீதிபதி கிருட்டினய்யரோடு கலந்து ஆலோசித்து சில பரிந்துரைகளை அறிவித்தார்

படைப்பு தொகு

  • தண்டனையினின்றும் விலக்கீட்டிற்கான ஊதியம்:அதிகாரம்,நீதி மற்றும் மனித உரிமைகள் (The wages of impunity: power, justice and human rights) - ஆங்கிலநூல்

மேற்கோள்கள் தொகு

  1. த இந்து இரங்கல் செய்தி

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஜி._கண்ணபிரான்&oldid=2711665" இலிருந்து மீள்விக்கப்பட்டது