கொரியாவின் வரலாறு

கொரியாவின் வரலாறு என்னும் இக்கட்டுரை 1945 க்கு முன்னர் இன்றைய வட கொரியாவும் தென் கொரியாவும் ஒன்றாக இருந்தவரையான வரலாற்றைக் கூறுகின்றது. கொரியத் தீவக்குறையில், கீழ் பழையகற்காலம் ஏறத்தாழ அரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது.[1][2][3] மிக முந்தியதாக அறியப்பட்ட கொரிய மட்பாண்டம் கிமு 8000 ஆண்டுக்குரியது. புதிய கற்காலம் கிமு 6000 ஆண்டுக்குப் பின்னரும் வெங்கலக் காலம் கிமு 800 அளவிலும் தொடங்கியது.[4][5][6] இரும்புக் காலத்தின் தொடக்கம் அண்ணளவாக கிமு 400 ஆகும்.

மூன்று இராச்சியங்கள் தொடர்பான தொன்மம் சார்ந்த கதைகளின் தொகுப்பான சம்குக் யுசா காணப்படும் கதைகளின்படி கொஜோசியன் இராச்சியம் வடக்குக் கொரியாவிலும் மஞ்சூரியாவிலும் கிமு 2333 இல் நிறுவப்பட்டது.[7] கிஜா ஜோசியன் கிமு 12 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இதன் இருப்பும், வகிபாகமும் தற்காலத்தில் சர்ச்சைக்கு உரியதாக உள்ளது. கோஜோசியன் தொடர்பான எழுத்துமூல வரலாற்று ஆவணங்களைக் கிமு 7 ஆம் நூற்றாண்டில் இருந்து காணமுடிகின்றது.[8][9] சின் அரசு தெற்குக் கொரியாவில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் உருவானது. கிமு 2 ஆம் நூற்றாண்டில், கிஜா ஜோசியனுக்குப் பதிலாக விமான் ஜோசியன் உருவானது. அது அந்த நூற்றாண்டின் இறுதியில், ஹான் சீனாவிடம் வீழ்ச்சியடைந்தது. இதனால் கொஜோசியனும் வீழ்ச்சியடைந்து. தொடர்ந்து இப்பகுதியில் எப்போதும் பூசல் பிணக்குகளில் ஈடுபட்டிருந்த அரசுகள் உருவாகின. இது பிந்திய இரும்புக் காலத்தை உள்ளடக்கிய முன்-மூன்று இராச்சியக் காலம் ஆகும்.

முதலாம் நூற்றாண்டில் இருந்து, கொகுர்யா, பெக்சே, சில்லா ஆகிய அரசுகள், "கொரியாவின் மூன்று இராச்சியங்க"ளாக (கிமு 57 - கிபி 668) தீவக்குறையையும், மஞ்சூரியாவையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. 576 இல் மூன்று இராச்சியங்களையும் சில்லா இராச்சியம் ஒன்றிணைத்தது. 698 இல் தே ஜோ யோங் (Dae Jo-yeong), பழைய கோகுர்யா இருந்த பகுதியில் பால்கே இராச்சியத்தை நிறுவினார். இது வடக்கு தெற்கு நாடுகள் காலத்துக்கு வழிசமைத்தது. 9 ஆம் நூற்றாண்டில் சில்லா, பிந்திய மூன்று இராச்சியங்களாகப் (892 - 932) பிரிந்தது. இவை பின்னர் வாங் கோனின் கோர்யா வம்சத்தால் ஒன்றிணைக்கப்பட்டது. இதற்கிடையில், லியாவோ வம்சத்தின் படையெடுப்பைத் தொடர்ந்து பால்கே வீழ்ச்சியடைந்தது. முடிக்குரிய இளவரசர் கோர்யாவுக்குத் தப்பி ஓடினார். முடிக்குரிய இளவரசரை வரவேற்ற வாங் கோன் அவரை அரச குடும்பத்துக்குள் உள்வாங்கியதன் மூலம் கோகுர்யாவில் இருந்து உருவான இரண்டு நாடுகளையும் ஒன்றாக்கினார்.[10][11] கோர்யா காலத்தில், சட்டங்கள் தொகுக்கப்பட்டு ஒரு குடிசார் சேவை முறைமையும் அறிமுகப்படுத்தப்பட்டது. பௌத்தச் செல்வாக்குக்கு உட்பட்ட பண்பாடு செழிப்படைந்தது. ஆனாலும் 13 ஆம் நூற்றாண்டில் கோர்யாவின் மீது படையெடுத்த மங்கோலியர்கள் அதைக் கைப்பற்றி 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆட்சிசெய்தனர்.[12][13]

1388 இல், சதிப் புரட்சி மூலம் கோர்யா வம்சத்தைப் பதவியில் இருந்து இறக்கிய தளபதி யி சியோங் கியே, 1392 இல், யோசியன் வம்சத்தை (1392 - 1910) நிறுவினார். அரசர் செயோங் (1418–1450) பெருமளவு நிர்வாக, சமூக, அறிவியல், பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். வம்சத்தி தொடக்க ஆண்டுகளில் இவர் அரச அதிகாரத்தை உறுதிப்படுத்தினார். கொரிய எழுத்து முறையான அங்குல் என்பதை உருவாக்கியவரும் இவரே.

மேற்கோள்கள் தொகு

  1. Eckert & Lee 1990, ப. 2
  2. Christopher J. Norton, "The Current State of Korean Paleoanthropology", (2000), Journal of Human Evolution, 38: 803-825.
  3. Sin 2005, ப. 17
  4. Eckert & Lee 1990, ப. 9
  5. Connor 2002, ப. 9
  6. Jong Chan Kim, Christopher J Bae, "Radiocarbon Dates Documenting The Neolithic-Bronze Age Transition in Korea" பரணிடப்பட்டது 2012-10-22 at the வந்தவழி இயந்திரம், (2010), Radiocarbon, 52: 2, pp. 483-492.
  7. Lee Ki-baik 1984, ப. 14, 167
  8. Peterson & Margulies 2009, ப. 6.
  9. (கொரிய மொழி) Gojoseon at Doosan Encyclopedia
  10. Kim Jongseo, Jeong Inji, et al. "Goryeosa (The History of Goryeo)", 1451, Article for July 934, 17th year in the Reign of Taejo
  11. Lee, Ki-Baik (1984). A New History of Korea. Cambridge, Massachusetts: Harvard University Press. பக். 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:067461576X. "When Parhae perished at the hands of the Khitan around this same time, much of its ruling class, who were of Koguryŏ descent, fled to Koryŏ. Wang Kŏn warmly welcomed them and generously gave them land. Along with bestowing the name Wang Kye ("Successor of the Royal Wang") on the Parhae crown prince, Tae Kwang-hyŏn, Wang Kŏn entered his name in the royal household register, thus clearly conveying the idea that they belonged to the same lineage, and also had rituals performed in honor of his progenitor. Thus Koryŏ achieved a true national unification that embraced not only the Later Three Kingdoms but even survivors of Koguryŏ lineage from the Parhae kingdom." 
  12. "A History of Korea: From Antiquity to the Present, by Michael J. Seth", p112
  13. Djun Kil Kim, 《The History of Korea: 2nd edition》, ABC-CLIO, 2014. ISBN 1610695828, p.65-68
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரியாவின்_வரலாறு&oldid=3063422" இலிருந்து மீள்விக்கப்பட்டது