கொல்லிப்பாவை

கொல்லிப்பாவை என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலைமேல் இருந்த ஒரு அழகான பெண் உருவம் ஆகும். தமிழர்களின் சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட சங்ககால வள்ளல்களில் ஒருவன் வல்வில் ஓரி. இந்த வில்லில் வல்லமை பொருந்திய ஓரி மன்னரால் ஆளப்பட்ட மலை இந்தக் கொல்லிமலையாகும். இது கொல்லி மலைமேல் இருந்தபடியினாலே இதற்குக் கொல்லிப் பாவை என்னும் பெயர் வந்தது. இந்த மலைமேல் சென்று பார்த்தால், ஓர் அழகிய மங்கையின் உருவம், காண்பவர் மயங்கத்தக்கதாக தோன்றுமாம். அருகில் சென்று பார்த்தால், இது காட்சிக்கு மறைந்துவிடும் என்பர்.

இப்பெண் உருவம், இளவெயில் காயும் போது மிகுந்த அழகுடன் காணப்படுமாம். மேலும் இந்தப் பாவை, புயல் அடித்தாலும், பெருமழை பெய்தாலும், இடி விழுந்தாலும், வேறு எதனாலும் அழியாதது என்பவர். இதனாலே இதனைத் தெய்வப் பாவை என்றும், கடவுட்பாவை என்றும், மாயா இயற்கைப் பாவை என்றும் வினைமாண் பாவை என்றும், பூதம் அமைத்த விசித்திரப்பாவை என்று பலவாறு புலவர்கள் கூறினர்.

கொல்லி மலையில் இருந்த இந்தப் பாவையானது பொய் மான் கரடு போன்று ஒரு உருவெளித் தோற்றம். அதாவது, உள்ளதுபோலக் காணப்படுகிற ஒரு பொய்த்தோற்றம் என்று மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிடுகிறார்.[1]


பரணர் முதலானோர்

தொகு

கொல்லிப்பாவை பற்றிய செய்திகளைப் பரணர் தம் அகத்திணைப் பாடல்களில் தந்துள்ளார். இதுபற்றி மேலும் செய்திகளைத் தரும் பாடல்களைப் பாடியவர் இன்னார் என்று தெரியவில்லை.

ஓவியம்

தொகு

இந்தப் பாவை எழுதப்பட்ட ஓர் ஓவியம். இது கொல்லிமலையிலிருந்த ஒரு குடவரையில் எழுதப்பட்டிருந்தது. பொம்மை உருவம் செய்தலையும் சங்ககாலத்தில் எழுதுதல் என்றனர். இந்த வகையில் கொல்லிப்பாவை ஒரு சிலை எனவும் தெரிகிறது.

உருவம்

தொகு

பாடல்களில் வரும் தொடர்கள் தெய்வத்தாலோ, பூதத்தாலோ, கடவுளாலோ எழுதப்பட்டது இந்தப் பாவை என்று கொள்ளும்படியும் அமைந்துள்ளது.

தெய்வ உருவம்

தொகு

தலைவியானவள், ‘கருங்கட் தெய்வம் குடவரை எழுதிய நல்லியல் பாவை’ அன்ன மெல்லிய இயல்பை உடையவளாம்.[2]

பூத உருவம்

தொகு

கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிதியல் பாவை.[3]

கடவுள் உருவம்

தொகு

‘கடவுள் எழுதிய பாவை’ (கடவுள் உருவம் எழுதிய ஓவியம்) போல் தலைவி மடப்பத்தன்மை கொண்டவளாம்.[4]

இயற்கையில் அமைந்த பொம்மை

தொகு

குடவரையகத்துத் தெய்வம் காக்கும் ‘மாயா இயற்கைப் பாவை’ இது. காற்றுத் தாக்கி இடித்தாலும், கடுமழை பொழிந்தாலும், இடி தாக்கினாலும், உயிரினங்கள் ஊறு செய்தாலும், நிலம் நடுங்கினாலும் இதன் நலவுரு மாயாதாம்.[5] ஒப்புநோக்குக ஆய் பொதியமலைச் சூர்மகள்.[6]

முனிவர்கள் உணவாகக் கொள்ளும் பழம், தேன் முதலான உணவு வகைகள் மிக்கதாக விளங்குவது கொல்லிமலை. அதனால் இங்கும் பலரும் வந்துசெல்லும் இடமாக இம்மலைப் பகுதி விளங்கியது. இது முனிவர்கள் செய்யும் தவத்துக்கு இடையூறு விளைவித்தது. அதனால் முனிவர்களின் வேண்டுகோளின்படி தேவ-தச்சன் விசுவகர்மன் ஒரு பாவை உருவத்தை எழுதினான். காற்று, மழை, இடி, வெயில் முதலானவற்றால் கெடாமல் இருக்குமாறு எழுதினான். இது கொல்லிமலையின் மேற்கில் குடையப்பட்ட ஒரு பாறையில் எழுதினான். கொல்லிமலைக்குச் செல்பவர் இதன் அழகில் மயங்கி மாள்வர்.[7] இதனைக் கூறும் பாடல்:

 தாணு உலகில் கடல் முரசு ஆர்ப்பத் தரந்தரமாய்ப்
பூணு முலை மடவார் சேனை கொண்டு பொருது மலர்ப்
பாணன் முதல் எவரானாலும் கொல்லியம் பாவை முல்லை
வாள் நகையால் உள்ளுருக்குவதும் கொங்கு மண்டலமே. 25

ஆதாரம்

தொகு
  1. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி. 13, பக்கம்: 105, இளங்கணி பதிப்பகம், சென்னை, பதிப்பு: 2014
  2. பரணர் - குறுந்தொகை 89\1562,
    தெய்வம் எழுதிய வினைமாண் பாவை அன்னோள் - நற்றிணை 185
  3. நற்றிணை 192\ 2339
  4. பரணர் – அகம் 22\1524,
  5. பரணர் – நற்றிணை 201\1575
  6. பரணர் அகம் 198
  7. கொங்கு மண்டல சதகம், பாடல் 25, முனைவர். ந. ஆனந்தி உரை, பக்கம் 25

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லிப்பாவை&oldid=4270980" இலிருந்து மீள்விக்கப்பட்டது