சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை

சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை (1884 – 1937) தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞராவார்.

பிறப்பும், இசைப் பயிற்சியும் தொகு

சிதம்பரத்துக்கு அருகிலுள்ள ஆச்சாபுரம் எனும் சிற்றூரில் 1884 ஆம் ஆண்டு பிறந்தவர் வைத்தியநாத பிள்ளை. இவரின் பெற்றோர்:– தருமலிங்கத் தவில்காரர் – சௌந்திரவல்லியம்மாள். ‘கோட்டை’ சுப்பராய பிள்ளையிடம் நாதசுவரம் கற்கத் தொடங்கி பின்னர் கூறைநாடு நடேச பிள்ளையிடம் மாணவராகச் சேர்ந்தார். ஆசிரியர் தனது மாணவனுக்கு பயிற்சியின் ஆரம்பகாலத்தில் நூறு வர்ணங்களை கற்றுத் தந்தார்.

இசை வாழ்க்கை தொகு

சிதம்பரம் கோவிந்தராஜர் ஆலயத்தில் தனது ஆசிரியர் நடேச பிள்ளைக்கு உதவியாக அவருடன் நாதசுவரம் வாசித்து வந்தார். சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில் நவராத்திரி திருவிழாவின்போது முதன்முதலாக தனித்து வாசித்தார்.

‘பல்லவிச் சுரங்கம்’ எனப் போற்றப்பட்ட இவர், சிதம்பரம் கோவிந்தராஜர் கோவிலின் ஆஸ்தான வித்துவானாகவும், நடராஜர் ஆலயத்தின் ஆஸ்தான வித்துவானாகவும் பதவி வகித்தார்.

புகழ்பெற்ற தவில் கலைஞர்களான பழனி முத்தையா பிள்ளை, அம்மாப்பேட்டை பக்கிரிப்பிள்ளை, கரந்தை ரத்தினம் பிள்ளை, பாபநாசம் ஸ்ரீமான் பிள்ளை, திருச்செங்காட்டங்குடி ருத்ராபதி பிள்ளை, பந்தணைநல்லூர் மரகதம் பிள்ளை, வழிவூர் முத்துவீர் பிள்ளை, நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை, கும்பக்கோணம் தாதக்கிருஷ்ணன், திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை ஆகியோர் வைத்தியநாத பிள்ளைக்கு தவில் வாசித்துள்ளனர். இவருக்கு நிரந்தரத் தவில்காரராக பலகாலம் இருந்தவர் திருக்கடையூர் சின்னையாபிள்ளை என்பவராவார்.

மறைவு தொகு

1937 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை காலமானார்.

உசாத்துணை தொகு