சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி

சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி சங்ககாலச் சோழமன்னர்களில் ஒருவன். புலவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் இவன் பெற்ற வெற்றியைப் புகழ்ந்து பாடியுள்ளார். [1] இவனது இறுதிக் காலம் இலவந்திகைப்பள்ளி என்னுமிடத்தில் நிறைவுற்றது.

  • இவன் வேல் தாங்கித் தேரேறிப் போருக்குச் செல்வது வழக்கம். [2]
  • இவனைத் தாக்கியவர் வாழக் கண்டதும், அடி தொழுதவர் வருந்தக் கண்டதும் இல்லையாம்.
  • நெல்வயலில் களையெடுக்கும் உழத்தியர் சிறந்த ஆம்பல் [3], நெய்தல் பூக்களைக் களைந்து எறிவார்களாம்.
  • உழவர் விலாப் புடைக்க புதுநெல் சோறு தின்றுவிட்டு நெல்கட்டுகளைச் சுமந்து செல்லும்போது நடை தடுமாறுவார்களாம்.
  • உழவரின் சிறுவர்கள் வைக்கோல் போரில் ஏறி இளநீரையும், நுங்கையும் பறித்து விளையாடுவார்களாம்.

அடிக்குறிப்பு தொகு

  1. புறநானூறு 61
  2. எஃகு விளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி
  3. மலர்