தருமம்

(தர்மம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தருமம் அல்லது அறம் என்பது இந்து சமயம், பௌத்தம், சமணம் போன்ற இந்திய சமயங்களில் வாழ்க்கைக்கான சரியான வழிமுறையாகச் சொல்லப்பட்டிருக்கும் நீதி நெறி அல்லது போதனைகள் ஆகும். இது கொடை, கருணை, தயை போன்ற பல்வேறு பொருள் தரும் சொல்லாகவும் உள்ளது. இந்து சமயத்தை ’சனாதன தருமம்’ என்று அழைப்பர். வட மொழி நூலான மனுதரும சாத்திரம் வருணாசிரம தருமம் என நான்கினைக் குறிகிறது. பொதுவாக கொடையாளர்கள் அல்லது யாசிப்பவர்கள் தருமம் என்ற சொல்லை பயன்படுத்துவர்.

மனிதர்களைப் பொறுத்தவரை தருமம் என்றால் சரியான செயல்களைச் செய்வது, சரியான பாதையில் நடப்பது ஆகும். உலகத்திலுள்ள மனிதர்கள் இவ்வாறு நீதி நெறியில் வாழ்வது மட்டுமல்லாமல், வான் வெளியில் உலகம் உழல்வதும், அண்ட சராசரங்கள் ஓர் ஒழுங்கில் இயங்குவதும் தருமம் எனப்படும் இறைவனின் விதிகளில்தான் என்கிறது இந்து சமயம்.

வேதாந்த சாத்திரங்களின்படி ”எது தாங்குகின்றதோ அதுவே தர்மம்” என்று வரையறுத்துக் கூறுகிறது. தனி மனித தருமம், சமூக தருமம், இராஷ்டிர தருமம் அல்லது தேசிய தருமம் மற்றும் மனித சமூகத்திற்கான தருமம் என்ற ஐந்தாக தருமங்கள் உள்ளன. இந்து சமய தத்துவத்தில் தர்மம் என்பது நான்கு புருஷார்த்தங்களில் முதன்மையானதாகும்.

தனி மனித தருமம் அல்லது வியக்தி தருமம் தொகு

தனி மனித தருமம் அல்லது வியக்தி தருமம் என்பது ஒரு தனி மனிதன் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய தருமமாகும். வேதாந்த சாத்திரங்கள் கூறும் இல்லற தருமம், சமூக தருமம், இராஷ்டிர தருமம், மானவ தருமம் ஆகிய தருமங்களில் தனி மனிதன் கடைபிடிக்க வேண்டிய வியக்தி தருமங்கள் பின்வருமாறு:

  1. தம: புற உறுப்புகளை அடக்கி ஆள்வது
  2. சம: அக உறுப்புகளை அடக்கி ஆள்வது
  3. அகிம்சை: எவ்வுயிருக்கும் தீங்கு இழைக்காமல் இருத்தல்
  4. வாய்மை அல்லது சத்தியம்: மனதாலும் செயலாலும் வாய்மையைக் கடைப்பிடித்தல்
  5. பிரம்மச்சரியம்: உடல் தொடர்பான ஆசைகளையும் உணர்ச்சிகளையும் அடக்குதல்
  6. அக்ரோதா: கோபப்படாதிருத்தல்
  7. மகிழ்ச்சி: மனநிறைவு, மனத்திருப்தி
  8. தியாகம்: தன்னலத்தைத் துறத்தல்
  9. அபைஷுண: புறங்கூறாமை, இழித்துப் பேசாது இருத்தல்
  10. அலோலுப்த்வ: பேராசைப்படாதிருத்தல்
  11. அபரிக்கிரகம்: பிறரிடமிருந்து தேவையற்ற வெகுமதிகளைப் பெறாதிருத்தல்
  12. ஹ்ரீ: அடக்கத்துடன் இருத்தல்
  13. மார்தவ: மென்மையுடன் இருத்தல்
  14. தயா: கருணையுடன் இரக்கத்துடனும் இருத்தல்
  15. சாந்தி: மனதை அடக்கி அதனால் உண்டாகும் மன அமைதி
  16. க்ஷமா: மன்னிக்கும் தன்மை
  17. சௌசம்: உடல் மற்றும் மனதை தூய்மையாக வைத்திருத்தல்
  18. அத்ரோஹ: தீங்கு செய்யும் எண்ணம் இல்லாதிருத்தல்

சமூக தருமம் தொகு

தனி மனித தருமங்களை கடைப்பிடிக்கவர்கள் இணைந்தவர்களின் கூட்டமே சமூகம் ஆகும். இத்தகைய சமூகம் சீரிய முறையில் செயல்படும். அதுவே சமூக தர்மம் எனப்படும் சமாஜ தருமம் ஆகும். ஒரு சமூகம் பல்வேறு வகைப்பட்ட தியாகங்களைச் செய்வது என்பது மனித சமுதாய தர்மத்தின் அடிக்கல்லாக அமைகிறது. ஒரு சமூகம் கடைப்பிடிக்க வேண்டிய தருமங்கள்;

  1. அனைவரிடமும் அன்புகாட்டுதல்
  2. ஈகையை கடைப்பிடித்தல்.
  3. வாய்மையை கடைப்பிடித்தல்.
  4. விருந்தோம்பல்
  5. கீழ்த்தரமான உணர்வுகளை அடக்குதல்.
  6. பிறர்க்குத் துன்பத்தை தரவல்ல உண்மையத் தவிர்த்தல்.

இராஷ்டிர தருமம் அல்லது தேசிய தருமம் தொகு

நாடு சிதறுண்டால் சமூகம் நிலைக்காது. நாடு நல்ல நிலையில் இருக்க வேண்டுமானால் தனி நபர்கள் மற்றும் சமூகம் தியாகங்கள் மேற்கொள்ள வேண்டும். அதுவே இராஷ்ட்டிர தருமம் அல்லது தேசிய தருமம் ஆகும்.

மனித சமூகத்திற்கான தருமம் தொகு

மனித இனம் இன்றேல் நாடு, சமூகம் மற்றும் தனி நபர் இல்லை. எனவே மனித இனம் நிலை பெற்று இருக்க, தனி நபர்கள், சமூகங்கள் மற்றும் நாடுகள் ஒன்றிணைந்து பல விசயங்களை தியாகம் செய்ய வேண்டும்.

இவற்றையும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தருமம்&oldid=3913589" இலிருந்து மீள்விக்கப்பட்டது