கிரகஸ்தம் எனப்படும் இல்லறம் என்பது, ஒருவன் வர்ணாசிரம தர்மத்தின்படி, பிரம்மச்சர்யம் என்ற நிலையைக் கடந்து ஒரு பெண்னை திருமணம் செய்து கொண்டு நல்வழியில் பொருள் ஈட்டி கர்ம யோகம் மற்றும் பக்தி யோகம் வழியில் வாழ்க்கையை நடத்துவதாகும். இதுவே கிரகஸ்த தர்மத்தின் இலக்கணமாகும். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் வீடுபேறு அடைவதற்கு இல்லறமே நல்லறம் என்று கர்ம யோகம் எனும் தலைப்பில் விளக்கியுள்ளார். நன்மக்களை பெற்று தர்ம வழியில் ஈட்டிய பொருளை பயன்படுத்த வேண்டும்.[1][2][3]

கிரகஸ்த தர்ம கடமைகள் தொகு

இல்லற வாழ்வில் ஈடுபடுபவன் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டும். மேலும் தவம், யாகம், யக்ஞம், தானம், அகிம்சை, பொருமை ஆகிய நற்பண்புகளை இல்லற தர்மத்தில் கடைபிடிக்க வேண்டும். இல்லறத்தார்கள் பஞ்ச மகாயக்ஞங்கள் எனும் கர்மங்கள் செய்வது சிறந்தது என இந்து சமய வேத வேதாந்த சாத்திரங்கள் கூறுகிறது. யக்ஞம் ஐந்து வகைப்படும்.

1. தேவ / பிரம்ம யக்ஞம்:- வேத மந்திரங்களினால் வேள்விகள் வளர்த்து தேவர்களுக்கு ஹவிஸ் அளித்து மகிழ்விப்பதே தேவ அல்லது பிரம்ம யக்ஞம் எனப்படும்.

2. ரிஷி / முனி யக்ஞம்:- உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, இதிகாசங்கள், திருமுறைகள், திருக்குறள் போன்ற தெய்வீக நூல்களை கேட்டல், படித்தல் மற்றும் படித்தவைகளை மீண்டும் மீண்டும் மனதால் சிந்தித்தலே ரிஷி யக்ஞம் / முனி யக்ஞம் ஆகும்.

3. பித்ரு யக்ஞம்:- நீத்தார் வழிபாட்டின் மூலம் தமது மூதாதைர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் கொடுப்பதின் மூலம் இறந்த முன்னோர்களை மகிழ்விப்பது.

4. மனுஸ்ய யக்ஞம்:- வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அமுது படைத்து விருந்தோம்புவது.

5. பூத யக்ஞம்:- பசு, காகம் முதலிய விலங்குகளுக்கு உணவு படைத்தல்.

இல்லற தர்மத்தில் இருந்தாலும், பகவானிடம் பக்தி செலுத்த வேண்டும். படைக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் ஒரு காலாத்தில் அழியும் தன்மை உடையதோ அவ்வாறே கண்ணுக்குப் புலப்படாத சொர்க்கம் முதலிய லோகங்களும் அழியும் தன்மை உடையது என்று இல்லறத்தான் அறிந்து அதன்படி வாழ வேண்டும்.

உடல் மற்றும் வீடு போன்ற பொருட்களில் “ நான் - எனது ” (அகங்காரம் - மமகாரம்) என்ற கர்வம் இன்றி வாழ வேண்டும். பொறுப்புணர்வு கொண்ட மகன்களிடம், குடும்பப் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, கிரகஸ்தன் (இல்லறத்தான்), தன் மனைவியை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு அல்லது தன்னுடன் அழைத்துக் கொண்டு வனப் பிரஸ்த ஆசிரம (காட்டில் வாழ்தல்) தர்மத்தை ஏற்றுக் கொண்டு, பின்பு சந்நியாச தர்மத்தை ஏற்கவேண்டும்.

இவற்றையும் காண்க தொகு

உதவி நூல் தொகு

  • மனு தரும சாத்திரம், மூன்றாவது அத்தியாயம், சுலோகம் 67 முதல் 149 முடிய.

வெளி இணைப்புகள் தொகு

  • ஆதிசங்கரரின் வேதாந்த சூத்திரங்கள், தொகுதி 1 [1]
  • ஆதிசங்கரரின் வேதாந்த சூத்திரங்கள், தொகுதி 2 [2]

மேற்கோள்கள் தொகு

  1. S Radhakrishnan (1922), The Hindu Dharma, International Journal of Ethics, 33(1): 1-22
  2. Sahebrao Genu Nigal (1986). Axiological approach to the Vedas. Northern Book Centre. பக். 110–114. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-85119-18-X. https://books.google.com/books?id=mMZzmB4duPoC&q=vanaprastha&pg=PA112. 
  3. Manilal Bose (1998). "5. Grihastha Ashrama, Vanprastha and Sanyasa". Social and cultural history of ancient India. Concept Publishing Company. பக். 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7022-598-1. https://books.google.com/books?id=t_PpdZosif4C&q=vanaprastha&pg=PA68. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரகஸ்தம்&oldid=3890068" இலிருந்து மீள்விக்கப்பட்டது