துருவன் கோட்டை

Gengavaram Fort (துருவன் கோட்டை) இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி அருகில் கெங்கவரம் எனும் ஊரில் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக் கோட்டை மற்றும் தியாகதுர்கம் மட்டுமே நாம் அறிந்துள்ள கோட்டையாக உள்ளன. மலையின் மீது யாரும் எளிதில் சென்று வரமுடியாத காட்டுப்பகுதியில் வலிமையான கெங்கவரம் கோட்டை உள்ளது. இங்குள்ள பழமையும், வரலாறும் இதுவரை சரியாக வெளிவரவில்லை.


ஆட்சி செய்தவர்கள் தொகு

துருவன் கோட்டையின் கட்டமைப்பை கொண்டு பார்த்தால் முதலில் சோழர்கள் கீழ் இருந்த காடவராயர் மன்னனின் கோப்பெருஞ்சிங்கன் நான்கு கல்வெட்டுக்கள் கிடைத்தன. கோட்டையின் அமைப்பிலிருந்து விஜயநகரப் பேரரசின் செஞ்சி நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது என்பதை உறுதி செய்யலாம். பின்னர் மராத்தியர்களின் கீழ்வந்து ஆங்கிலேயர் ஆட்சியில் இடிக்கப்பட்டது என்று தெரியவருகிறது. இக்கோட்டையின் பாதுகாப்பிற்கு மலையில் சில பதுங்கு குழிகள், கட்டடங்கள் கண்டிருக்கிறனர். மேலும் மொக்கை ஓடை அருவி அருகில் மழையளவுமானி இருந்ததற்கான கட்டிட அமைப்பு உள்ளது.

கல்வெட்டு தொகு

 
இவ்வேரி அவனி ஆளப்பிறந்தான் ஏரி

இந்த கோட்டையில் உள்ள ஒரு கல்வெட்டில் இவ்வேரி அவனி ஆளப்பிறந்தான் ஏரி என்ற சோழர்கால கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது, அந்தக் கல்வெட்டு கூறுவது என்னவென்றால் இந்த ஏரியை அவனி ஆளப்பிறந்தான் (கோப்பெருஞ்சிங்கனுடைய ஒரு பட்டப் பெயராகும்) என்ற காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் வெட்டி கொடுத்தார். இக்கோட்டையில் குளத்தை உருவாக்கி இதில் சுவர்கள் அமைத்து சுனைகளையும் வெட்டி தந்தார் என்பதை சில கல்வெட்டுக்களும் பகருகின்றன.

கோட்டையின் அமைப்பு தொகு

இயற்கையாகவே சுனை போன்ற அமைப்பு குளம் போன்ற அமைப்பு உருவாகி உள்ளது. மலைகளின்மீது கண்காணிப்பதற்கு கோட்டைகளை கட்டி உள்ளனர். கெங்கவரம் மலைக்கோட்டை செஞ்சி கோட்டையை விட மிக உயரமாகவும் மிகவும் பழமையான கோட்டை என்று இதிலிருந்து தெரிகிறது. பலம் பொருந்திய மதில்கள், எளிதில் தாக்குதல் நடத்த முடியாத இயற்கை அறன்களோடு காட்டின் நடுவில் இந்த கோட்டை உள்ளது. மிகவும் பாதுகாப்பான கோட்டை என்பதால் கோட்டை மட்டுமின்றி சிறிய அளவில் நிர்வாகமும், விலை உயர்ந்த பொருட்களை பாதுகாக்க நிலவறைகளையும் ஏற்படுத்தி உள்ளனர்.

தடயங்கள் தொகு

சோழர்கள் இருந்ததற்கான தடயம் இங்கு உள்ளது. ஆதாரமாக இங்கு சோழர் கால மேற்கூரை ஓடுகள் கிடைத்துள்ளன. அதுமட்டுமில்லாமல் இரும்பில் பொருட்கள் செய்ய இரும்பு தாதுக்களை பயன்படுத்தினார்கள் என்று அங்கு கிடைத்த இரும்புத்தாதுகளை வைத்து உறுதிப்படுத்தலாம். மற்றும் இரும்பு ஆயுதங்களைத் தீட்ட, தீட்டுப் பாறைகள் இங்கு ஒரு சில இடங்களில் காணப்படுகின்றன, இங்கு ஏராளமான கட்டடங்கள் இருந்து இடிந்து மண் மேடாகிய தடயங்கள் உள்ளன. சிறிய கோவில்கள், வற்றாத சுனைகள் இவற்றுடன் சோழர் காலத்தைச் சேர்ந்த பாறையில் வடித்த சிவலிங்கம், விஜயநகரப் பேரரசுக் கால பெருமாள், ஆஞ்சநேயர் சிலைகள் உள்ளன. கெங்கவரம் ஐயனாரப்பன் கோவிலில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் கால நடுகல் ஒன்றும் உள்ளது.

கட்டடங்கள் தொகு

சிறிய அளவிலான தானிய களஞ்சியமும், இதன் அடியில் எனிதில் கண்டுபிடிக்க முடியாத மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட‌ இரண்டு இரகசிய பாதுகாப்பு அறைகளை கட்டி உள்ளனர்.

துருவன் கோட்டை பாறை ஓவியங்கள் தொகு

கோட்டையின் கீழ் பகுதியில், கோட்டை கட்டுவதற்கு முன்பாகவே பழங்குடியினர் வாழ்ந்து வந்துள்ளதற்கான தடயங்கள் உள்ளன. இங்குள்ள குகைகளில் கோட்டு உருவங்களும், செங்கோட்டு உருவங்களும் பாறையில் வரை யப்பட்டுள்ளன. இவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

மேற்கோள்கள் தொகு

https://m.dinamalar.com/detail.php?id=2074670

"https://ta.wikipedia.org/w/index.php?title=துருவன்_கோட்டை&oldid=3574467" இலிருந்து மீள்விக்கப்பட்டது