தெய்வச் சிலையார்

தெய்வச் சிலையார் (Deivachilaiyaar) தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்கு உரை எழுதிய இடைக்கால தமிழ் மொழி உரையாசிரியர்களில் ஒருவர். இவரது காலம் பொ.ஊ. 15 ஆம் நூற்றாண்டு.[1] இவர் வடமொழியிலும் புலமை மிக்கவர் எனக் கருதப்படுகின்றது.

இளம்பூரணர் உரை தொல்காப்பியம் முழுமைக்கும் உள்ளது. நச்சினார்க்கினியர் உரை தொல்காப்பியம் ஏறக்குறைய தொல்காப்பியம் முழுமைக்கும் உள்ளது. இவர் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணிக்கும் உரை எழுதியுள்ளார். பேராசிரியர் உரை தொல்காப்பியம் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்னும் இறுதி நூன்கு இயல்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

தொல்காப்பியம் சொல்லதிகாரத்துக்கு மட்டும் ஐந்துபேர் எழுதிய உரைகள் கிடைத்துள்ளன. அறுவர் எனக் கூறுவர்.[2] இந்த ஐவருள் ஒருவர் தெய்வச்சிலையார். ஏனையோர் இளம்பூரணர், சேனாவரையர், கல்லாடனார், நச்சினார்க்கினியர் ஆகியோர்

தெய்வச் சிலையார் என்னும் பெயரைக்கொண்டு இவர் தெய்வங்களுக்குக் கற்சிலை வடித்து வாழ்ந்தவர் என எண்ண இடமுண்டு. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் இவரது உரை ஏனைய நால்வர் உரையினும் சிறந்தது என்று குறிப்பிடுகிறார்.

"இவர் சைவ நெறியாளர். வேதாகமத் துணிவு ஒருவர்க்கு உணர்த்துமிடத்து உலகும் உயிரும் பரமும் அனாதி, பதியும் பசுவும் பாசமும் அனாதி என வரும்"[3] என உரை எழுதுவதால் சைவர் என்பது புலனாகிறது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 100. 
  2. அறுவரிர் ஒருவரான பேராசிரியர் உரை கிடைக்கவில்லை.
  3. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூத்திரம் 32
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வச்_சிலையார்&oldid=3833695" இலிருந்து மீள்விக்கப்பட்டது