தெலுங்குச் சோழர்கள்

தெலுங்குச் சோழர்கள் எல்லோரும் தங்களைச் ரேணாட்டு சோழர்கள் எனச் சொல்லிக் கொண்டார்கள். இவர்களில் ஐந்து வம்சங்கள் வெவ்வெறு காலகட்டங்களில் வெவ்வேறு இடங்களை ஆண்டுள்ளனர். இவர்கள் ஆண்ட பகுதிவாரியாக இவர்கள் பிரித்து அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

இரேணாட்டுச் சோழர் தொகு

இவர்களில் ஒரு பிரிவினர் ரேநாட்டுச் சோழர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் நாடு ரேணாடு ஏழாயிரம் என குறிப்பிடப்பட்டது. இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர் சூரிய மரபினர் என்றும் காசியப கோத்திரத்தினர் என்றும் சொல்லிக்கொண்டனர். இவர்களின் பொ.ஊ. 6 முதல் 8ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கடப்பை மாவட்டத்தில் காணப்படுகின்றன.

பொத்தப்பி சோழர் தொகு

இரேணாட்டுச்சோழர் ஆட்சி முடிந்ததும் பொத்தப்பு அரச பரம்பரை தொடங்குகிறது. இவர்களில் முதலில் குறிப்பிட வேண்டியவர் மதுராந்தக பொத்தப்பிச் சோழன். இவர் மதுரையை வென்றதாகவும் பொத்தப்பி என்ற ஊரை உண்டாக்கியதாகவும் இக்காரணங்களால் இவர் இப்பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. பொத்தப்பி என்ற ஊர் அதே பெயரில் கடப்பை மாவட்டத்தில் புல்லம்பேட்டை வட்டத்தில் இப்போதும் இருந்துவரும் ஊரே என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

மற்றோர் அரசன் வித்யன் என்பவன்(தமிழ்ச் சோழ கல்வெட்டுகளில் விச்சயன் என்று சொல்லப்பட்டிருக்கிறான்). இவன் உஜ்ஜபுரி என்னுமிடத்தில்(பெல்லாரி மாவட்டம் குட்லிகி வட்டம், உஜ்ஜினி) உச்சியில் கருடன் வைத்த வெற்றுத்தூணை நிறுத்தியுள்ளான். இத்தூணில் உள்ள வரலாற்றுப் பகுதி விக்கிரம சோழனின் சிற்றரசனான பேட்டா என்பவனுடன் தொடங்குகிறது. பேட்டாவின் மகன் ஏற சித்தி என்பவனுக்கு நல்ல சித்தி என்ற மன்மசித்தன், பேட்டா, தம்முசித்த என்ற மூன்று ஆண்மக்கள் இருந்தார்கள் என்று கல்வெட்டு கூறுகிறது.

வேலநாட்டி சோழர்கள் தொகு

முதலாம் குலோத்துங்க சோழன், மற்றும் அவனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவர்கள் ஆகியோருடைய பிரதிநிதியினராக இந்த வமிசத்தைச் சேர்ந்தவர்கள் தெலுங்க நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்ததை ஒவ்வோர் ஆட்சியின் கல்வெட்டுக்களும் உறுதிபடுத்துகின்றன. இரண்டாம் இராஜேந்திர சோழன் மற்றும் மூன்றாம் குலோத்துங்கன் காலப்பகுதியில் தெலுங்குச் சோடர்களின் வரலாற்றுக் காலவரை, அரச மரபுவழி ஆகியவற்றில் பல சிக்கல்கள் உண்டாகின்றன. தெலுங்குச் சோடர்களின் அதிகாரத்தையும் முக்கியத்துவத்தையும் குறித்துக் கல்வெட்டு, இலக்கிய ஆதாரங்கள் தங்குதடையின்றி கிடைக்கின்றன. ஆனாலும் இந்த வகை அரசர்களின் அரச மரபுகளின் வரலாற்றை தொடர்ச்சியாகவும் முரண்பாடில்லாமலும் பொருத்தமாயும் எழுதுவதற்கான முயற்சிகள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.

மற்ற தெலுங்குச்சோழர்கள் தொகு

இது தவிர கோனிடேனா சோழர், நன்னூரூ சோழர், நெல்லூர் சோழர்கள் என்ற மூன்று தெலுங்குச்சோழ அரசமரபுகளும் இன்றைய கடப்பை, குண்டூர், நெல்லூர், பிரகாசம் போன்ற மாவட்டங்களில் பல பகுதிகளை ஆண்டுள்ளனர்.

களப்பிரர் காலம் தொகு

 
களப்பிரர் கால ரேணாடு. (இளம் ஊதா) பொ.பி. 3-5 நூற்றாண்டு.[1]

களப்பிரர் ஆட்சியில் சோழர்கள் தெலுங்கு தேசம் சென்று தனியாட்சி நிறுவினர். அவர்களே தெலுங்குச் சோழர்கள் என்ற கருத்து பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. களப்பிரர் ஆட்சியில் தமிழகம், நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலுங்குச்_சோழர்கள்&oldid=3521558" இலிருந்து மீள்விக்கப்பட்டது