தேசியப் பணியாளர் தேர்வு முகமை

தேசியப் பணியாளர் தேர்வு முகமை (National Recruitment Agency(NRA), இந்திய அரசுப் பணியாளர்களை தேர்வு செய்வதே இந்த முகமையின் நோக்கமாகும். இப்புது முகமைக்கு நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அமைச்சரவை ஆகஸ்டு 2020-இல் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் தலைமையிடம் புது தில்லியில் இருக்கும்.[2] மத்தியப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் கீழ் இந்த தேர்வு முகமை செயல்படுகிறது.

தேசியப் பணியாளர் தேர்வு முகமை
சுருக்கம்NRA
உருவாக்கம்19 ஆகத்து 2020; 3 ஆண்டுகள் முன்னர் (2020-08-19)
வகைகுடிமைப் பணிகள் மற்றும் இராணுவப் பணிகள் தேர்வு முகமை
  • பிரிவு C (தொழில் நுட்பம் சார்ந்தது)
  • பிரிவு D (தொழில் நுட்பம் சாராதது)


அரசுடமை வங்கிப் பணிகளுக்கு தேர்வு முகமையின் பூர்வாங்கத் (Preliminary) தேர்வு மட்டும்)[1]

  • புரபேசனரி அதிகார் (Probationary Officer)
  • சிறப்பு அதிகாரி
  • எழுத்தர்
  • ஏவலர்/பாதுகாவலர் (Attendent/Security Guard)
தலைமையகம்புது தில்லி, இந்தியா
சேவை பகுதி
இந்தியா

தற்போது கெஜட் தகுதி உடைய அதிகாரிகளை மட்டும் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்கிறது. கெஜட் தகுதி அல்லாத பிரிவு சி (Group C) மற்றும் டி பிரிவு பணியாளர்களை தேர்வு செய்வதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission (SSC), இரயில்வே பணியாளர்கள் தேர்வு வாரியம் (Railway Recruitment Board (RRB) மற்றும் வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection (IBPS) போட்டித் தேர்வுகள் நடத்துகிறது.

இனி ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் தவிர, பிற அனைத்து வகையான பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய, தேசியப் பணியாளர் முகமை நடத்தும் பொது தகுதி தேர்வு (Common Eligibility Test) நடத்தும்.

அமைப்பு தொகு

தேசியப் பணியாளர் தேர்வு முகமையின் குழு உறுப்பினர்களாக இந்திய அரசின் நிதித்துறை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், இரயில்வே பணியாளர்கள் தேர்வு வாரியம் மற்றும் வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் இடம் பெறுவர். இந்த தேர்வு முகமை சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் [3] (Societies Registration Act) கீழ் பதிவு செய்யப்படும்.

புதிய முகமையால் தேர்வர்களுக்கு ஏற்படும் நன்மைகள் தொகு

தேர்வர்கள் (Candidates) இதுவரை இரயில்வே, பொதுத்துறை வங்கி இந்திய அரசுப் பணிகளுக்கு தனித்தனியாக தேர்வுகள் எழுதிக் கொண்டிருந்ததால் நேரம் மற்றும் பணம் அதிகம் செலவிட வேண்டியதிருந்தது. தற்போது மேற்கண்ட இந்திய அரசின் பல துறைகளுக்கும் சேர்த்து, தேசியப் பணியாளர் தேர்வு முகமை நடத்தும் ஒரு பொதுத் தகுதி தேர்வு மூலம் தேர்வர்கள் ஒரு கட்டணத்தை மட்டும் செலுத்தி தேர்வு எழுதுவதால் நேரமும், பணமும் குறைகிறது. மேலும் தேர்வர்களின் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், தேர்வர்களை இந்திய அரசுப் பணி, இரயில்வே அல்லது வங்கிப்பணியில் அமர்த்தப்படுவர். தற்போது நாடு முழுவதும் 177 மாவட்டங்களில் 1,000 தேர்வு மையங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தேர்வு மையங்களை தேர்வர்களே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண் தேர்வர்களுக்கு அவர்கள் விரும்பும் மையங்களில் தேர்வு எழுத வாய்ப்பு உள்ளது.

பொது தகுதித் தேர்வு (Common Eligibility Test (CET) தொகு

ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும் பொதுத் தகுதித் தேர்வு மூன்று நிலைகள் கொண்டது. முதல் நிலைத் தேர்வு ஆன்லைனில் கணினி மூலம் நடத்தப்படும். இதில் தேர்வு பெறும் தேர்வர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், இரயில்வே பணியாளர்கள் தேர்வு வாரியம் மற்றும் வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனம் நடத்தும் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலைத் தேர்வுகளில் தேற வேண்டும். [4][5]

ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும் பொதுத் தகுதித் தேர்வில் பட்டதாரிகள், மேனிலைப் பள்ளித் தேர்வு (+2 ) அல்லது அதற்கு இணையான படிப்புகளில் தேறியவர்கள், பத்தாம் வகுப்பு (Matriculation) தேறியவர்களுக்கு தனித்தனியாக பொது தகுதித் தேர்வு நடைபெறும். படிப்பு ஏற்றவாறு தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் பொதுவாக இருக்கும்.

இத்தேர்வினை தேர்வர்கள் எத்தனை முறை வேண்டுமானுலும் எழுதலாம். ஆனால் வயது வரம்பு உண்டு. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியல் சமூகத்தினருக்கும், பட்டியல் பழங்குடியினருக்கும் மட்டும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வினை தமிழ் உள்ளிட்ட 12 மாநில மொழிகளிலும் எழுத முடியும். பொது தகுதித் தேர்வின் முடிவில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் 3 ஆண்டுகளுக்குப் பொருந்தும். இருப்பினும் சிறந்த மதிப்பெண்கள் வேட்பாளர்களின் தற்போதைய மதிப்பெண்ணாக கருதப்படும்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Anulekha Ray (19 August 2020). "National Recruitment Agency gets Cabinet's nod. Common Eligibility Test for govt jobs, PSBs". Livemint. https://www.livemint.com/news/india/cabinet-approves-national-recruitment-agency-key-points-11597831561356.html. பார்த்த நாள்: 19 August 2020. 
  2. Explained: How National Recruitment Agency will streamline the recruitment process
  3. Societies Registration Act, 1860
  4. All you need to know about National Recruitment Agency
  5. National Recruitment Agency: All you need to know