தேவிகாபுரம் நடுகற்கள்

போரில் வீரமரணம் எய்திய மறவர்களுக்கு‍ நடுகல் வைத்து‍ வணங்கும் வழக்கம் தமிழகத்தில் சங்ககாலத்திற்கு‍ முன்பிருந்தே இருந்துவருகிறது. தொல்காப்பியத்தில் நடுகல் வைத்து‍ வழிபடுவதற்குரிய இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கிறது. நடுகற்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் விரவிக் காணப்படுகின்றன. அவற்றில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியிலிருந்து‍ தர்மபுரி வரையிலும் மிக அதிக அளவு நடுகற்கள் காணப்படுகின்றன. தமிழகத்தில் மொத்தமுள்ள நடுகற்களில் இப்பகுதியில் மட்டும் 75 விழுக்காடு‍ காணப்படுகின்றன. தேவிகாபுரமும்[1] [2]அதைச் சுற்றியுள்ள நரசிங்கபுரம், தச்சாம்பாடி, முருகமங்கலம் போன்ற பகுதிகளிலும் தொன்மையான நடுகற்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு‍ வித வடிவத்தையும் அமைப்பையும் கொண்டுள்ளன.

(இவற்றை நாயக்கன் காலத்தில் வைத்தது போல் 14 மற்றும் 15 ம் நூற்றாண்டு என சித்தரித்துள்ளது இவர்களின் முழுப்பொய்யை பூசணிக்காயின் உள் அடக்குவது தெளிவாகத் தெரிகிறது.அக்காலத்தில் நடுகல் மரபு முற்றிலும் குறைந்திருக்கும் என்பதே உண்மை.நடுகற்கள் மருதநில நாகரீகங்களுக்கும் முந்தைய மரபு.ஆநிரை கவர்தல் மீட்டல் என்பது அப்பொழுது ஆநிரைகள் மட்டுமே செல்லமாகக் கருதப்பட்ட பொழுது.பின்னர் மருதநில நாகரீகங்களுக்குப் பின் செல்வங்கள் என்பது விதை நெல்லும் பண்ட மாற்றில் கிடைத்த நவ இரத்தினங்களும்.ஆக பழைய மரபை 14 ம் நூற்றாண்டு எனப் புணைந்துள்ளனர்.)


நடுகற்களின் காலம் மற்றும் அமைப்பின் அடிப்படையில் வேறுபடுத்தலாம். தேவிகாபுரத்தில் உள்ள நடுகற்களில் பெரும்பான்மையானவை 14/15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சில 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. நடுகற்களின் வகையைக் கொண்டு‍ கீழ்க்கண்டவாறு‍ பட்டியலிடலாம். தொறு நடுகல், சதிக்கல் ,வேடியப்பன் கோயில், ஏரிகாத்த வீரன் நடுகல்,அய்யனார் நடுகல், நவகண்டம்

தொரு நடுகல் தொகு

 
வீரக்கல்

கோயிலின் வாயிற்புறத்தே ஒரு‍ நடுகல் உள்ளது. இதில் உள்ள வீரனின் வலக்கையில் ஒரு‍ வாளும் இடக்கையில் கேடயமும் வைத்துள்ளார். அருகே ஒரு‍ மாடு‍ இவ்வீரனைப் பார்த்த வாறு‍ அமைந்துள்ளது. இந்நடுகல் தொரு என்ற மாட்டுக்காக(நிரை கவர்தல் நிரை மீண்டல்) சண்டையிட்டு‍ உயிர் நீத்த வீரனைக்குறிக்கும், இது‍ 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

அய்யனார் நடுகல் தொகு

கிழக்குநோக்கி அமைந்துள்ள இந்த நடுகல்லில் ஒரு‍ வீரனின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அவன் தனது‍ வலது‍ காலை மடக்கியும் இடது‍ காலை கீழே தொங்கவிட்டபடி‍ கையில் வாளுடன் கம்பீரமாக காட்சிளிக்கிறான். இந்த ஐய்யனார் நடுகல் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்து.

வேடியப்பன் நடுகல் தொகு

தேவிகாபுரம் போளுர் செல்லும் சாலையில் வேடர் பறி மண்டபம் அருகே இந்நடுகல் உள்ளது. இந்நடுகல்லில் உள்ள வீரனின் வலக்கையில் ஒரு‍ வாளும் இடக்கையில் ஒரு‍ கேடயமும் உள்ளது. இது‍ 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதே போன்று‍ மலையான்புறவடை – மொடையூர் செல்லும் சாலையில் உள்ளது. இதுவும் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதே போன்று‍ முருகமங்கலம் ஏரிக்குள்ளும் ஒரு‍ நடுகல் உள்ளது. இது‍ ஏரியைக் காத்த போது‍ ஏற்பட்ட சண்டையில் இறந்ததினால் அந்த வீரனுக்கு‍ நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.

சதிக்கல் தொகு

 
சதிக்கல்

தேவிகாபுரம் அல்லிக்குளத்திற்கு‍ அருகில் இந்நடுகல் உள்ளது. இந்நடுகல்லில் ஒரு‍ ஆண், பெண் உருவச் சிலைகள் உள்ளன. இதை நோக்கும் போது‍ வீரமணம் அடைந்த ஆணுடன் பெண்ணும் விட்டிருப்பதைக் குறிக்கிறது. . இது‍ போன்ற நடுகற்கள் சதிக்கல் அல்லது‍ தீப்பாய்ந்தாள் என்று‍ அழைக்கப்பெற்று‍ சில இடங்களில் கோயில் வழிபாடாகவே இருந்து‍ வருகிறது. இது‍ 14/15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதே போல கரட்டான் குளக்கரை செல்லும் சாலையின் இடது‍ புறத்தில் உள்ள சதிக்கல் சிறு‍ கோயில் போல கட்டி‍ வழிபட்டு‍ வருகின்றனர். இதுவும் 15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். அதே போல 18 ஆம் நூற்றாண்டுக் சதிக்கல் ஒன்று‍ சேத்துப்பட்டு‍ ரோட்டில் மரத்தடியில் உள்ளது.

அய்யனார் நடுகல் தொகு

 
அய்யனார்நடுகல்

நிலத்தின் கரையோரம் உள்ள சப்பாத்திக் கள்ளி செடிகளுக்குள் மண்மூடி‍ புதைந்துபோன நிலையில் இரண்டு‍ நடுகற்கள் உள்ளன. இவை தற்போது‍ மண்நீக்கி பார்‌வைக்கு‍ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் இடப்புறம் உள்ள நடுகல்லில் ஒரு‍ வீரன் யானை மீதமர்ந்த நிலையில் உள்ளார். இது‍ அய்யனார் சிலை போலவும் காட்சியளிக்கிறது. மற்றொன்றில் ஆண் பெண் என இரண்டு‍ உருவங்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஆண் தன் கையில் வாள் வைத்துள்ளார். பெண் தனது‍ வலது‍ கையில் குழந்தையை வைத்துள்ளது போன்ற‍ சிற்பம் உள்ளது. கையில் குழந்தை போன்ற சிற்பம் உள்ளது‍ மிகச் சிறப்புவாய்ந்தது‍ மட்டுமல்லாது‍ அரியவகை நடுகல் வகையாகவும் உள்ளது. வீரன் இறந்த பிறகு‍ அவது‍ மனைவியும் குழந்தையும் உடன் உயிர்விட்டிருப்பதை இந்நடுகல் காட்டுகிறது. இவ்விரு‍ நடுகற்களைப்பற்றி மேலும் விரிவாக ஆய்வு செய்யப்படவேண்டும்.

நவகண்டம் தொகு

 
நவகண்டம் நடுகல்

தேவரடியார் குளக்கரையின் தெற்குக்கரையில் மேற்கு‍ப் பார்த்த வண்ணம் ஒரு‍ நடுகல்லும் ஒருபெண் தெய்வ சிலையும் உள்ளது. இந்நடுகல்லில் உள்ள வீரன் தன் வலது‍ கையால் தன் தலையைக் வெட்டிக்கொள்வது‍ போன்று‍ அமைக்கப்பட்டுள்ளது. இவ்வகையான நடுகற்களுக்கு‍ நவகண்டம் என்று‍ குறிப்பிடுகின்றனர். இந்நடுகல்லில் உள்ள வீரன் போரில் வெற்றி பெற்றால் தன் தலையையே காணிக்கையாகச் செலுத்துவதாகக் கடவுளிடம் வேண்டிக்கொண்டு‍ அதன்படி‍ வெற்றி பெற்ற பிறகு‍ தன் தலையை வெட்டி‍க் காணிக்கையை நிறைவேற்றுவது‍ போன்ற காட்சியாகும் இக்காட்சிப் பற்றிய செய்தி சிலப்பதிகாரம் மற்றும் கலிங்கத்துப்பரணியில் இடம் பெற்றுள்ளது. இந்நடுகல் 14/15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும்.

குதிரை வீரன் நடுகல் தொகு

தேவிகாபுரத்தில் உள்ள ஊர்க்காளியம்மன் கோயில் தென்புறத்தில் உள்ள பழைய இடிந்த கோயிலின் அருகில் ஒரு நடுகல் உள்ளது. இந்நடுகல்லில் குதிரை மீது அமர்ந்து போர்செய்யும் ஒரு வீரனின் சிற்பம் மிக அழகாக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. இதில் பாய்ந்தோடும் குதிரையில் விசைகொண்டு தாக்குவதற்கு தலை சாய்த்தவாறு வீரன் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. குதிரையின் இரண்டு பக்கத்திலும் பெண் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது இரண்டு மனைவியரைக்கொண்ட வீரனின் கல்லாகும். இது 14/15 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஆகும். இதன் அருகிகே பூமிக்குள் புதைந்துபோயுள்ள கல்கட்டங்கள், மட்பாண்டங்கள் ஆங்காங்கே தெரிகின்றன. இவற்றை நோக்கும் போது இவ்விடம் ஒரு காலத்தில் குடியிருப்பாக இருந்த இடம் என்று தெரிகிறது.

குளக்கரவாடி‍ நடுகல் தொகு

குளக்கரவாடி‍ ஏரியின் கரையில் மேற்கு‍ பக்கம் பார்த்த நடுகல் ஒன்று‍ உள்ளது. இதில் உள்ள வீரனின் கையில் வில் அம்பும் முதுகில் அம்பரா துணியுடன்(அம்பு அறாத துணி – எடுக்க எடுக்க குறையாத அம்புகள் உடைய துணி) காணப்படுகிறது. சோழர் காலத்தைச் சேர்ந்த இந்நடுகல் 12ம் நூற்றாண்டைச் சார்‌ந்தது.

ராவுத்தன் குளக்கரை நடுகல் தொகு

தேவிகாபுரம் கோயில் கல்வெட்டுகளில் இக்குளம் சிங்கை ராவுத்தன் தாங்கல் என்று‍ குறிப்பிடப்பட்டுள்ளது. இது‍ தற்போது‍ நரசி்ங்கபுரம் மதுரா குப்பம் கிராம எல்லையில் மலையன் புறவடைக்கு‍ அருகில் உள்ளது. இந்நடுகல்லில் வீரனின் வலது‍ கையில் நீளமான போர்வாளைத் தலைக்கு‍ மேல் ஓங்கியும் இடது‍ கையில் கேடயத்தைப் பிடித்துக்கொண்டும் உள்ளபடி‍ வீரம் செறிந்தவனாகப் செதுக்கப்பட்டிருக்கிறான். வீரனின் தலையில் உள்ள தலைப்பாகையைச் சுற்றிலும் சிகுரு‍ போன்ற ஒரு‍ தலையணி காணப்படுகிறது. இந்த சிகுரு‍ போன்ற அமைப்பு விஜயநகர பேரரசுக்கால சிலைகளில் காட்டப்பட்டுள்ளதால் இந்நடுகல்லும் விஜயநகர பேரரசு‍ காலத்தைச் சேர்ந்தவை எனக் கொள்ளலாம்.

குப்பம் நடுகல் தொகு

வீரன் தனது‍ இடது‍ பக்கம் நோக்கி இடது‍ கையில் ஒரு‍ வில்லைப் பிடித்து‍ வலது‍ கையில் ஓர் அம்பைப் பற்றி எய்வது‍ போது‍ சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. வீரனின் தலையில் தலைப்பாகையும், இடையில் ஒர் ஆடையும் ஒரு‍ வாளும் செருகியிருப்பது‍ போன்ற வீரம் மிக்க நடுகல்லாக உள்ளது. இந்நடுகல்லை ஆய்வு செய்த முன்னாள் வேலூர் அருங்காட்சிய காப்பாட்சியாளர் காந்தி, இந்நடுகல்லின் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது‍ என்று‍ குறிப்பிட்டுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "சேத்துப்பட்டு அருகே 14ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு கால வீர நடுகல் கண்டெடுப்பு". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 2021-03-25.
  2. "சேத்துப்பட்டு அருகே 14ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு கால 'வீர நடுகல்' கண்டெடுப்பு". www.dinakaran.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-25.[தொடர்பிழந்த இணைப்பு]

உசாத்துணைகள் தொகு

  • கலைமாமணி கவிஞர் கல்லாடன், வரலாற்றுச் சுடர்கள் (பக். 132-134),
  • Gandhi M, Sculpture in the Government Museum, Vellore, Ayya House, Nambedu, Polur Tk,

வெளி இணைப்பு தொகு

Hero stones of South India - முகநூல் நடுகல் குழு [1] பரணிடப்பட்டது 2011-12-04 at the வந்தவழி இயந்திரம் [2]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவிகாபுரம்_நடுகற்கள்&oldid=3713065" இலிருந்து மீள்விக்கப்பட்டது