பாலைவன யானைகள்

பாலைவன யானைகள் (Desert elephants) ஆப்பிரிக்காவின் நமீபியா, மாலி மற்றும் சகாரா பாலைவனப் பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் வாழிடங்களைக் கொண்டுள்ளன. இவை சிறு மரம், செடி, கொடிகள் அடர்ந்த புதர் பகுதிகளில் வாழ்கின்றன.

நமீபியாவின் உவப் ஆற்றில் பாலைவன யானைகள்

பருவ காலங்களில் உணவு மற்றும் குடிநீர் ஆதாரங்களுக்காக அலைந்து திரிந்து, தங்கள் வாழ்விடங்களை மாற்றிக் கொள்கின்றன. பாலைவன யானைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமிப்பதாலும், வேட்டையாடுவதாலும் பாலைவன யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே செல்கிறது.

நமீபியா தொகு

 
நமீபியாவின் எடோசா தேசியப் பூங்காவில் நீர் அருந்தும் பாலைவன யானை

நமீபியாவின் வடமேற்குப் பகுதியில் குனெனே பகுதியில் குன்றுகளும், கற்களும் நிறைந்த மணற்பாங்கான, பாலைவனத்தில் 1,15,154 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்[1]பாலைவன யானைகள் வாழ்கிறன. இப்பகுதியில் இருபதாம் நூற்றாண்டில் 3,000 பாலைவன யானைகள் இருந்ததாக கணக்கிடப்பட்டது. 2013-இல் தற்போது இவ்வானைகளின் தொகை 6,00 மட்டுமே.[2]

நமீபியாவில் 1995-96 ஆண்டுகளில் நல்ல மழை பெய்ததால், இப்பாலைவன யானைகள் தெற்கு நோக்கிப் பயணித்து உகப் ஆறு வரை தங்களது வாழ்விடங்களை விரித்துக் கொண்டன.[1]

நமீபியாவின் ஹொநிப் ஆற்றுப் பகுதியல் வாழும் ஆண் பாலைவன யானைகளுக்கு தந்தங்கள் உள்ளன. ஆனால் மூன்றில் ஒரு பங்கு பெண் யானைகளுக்கு தந்தங்கள் இல்லை.

வயதான ஆண் யானைகள் தனித்து வாழ்கிறன. பெண் யானைகள் தாங்கள் ஈன்ற குட்டிகள், சகோதரி யானைகள் மற்றும் தங்களைச் சார்ந்து வாழும் இளம் யானைகளுடன் சிறு கூட்டமாக வாழ்கின்றன. குடிநீர் மற்றும் உணவிற்காக ஆறு போன்ற நீர்நிலைகளின் அருகில் வாழும் இவ்வகை யானைகள், சில நேரங்களில் மலைப்பாங்கான இடங்களுக்குப் பயணித்து, தங்களுக்கு மிகவும் பிடித்த புதர்ச் செடிகளை உண்கின்றன.[3]

மாலி தொகு

வட ஆப்பிரிக்கா கண்டத்தின் சகாரா பாலைவனத்தில் பரவலாக காணப்பட்ட பாலைவன யானைகள், தற்போது மாலி நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள நைஜர் ஆறு பாயும் திம்புகுட்டுப் பகுதியில் உள்ள சகாரா பாலைவனத்தில் மட்டும் சுமார் 400 அளவில் காணப்படுகின்றன. இவ்வகை யானைகள் மனிதர்களால் வேட்டையாடப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறுகிவிட்டது.

இப்பாலைவன யானைகள் ஆண்டுதோறும், நீர் ஆதாரங்கள் மற்றும் உணவிற்காக மாலி மற்றும் புர்க்கினா பாசோ நாடுகளில், நாள் ஒன்றுக்கு 35 கிலோ மீட்டர் வரை நடக்கின்றன. இவை ஆண்டிற்கு 300 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாலைவனப் பகுதிகளில் பயணிக்கிறன. [4]

1983-ஆம் ஆண்டின் வறட்சியின் போது மாலி நாட்டு அரசு இப்பாலைவன யாணைகளின் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக குளம், குட்டைகளை தூர் வாரியது.[4] 2008-ஆம் ஆண்டின் கடும் வறட்சியின் போது, நீர் நிலைகளை தேடி அலையும் போது குட்டியானைகள் பாலைவனத்தில் பயணிக்க திறனின்றி இறந்தன. [5]

உடல் அமைப்பு & பழக்க வழக்கங்கள் தொகு

இவ்வானைகள் பாலைவனத்தில் வாழ்வதற்கு ஏற்ற உடல் தகவமைப்பைக் கொண்டுள்ளன. இவ்வானைகள் அகலமான, நீண்ட கால்களும், பிற ஆப்பிரிக்கப் புதர் யாணைகளை விட சிறிய உடலையும் கொண்டுள்ளன.

இவை பாலைவனத்தில் கிடைக்கும் சிறு செடி கொடிகள், மற்றும் புற்களை மட்டும் உண்கிறன. நன்கு வளர்ந்த பாலைவன யானை நாள் ஒன்றிற்கு 250 கிலோ உணவும், 160 லிட்டர் நீரையும் உட்கொள்கிறது. மேலும் இவ்வானைகள் தொடர்ந்து மூன்று நாட்கள் நீர் மற்றும் உணவின்றி பட்டினியாக வாழும் ஆற்றல் உடையன. பாலைவன யானைகள் சேற்றில் புரண்டு, உருள்வதுடன், தனது தோல் முழுவதும் சேற்றைப் பூசிக்கொள்வதால் பாலைவன வெயிலிருந்து உடலை பாதுகாத்துக் கொள்கிறன.[3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Desert elephants". Elephant Human Relations Aid. Archived from the original on 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2013-11-01.
  2. "Desert elephants". Etosha National Park. Archived from the original on 2014-02-10. பார்க்கப்பட்ட நாள் 2013-11-01.
  3. 3.0 3.1 "About desert elephants". Desert Lion and Elephant Conservation. Archived from the original on 2016-04-12. பார்க்கப்பட்ட நாள் 2013-11-01.
  4. 4.0 4.1 Helmuth, Laura (2005-07-01). "Saving Mali's Migratory Elephants". Smithsonian Magazine இம் மூலத்தில் இருந்து 2013-11-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131103090232/http://www.smithsonianmag.com/science-nature/Saving_Malis_Migratory_Elephants.html. பார்த்த நாள்: 2013-11-01. 
  5. Braun, David (2009-05-25). "Help Needed to Buy Water for Dying Elephants". NewsWatch. National Geographic. பார்க்கப்பட்ட நாள் 2013-11-01.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலைவன_யானைகள்&oldid=3563045" இலிருந்து மீள்விக்கப்பட்டது