பாஷ்யம் என்கிற ஆர்யா

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

பாஷ்யம் எனும் இயற்பெயர் கொண்ட ஆர்யா (1907 - 1999) இந்திய விடுதலைப் போராட்ட வீரர். 1932-ல் இன்று சென்னை தலைமைச் செயலகம் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்தின் உச்சியில் ஒருவரும் அறியாமல் ஏறி, பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கை இறக்கிவிட்டு, இந்திய தேசியக் கொடியை ஏற்றிய மாவீரர் பாஷ்யம் எனும் ஆர்யா. சிறந்த ஓவியர்; சிற்பி; தற்காலத்தில் புழக்கத்தில் இருக்கும் மகாகவி பாரதியாரின் படத்தினை வரைந்தவர்.

இளமையும் கல்வியும் தொகு

சென்னை மாகாணத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தின், மன்னார்குடி வட்டத்தில் உள்ள சேரங்குளம் கிராமத்தில் 1907-ஆம் ஆண்டில் பிறந்தார் பாஷ்யம். 'சுதேசமித்திரன்' ஆசிரியராக இருந்த தேசபக்தர் ஏ. ரங்கசாமி ஐயங்கார் இவரது உறவினர். மன்னார்குடியில் கல்வி பயின்றார். தன் 11ஆம் வயதில் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ்]] நகரத்தில் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக்கில் படுகொலையினால் ஆவேசம் கொண்டார். நீடாமங்கலம் சென்று அங்கு நடந்த காந்திஜியின் சொற்பொழிவைக் கேட்டார். அந்த இளம் வயதிலேயே தேச சேவைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள உறுதி பூண்டார்.[1]

மன்னார்குடியில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தபின் திருச்சி தேசியக் கல்லூரியில் பயின்றார். அங்கு படித்த காலத்தில் இவர் பாடப்புத்தகங்களைக் காட்டிலும் தேசபக்தி நூல்களையே அதிகம் படித்தார்.

  • லாலாலஜபதிராயின் 'துரதிர்ஷ்ட இந்தியா'
  • வீர சாவர்க்காரின் '1857- இந்திய சுதந்திரப்போர்'
  • விவேகானந்தரின் சொற்பொழிவுகள்
  • அரவிந்தர் வரலாறு
  • வ. வே. சு. அய்யர் வரலாறு
  • இந்துஸ்தான் ஜிட்டர் புரட்சியாளர் கட்சித்தலைவர் லாலா ஹர்தயாள் வரலாறு
  • வங்காளப் புரட்சியாளர்கள் திட்டங்கள்

ஆகிய நூல்களை பாஷ்யம் தேடிப்படித்தார். இதனால் இளைஞர் பாஷ்யம், இந்திய விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடவும் தயாராகத் தன்னை உறுதிப்படுத்திக்கொண்டார்.[2]

சைமன் கமிசன் போராட்டம் தொகு

இங்கிலாந்திலிருந்து 'சைமன்' என்பவர் தலைமையில் சைமன் குழு இந்தியா வந்தது. காங்கிரசார் மற்றும் இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் விடுத்த அறைகூவல்களை ஏற்று இந்தியாவெங்கும் அதனை கருப்புக்கொடி காட்டி திரும்பிப்போ என்ற முழக்கத்தோடு போராட்டங்கள் வெடித்தன. சைமன் கமிஷன் திருச்சி வந்தது. அங்கும் தேசியக் கல்லூரி மாணவர்கள் பாஷ்யம் தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் கல்லூரி திரும்பிய மாணவர்களுக்கு 2 உரூபாய் அபராதமும் தலைமை தாங்கிய பாஷ்யத்திற்கு 5 உரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பணத்தைக் கட்ட மறுத்தார் பாஷ்யம். முதல்வர் சாரநாதன் 5 ரூபாய் தானே கொடுத்து கட்டச் சொன்னதால் அபராதம் கட்டினார். ஆனால் இது தனது தேசபக்திக்கு அவமானம் எனக் கூறி கல்லூரியை விட்டு வெளியேறினார்.

புரட்சி நடவடிக்கைகள் தொகு

எனினும் தேசவிடுதலை இவரை அழைத்துக் கொண்டது. புரட்சி அமைப்புகள் இவரை கைநீட்டி வரவேற்றன. அய்யலூர் ரயில்வே நிலையத்துக்கு 7 மைல் தூரமுள்ள பஞ்சந்தாங்கிப் பள்ளத்தாக்குப் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார். இதற்காக மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பர் முத்துக்குமாரசாமிப் பிள்ளை மூலம் துப்பாக்கிகள் வாங்கிக்கொண்டார். இங்கு புதுவை விடுதலை வீரர் வ. சுப்பையாவைச் சந்தித்தார். "யுனிவர்சிட்டி டிரைனிங் கோர்" படையில் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற பாஷ்யம் தனது நண்பர்களுக்கும் இப்பயிற்சியை அளித்தார். புரட்சியாளர் சங்கத்தில் உறுப்பினராகி, காளி படத்தின் முன் ரத்தக் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

கொலை முயற்சி தொகு

சேரங்குளத்துக்குத் திரும்பிய பாஷ்யம் தேசத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் எனத் துடித்தார். அப்போது கவர்னர் மார்ஷ் பாங்ஸ் என்பவர் சிதம்பரம் நடராஜர் பூங்காவிற்கு அடிக்கல் நாட்ட வருவதாக செய்தி கிடைத்தது. எனவே பாஷ்யம் சிதம்பரம் சென்றார். சட்டைப்பையில் மறைத்து வைத்துக்கொண்ட துப்பாக்கியுடன் கவர்னர் கலந்து கொண்ட கூட்டத்திற்குச் சென்று அவரைச் சுட முயன்று, முடியாமல் போனது. தஞ்சை திரும்பி தனது நண்பர் கோபாலகிருஷ்ணனிடம் சொல்லி வருத்தப்பட்டார். அவர் பாஷ்யத்தின் செயலை ஏற்றுக் கொள்ளவில்லை. இனி இதுபோன்ற செயல்களை விடுத்து மகாத்மாவைப் பின்பற்றும்படி அறிவுரை கூறினார்.

வங்கிக்கொள்ளை தொகு

விடுதலைப் புரட்சிக்காகப் பணம் தேவைப்பட்டது. எனவே மதுரை இம்பீரியல் வங்கியைக் கொள்ளை அடிக்கத் திட்டம் தீட்டினார். ஆனால் ராமசாமி, மாரியப்பன் என்ற இரு நண்பர்கள் அவசரப்பட்டு முயற்சியில் இறங்கி தோல்வியடைந்து காவலர்களிடம் சிக்குண்டனர். சித்திரவதைக்கு உள்ளானதில் மாரியப்பன் என்பவர் பாஷ்யத்தின் பெயரைக் காட்டிக்கொடுத்தார். ஆனால் பாஷ்யம் இரவோடு இரவாக தடயங்களை எல்லாம் அழித்துவிட்டு தனது அறைக்குச் சென்றார். விடிந்ததும் இவரைக் கைது செய்த காவலர்கள், இரண்டு மாதங்கள் சித்திரவதை செய்துவிட்டு இவர் மீது எந்த ஆதாரமும் இல்லையென விடுதலை செய்தனர். ஆனால் சதிகாரக் கேடி என்ற பட்டியலில் இவர் பெயர் சேர்க்கப்பட்டது.

சுதேசி இயக்கமும் சேவாதளமும் தொகு

1931இல் சென்னை சென்று தமையனார் வீட்டில் தங்கினார். போலீஸ் கண்காணிப்பு இருந்தும், இவர் கதர் அணிந்து கதர் துணி விற்பனை செய்தார். அந்நிய துணிகளை வாங்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். அதன் பயனாய் துணிக்கடைக்காரர்கள் இவர் மீது வெற்றிலைப் பாக்கு எச்சிலை உமிழ்ந்தார்கள், சிகரெட் துண்டுகளை நெருப்புடன் வீசினார்கள். ஐஸ் ஹவுஸ் பகுதியில் கள்ளுக்கடை முன்பு மறியல் செய்த போது கடைக்காரர் பாஷ்யத்தின் தலையில் கள்ளுப்பானையைப் போட்டு உடைத்தார். இந்துஸ்தான் சேவாதளத்தின் தலைவர் டாக்டர் ஹார்டிகார் சென்னைக்கு வந்த போது சேவாதளத் தொண்டராக பாஷ்யத்தைச் சேர்த்துகொண்டார். பகல்கோட் நகரில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது, லண்டன் வட்டமேசை மாநாடு தோல்வி, தாயகம் திரும்பிய காந்தி கைது ஆகியவை நடைபெற்றன. வைசிராய் வெல்லிங்டன் நாடு முழுவதும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டார். இதனால் அரசியல் இயக்கங்கள், கூட்டங்கள் தடை செய்யப்பட்டன. எனவே சேவாதளத்தைக் கலைத்த ஹார்டிகார், தொண்டர்கள் அவரவர் பகுதிக்குச் சென்று தடை உத்தரவுகளை மீறிச் சிறைபுக வேண்டும் எனக் கூறி தொண்டர்களை அனுப்பினார். பாஷ்யம் சென்னை திரும்பினார்.

கோட்டையில் தேசிய மூவண்ணக் கொடியை ஏற்றுதல் தொகு

ஜவஹர்லால் நேரு ஜனவரி 26-ஆம் தேதியை நாட்டு மக்கள் சுதந்திர தினமாகக் கொண்டாடுமாறு அறைகூவல் விடுத்தார். அதனை ஏற்று பாஷ்யம் ஒரு சாகசத்துக்கு தயாரானார். பெரிய தேசிய மூவண்ணக் கொடியொன்றை இவரே தைத்துக் கொண்டார். நடுவில் மையினால் ராட்டை வரைந்து கொண்டார். அதன் கீழ் "இன்று முதல் இந்தியா சுதந்திரம் அடைகிறது" என்று எழுதினார். ஜனவரி 25, மாலை 7 மணிக்கு கொடியைத் தன் உடைக்குள் மறைத்துக் கொண்டு, தன்னுடன் தியாகி சுப்பிரமணிய சிவாவின் மருமகன் வேணுகோபாலனைத் தன்னைப் பின் தொடரும்படி சொல்லிவிட்டுச் சென்றார். ஒரு திரைப்படக் கொட்டகை சென்று சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு காவலர் உடையில் ரகசியமாக தென்புற வாயில் வழியாகக் கோட்டைக்குள் நுழைந்தார். அங்கு 140 அடி உயரமும் 3 அடி குறுக்களவும் உள்ள கம்பத்தில் ஏறினார். அப்போது சென்னைக் கலங்கரை விளக்கில் உள்ள சுழலும் விளக்கின் வெளிச்சம் இக்கம்பத்தின் மீது பட்டது. அதுபடும் நேரத்தைக் கணக்கிட்டுத் திட்டமிட்டு, ஒளி படும்போதெல்லாம், கம்பத்தின் மறுபுறம் ஒளிந்து ஏறி யூனியன் ஜாக் என்ற பிரித்தானியரின் கொடியை இறக்கிவிட்டு அதில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிவிட்டு இறங்கி ஓடி தப்பிவிட்டார். காலையில் இக்கொடியினைக் கண்ட கோட்டை ராணுவ வீரர்கள் பதட்டமடைந்தனர். கவர்னருக்குச் செய்தி போயிற்று. இதனைச் செய்தவரைக் கண்டுபிடிக்க போலீஸ் தலைகீழாக நின்றும் பயனில்லை. இன்று வரை அந்த செயலைச் செய்தவர் கண்டுபிடிக்கப்படவில்லை என்றுதான் அரசாங்க ஆவணங்கள் கூறுகின்றன.[3]

துணிக்கடைகளில் தீ விபத்து தொகு

அதுமட்டுமல்ல சென்னை ஜார்ஜ் டவுன் பகுதிகளில் அந்நிய துணிகளை விற்கும் பிரம்மாண்டமான கடைகளில் பாஷ்யமும் அவரது நண்பர்களும் துணிகள் வாங்குவது போல் சென்று ஆடைகளுக்குள் செல்லுலாய்டு பெட்டி எனப்படும் ஒரு சிறிய பெட்டியை திணித்துவிடுவார்கள். எனவே இவர்கள் வெளிவந்த சிறிது நேரம் கழித்து அக்கடைகள் அடிக்கடி தீப்பற்றி எரிந்தன. ஆனால் இதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொகு

பாஷ்யம் அப்போது கம்யூனிஸ்டுகளாக இருந்த அமீர்ஹைதர் கான், சி.எஸ்.சுப்பிரமணியம், புதுச்சேரி சுப்பையா ஆகியோரோடு தொடர்பு வைத்திருந்தார். இந்த நிலையில் 1942இல் ஆகஸ்ட் புரட்சி தொடங்கியது. பாஷ்யம் துப்பாக்கிகளைக் கடத்துதல், தண்டவாளங்களைத் தகர்த்தல், பாலங்களை வெடிவைத்துத் தகர்த்தல் ஆகிய புரட்சிகளில் ஈடுபட்டார்.

ஓவியர் தொகு

பாஷ்யம் இயல்பிலேயே ஓரு சிறந்த ஓவியர். அரசியல் கருத்துப்படங்கள், கதைகளுக்கான சித்திரங்கள், ஏடுகளுக்கான முகப்புப்படங்கள் போன்ற பல்வகை ஓவியங்களை ஆர்யா என்ற புனை பெயரில் வரைந்து வந்தார். இவர் வரைந்த மகாகவி பாரதியின் படமே பின்நாளில் சென்னை அரசாங்கத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றளவும் வளைய வருகிறது. 1945இல் முழு நேர ஓவியரானார். "யுனைடெட் ஆர்ட்ஸ்" என்னும் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். காந்தி, நேதாஜி ஆகியோருடைய படங்களையும் இவர் வரைந்திருக்கிறார். காந்தியின் உருவச்சிலையையும் இவர் வடித்துள்ளார்.

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Bashyam Arya stood against British might during freedom struggle". Archived from the original on 2021-02-06. பார்க்கப்பட்ட நாள் 2021-02-09.
  2. அறந்தை நாராயணன், "விடுதலை வேள்வியில் தமிழகம்" பக். 179
  3. The flagstaff and the freedom fighter
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஷ்யம்_என்கிற_ஆர்யா&oldid=3563106" இலிருந்து மீள்விக்கப்பட்டது