பிரேம்ஜி ஞானசுந்தரம்

பிரேம்ஜி ஞானசுந்தரம் (17 நவம்பர் 1930 - 8 பெப்ரவரி 2014) முற்போக்கு எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் எனப் பல்துறை ஆளுமைகளைக் கொண்டவர். 1954 ஆம் ஆண்டு முதல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக இருந்து வந்தவர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளராக இருந்து வந்தவர்.[1]

பிரேம்ஜி ஞானசுந்தரம்
பிறப்புசிறீகதிர்காம தேவஞானசுந்தரம்
(1930-11-17)17 நவம்பர் 1930
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
இறப்புபெப்ரவரி 8, 2014(2014-02-08) (அகவை 83)
கனடா
பணிமுற்போக்கு எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர்
பெற்றோர்நடராஜா, பவளம்மா
வாழ்க்கைத்
துணை
கமலி
பிள்ளைகள்மனோஜா, ஜெனனி

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

பிரேம்ஜி ஞானசுந்தரம் யாழ்ப்பாண மாவட்டம், அச்சுவேலி என்ற கிராமத்தில் நடராஜா, பவளம்மா இணையருக்குப் பிறந்தவர். இவரது இயற்பெயர் சிறீகதிர்காம தேவஞானசுந்தரம்.[2]

எழுத்துத் துறையில் தொகு

இளமைக்காலத்தில் ஞானசுந்தரம் வாலிப முன்னணி என்ற பத்திரிக்கையில் பிரேமா என்ற புனைப்பெயரிலே எழுதி வந்திருக்கின்றார். பின் ராமகிருஷ்ணன் என்ற மலையாளத் தோழரின் ஆலோசனைக்கு அமைய பிரேம்ஜி எனத் தமது பெயரை மாற்றிக் கொண்டார். பிரேம்ஜி என்பது புகழ்பெற்ற மலையாளக் கவிஞரொருவரின் பெயராகும்.[2]

முன்னணி (1948), தேசாபிமானி (1949), சுதந்திரன் (1953-1956), சோவியத் செய்திகளும் கருத்துக்களும் நாளாந்த செய்தி மடல் (1958-1972), சோவியத் நாடு (1972-1991), சோசலிசம்: தத்துவமும் நடைமுறையும் (1978-1989), சக்தி (1980-1989) போன்ற பத்திரிக்கைகளில் பத்திரிகை ஆசிரியராகவும் துணை ஆசிரியராகவும் அரசியல் விமர்சகராகவும் பணியாற்றியுள்ளார்.[2]

சமூகப் பணி தொகு

1964 இல் உருவாக்கப்பட்ட எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தில் பிரேம்ஜி பணிப்பாளராகப் பணியாற்றினார். இலங்கை தமிழ் ஆலோசனைச் சபையின் செயலாளர் (1971-1975), யாழ் பல்கலைக்கழக அமைப்புக் குழு செயலாளர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசனைச் சபை உறுப்பினர் (1972-1974), இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினர் (1995), இலங்கை தேசிய நூலகச் சபை மதியுரைக் குழு உறுப்பினர் (1997), தினகரன் ஆசிரிய பீட ஆலோசகர் (1997), இன விவகாரங்கள் சம்பந்தமான உயர்மட்ட ஊடகக் குழு உறுப்பினர் (1997) என பல பதவிகளையும் இவர் வகித்திருக்கின்றார்.[2]

முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொகு

1957 ஆண்டு சூன் 2 ஆம் திகதி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பித்த நாளிலிருந்து பிரேம்ஜி அதன் செயலாளராக இருந்து வந்துள்ளார். இவரது ஆளுமையும் பங்களிப்பும் அவ்வியக்கத்தின் வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பை நல்கியுள்ளது.[3]

விருதுகள் தொகு

1964 இல் லெனின் நூற்றாண்டையொட்டி நடாத்தப்பட்ட பத்திரிக்கையாளர் மகாநாட்டில் சிறந்த பத்திரிக்கையாளருக்கான விருதை பெற்றுள்ளார்.[2]

மறைவு தொகு

பிற்காலத்தில் இவர் கனடாவிற்கு குடிபெயர்ந்து தொடந்தும் சமூக செயற்பாடுகளில் ஆர்வம் காட்டிவந்தார். இவர் 2014 பெப்ரவரி 8 இல் கனடாவில் காலமானார்.[1]

வெளியிடப்பட்ட நூல்கள் தொகு

  • பிரேம்ஜி கட்டுரைகள் (வெளியீடு: நான்காவது பரிமாணம், 2008)

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "பிரேம்ஜீ ஞானசுந்தரம் கனடாவில் காலமானார்". தினகரன். 10 பெப்ரவரி 2014. Archived from the original on 2014-05-15. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "பிரேம்ஜி வகுத்த தனிப்பாதை". தினக்குரல். 16 யூன் 2013. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 9 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. த. சிவபாலு (நவம்பர் 2009). "பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்களின் கட்டுரைத் தொகுதி நூல் வெளியீடு". பதிவுகள் (இணைய இதழ்). பார்க்கப்பட்ட நாள் 9 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேம்ஜி_ஞானசுந்தரம்&oldid=3563674" இலிருந்து மீள்விக்கப்பட்டது