புதியகற்காலக் கட்டிடக்கலை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புதியகற்காலக் கட்டிடக்கலை என்பது புதியகற்காலத்தில் நிலவிய கட்டிடக்கலையைக் குறிக்கும். தென்மேற்கு ஆசியப் பகுதிகளில் புதியகற்காலம், கி.மு 10,000 களுக்குச் சற்றுப் பின்னர் தொடங்கியது. தொடக்கத்தில், லேவண்டிலும் (Levant) பின்னர் அங்கிருந்து, கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் பரவியது. தென்கிழக்கு அனத்தோலியா, சிரியா, ஈராக் ஆகிய பகுதிகளில் கி.மு 8000 அளவில் தொடக்கநிலைப் புதியகற்காலப் பண்பாடு நிலவியது. தென்கிழக்கு ஐரோப்பாவில் உணவு உற்பத்தி செய்யும் சமூகங்கள் முதன் முதலாக கி.மு 7000 அளவிலும், மத்திய ஐரோப்பாவில் கி.மு. 5000 அளவிலும் காணப்பட்டன. ஒரு சில விதி விலக்குகள் தவிர அமெரிக்காவில், ஐரோப்பியத் தொடர்பு ஏற்படும் வரை புதியகற்காலத் தொழில்நுட்பமே புழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது.
லேவண்ட், அனத்தோலியா, சிரியா, வடக்கு மெசொப்பொத்தேமியா, மத்திய ஆசியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கட்டிடங்களைக் கட்டுவதில் வல்லவர்களாக விளங்கினர். இவர்கள் சுடப்படாத செங்கற்களைக் கொண்டு வீடுகளையும், ஊர்களையும் கட்டினர். கட்டல்ஹோயுக் (Çatalhöyük) என்னுமிடத்தில், வீடுகளுக்குச் சாந்து பூசி அதிலே மனிதர், விலங்குகள் என்பவை தொடர்பான ஓவியங்களையும் வரைந்தனர். ஐரோப்பாவில், மரக்குச்சிகளையும், களிமண்ணையும் கொண்டு நீள வீடுகள் எனப்படும் வீடுகள் கட்டப்பட்டன. இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டன. இத்தகைய நினைவுச் சின்னங்கள் பல அயர்லாந்தில் அமைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கில் இவ்வாறான அமைப்புக்களை இன்றும் அந்நாட்டில் காண முடியும்.
மேற்கு ஐரோப்பாவிலும், மத்தியதரைக்கடற் பகுதியிலும் காணப்படுகின்ற பெருங்கற் சின்னங்களும் புதிய கற்காலத்தில் கட்டப்பட்டவையே. பெருங்கல் அமைப்புக்கள் பல உலகம் முழுவதிலும் காணப்பட்டாலும், இங்கிலாந்திலுள்ள ஸ்டோன் ஹெஞ்ச்சே இவற்றுள் கூடுதலாக அறியப்பட்டது எனலாம். நினைவுச் சின்னங்கள், கோயில்களையும், இறந்தவர்களுடைய நினைவுச் சின்னங்களையும், சமய அல்லது வானியற் தொடர்புள்ளவையாகக் கருதப்படும் பிற அமைப்புக்களையும் உள்ளடக்குகின்றன. அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த கோயில் கோசோத் தீவில் உள்ள கண்டிஜா ஆகும்.