பூங்குழலி (கதைமாந்தர்)

பூங்குழலி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் சேந்தன் அமுதன் காதலியாக வரும் கதாபாத்திரத்தின் பெயர். பூங்குழலி என்றால் பூவைப் போன்ற குழல் (கூந்தல்) உடையவள் என்று பொருள்.

பூங்குழலி
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
பூங்குழலி (ஓவியம்:மணியம்)
முதல் தோற்றம் பொன்னியின் செல்வன்
உருவாக்கியவர் கல்கி
வரைந்தவர்(கள்) மணியம், வினு, மணியம் செல்வன்
தகவல்
தொழில்படகோட்டுதல்
குடும்பம்முருகய்யன், ராக்கம்மாள், தியாகவிடங்கர்
குறிப்பிடத்தக்க பிறர்சேந்தன் அமுதன்
தோழர்கள் சேந்தன் அமுதன், அருள்மொழிவர்மன், வந்தியதேவன்
தோழிகள் குந்தவை, வானதி

கதைப்பாத்திரத்தின் இயல்பு தொகு

காண்போர் மயங்கும் அழகிய பெண்ணாகவும், பெரும் புயலிலும் தனித்து ஆழ்கடலில் படகோட்டிப் பயணிக்கும் திறனுடையவளாகவும், தேவாரப் பாடல்களையும், சுயமாக பாடல் புனைந்தும் பாடும் வல்லமையுடையவளாகவும் பூங்குழலியின் கதைப்பாத்திரத்தினைக் கல்கி அமைத்துள்ளார்.

படகோட்டி குடும்பம் தொகு

தியாகவிடங்கரின் புதல்வியாகவும், படகோட்டி முருகய்யனின் தங்கையாகவும் பூங்குழலி அறிமுகம் செய்யப்படுகிறாள்.

வந்தியத்தேவனுடன் சந்திப்பு தொகு

பூங்குழலி கோடிக்கரை குழகர் கோவிலினுள் தரிசனத்திற்காகச் செல்கிறாள். இரவு நேரம் நெருங்குவதால் பட்டரும் நடையைச் சாத்திவிட்டு அவளுடன் வருவதாகக் கூறுகிறார். பட்டருக்காகக் கோவிலின் வெளியே காத்திருக்கும் போது குதிரையில் வைத்தியர் மகனும், வந்தியத்தேவனும் வருகிறார்கள். வந்தியத்தேவனை உற்று நோக்கும் பூங்குழலியை அவனும் பார்த்துக் கொண்டே குதிரையில் அருகே வருகிறான். தேங்காய் கீற்றினைக் கடித்தபடியே ஒரு ஆடவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து வெட்கம் கொண்டு ஓடுகிறாள் பூங்கொடி. வந்தியத்தேவன் ஓடிச் சென்று அவளைப் பிடிக்க முயலுகிறான். ஆனால் எதிர்பாராவிதமாய் புதைமணலில் சிக்கிக் கொள்கிறான். பிறகு பூங்குழலி அவனை காப்பாற்றுகிறாள். இருவரும் இணைந்து தியாகவிடங்கர் வீட்டிற்கு செல்கின்றார்கள்.

சோழ இளவரசி குந்தவை இலங்கையில் பெரும் படையுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் தன் தம்பி அருள்மொழி வர்மனுக்குக் கொடுத்தனுப்பிய ஓலையை வாங்கிக்கொண்டு வந்தியத்தேவன் கோடியக்கரையை வந்து அடைகிறான். அங்கே அழகான பூங்குழலியை சந்திக்கிறான். பூங்குழலி படகு ஓட்டுவதில் திறமைசாலி. அவளின் படகில் இருவரும் இலங்கைக்குப் போகிறார்கள்.

பூங்குழலியின் அத்தை ஒரு வாய்பேச இயலாத பெண். அவளது மகன் சேந்தன் அமுதன் என்பவன். பூங்குழலி மேல் காதல் கொண்டவன். இவன் வந்தியத்தேவனுக்கு பெரிதும் உதவியவன். படகுக்காரியான பூங்குழலி இளவரசர் அருள்மொழிவர்மனிடம் காதல் கொள்கிறாள், அதே சமயம் இளவரசரும் பூங்குழலியிடம் காதல் கொள்கிறார். ஆனால் இதனை இருவரும் வெளிப்படுத்திக்கொள்ளவில்லை.

"அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?

நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?

காட்டினில் வாழ் பறவைகளும் கூடுகளைத் தேடினவே!

வேட்டுவரும் வில்லியரும் வீடு நோக்கி ஏகுவரே



வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க

மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?

வாரிதியும் அடங்கி நிற்கும் மாருதமும் தவழ்ந்து வரும்


காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?"


என்ற பாடல் வரிகள் பூங்குழலி பாடுவதாய் பொன்னியின் செல்வன் நாவலில் அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூங்குழலி_(கதைமாந்தர்)&oldid=3024493" இலிருந்து மீள்விக்கப்பட்டது