பெருமாள் திருமொழி

தமிழ் வைணவ இலக்கிய படைப்பு

பெருமாள் திருமொழி என்பது பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வாரால் இயற்றப்பட்ட தமிழ் வைணவ இலக்கியப் படைப்பாகும்.[1] நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஒரு பகுதியான இந்த படைப்பு,[2] 105 பாசுரங்களைக் கொண்டுள்ளது, இவை நாலாயிர திவ்ய பிரபந்த தொகுப்பில் 647 முதல் 750 வரை உள்ளன. இது பெருமாள் என்று அழைக்கப்படும் திருமாலின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[3]

பெருமாள் திருமொழி
ஆதிசேசன் மீது அமர்ந்திருக்கும் திருமாலின் ஓவியம், கிளீவ்லேண்ட் கலை அருங்காட்சியகம்
தகவல்கள்
சமயம்வைணவம்
நூலாசிரியர்குலசேகர ஆழ்வார்
மொழிதமிழ்
காலம்பொ.ஊ. 9-10 ஆம் நூற்றாண்டு
வரிகள்105 பாடல்கள்

பாசுரங்கள்

தொகு

பெருமாள் திருமொழி குறிப்பாக புனித நகரமான திருவரங்கத்தில் ஐந்து பத்துப் பாடல்களையும், ராமர்[4] மற்றும் கிருஷ்ணரின் மீது தலா ஐந்து பத்துப் பாடல்களையும் கொண்டுள்ளது.[5]

இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த

அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி

திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்

கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே
— குலசேகர ஆழ்வார், பெருமாள் திருமொழி, முதல் பாடல்[6]

பாசுரங்கள் பற்றிய சுருக்கங்கள்

தொகு

1. முதல் பதினோரு பாடல்களில் அரங்கப்பெருமானை கண்டு மகிழும் நாள் எந்நாளென வேட்டல்.
2. இரண்டாம் பத்து பாடல்களில், அரங்கநாதனது அடியார்க்கு அடியேன் என்கிறார்.
3. மூன்றாம் பத்து பாடல்களில், அரங்கனை கண்டு அவன்பால் கொண்ட பற்றின் மிகுதியால் உலக இன்பங்கள் வேண்டாம் என்றும், தான் அழகிய மணவாளனுக்கே பித்தன் எனல்.

எம் பரத்தர் அல்லாரொடும் கூடலன்
உம்பர் வாழ்வை ஒன்றாகக் கருதலன்
தம்பிரான் அமரர்க்கு அரங்க நகர்
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே

4. நான்காம் பதினோரு பாடல்களில், திருவேங்கடமுடையான் மீது கொண்ட பக்தியின் மிகுதியால், வானுலக இன்பத்தினைக் காட்டிலும் திருவேங்கட மலையில் வாழும் குருவாகவோ, மீனாகவோ, திருவேங்கடத்தான் உமிழ்கின்ற பொன் வட்டாகவோ, செண்பக மலராகவோ, தன்பக மரமாகவோ, அழகிய மலையாகவோ, மலை மீது பாயும் ஆறாகவோ, கோயிலின் நிலைக்கதவாகவோ, வாசற்படியாகவோ அல்லது எம்பெருமான் மலை மீது வேறு ஏதேனும் பொருளாகவோ இருந்து திருவேங்கடமுடையான் அடிகளைக் காண்பேன் என்கிறார்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே
இதனால் இன்றும் திருவேங்கடமுடைய பெருமாளின் வாசற்படிக்கு குலசேகரப்படி என்ற பெயர் வழங்குகிறது.

5. ஐந்தாம் பத்து பாடல்களில் வித்துவக்கோட்டு அம்மானையே வேண்டுதல். இவ்வுலகில் எத்துயரம் நேர்ந்தாலும், இறைவனே உயிர்களுக்கு துணை என்பதை வலிவுருத்தும், இப்பத்துப்பாடல்களின் உவமானங்கள் மிகவும் கருத்துச் செறிவானவை.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே

மேற்கோள்கள்

தொகு
  1. RAMANUJAN, S. R. (2014-08-15). The Lord of Vengadam: A Historical Perspective (in ஆங்கிலம்). Partridge Publishing. p. 151. ISBN 978-1-4828-3463-5.
  2. Garg, Gaṅgā Rām (1992). Encyclopaedia of the Hindu World (in ஆங்கிலம்). Concept Publishing Company. p. 354. ISBN 978-81-7022-375-7.
  3. Ph.D, Lavanya Vemsani (2016-06-13). Krishna in History, Thought, and Culture: An Encyclopedia of the Hindu Lord of Many Names: An Encyclopedia of the Hindu Lord of Many Names (in ஆங்கிலம்). ABC-CLIO. p. 156. ISBN 978-1-61069-211-3.
  4. Bryant, Edwin Francis (2007). Krishna: A Sourcebook (in ஆங்கிலம்). Oxford University Press. p. 198. ISBN 978-0-19-803400-1.
  5. A Comprehensive History of India: pt. 1-2. A.D. 300-985 (in ஆங்கிலம்). Orient Longmans. 1982. p. 1055.
  6. "1 இருளிரிய Archives". Dravidaveda (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-02-27.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமாள்_திருமொழி&oldid=4040729" இலிருந்து மீள்விக்கப்பட்டது