மரக்காணசோ (Maracanazo, போர்த்துக்கேய மொழி: Maracanaço) என்று பரவலாக 1950 உலகக்கோப்பையின் இறுதிக் குழுநிலை வெற்றியாளரை முடிவு செய்த உருகுவை எதிர் பிரேசில் ஆட்டம் குறிப்பிடப்படுகிறது. போர்த்துக்கேய மொழியில் இதன் பொருள் ஏறத்தாழ மரக்கானா அடி என்பதாகும். இந்த காற்பந்தாட்டம் பிரேசிலின் இரியோ டி செனீரோ நகரில் உள்ள மரக்கானா விளையாட்டரங்கில் சூலை 16, 1950இல் நடந்தது. மற்ற உலகக்கோப்பைகளைப் போலன்றி, 1950 உலகக்கோப்பையின் வெற்றியாளரை நான்கு அணிகள் பங்கேற்ற தொடர் சுழல்முறையில் ஆடப்பட்ட இறுதிநிலை குழு ஆட்டங்களிலிருந்து தேர்ந்தெடுப்பதாயிருந்தது. இந்த ஆட்டத்திற்கு முன்னதாக பிரேசில் உருகுவையை விட ஒரு புள்ளி முன்னணியில் இருந்ததால் உலகக்கோப்பையை வெல்ல பிரேசில் ஆட்டத்தை சமன் செய்தால் போதுமானதாக இருந்தது. உருகுவைக்கு ஆட்டத்தை வெல்ல வேண்டிய தேவை இருந்தது. மேலும் பிரேசில் போட்டியை நடத்தும் நாடாகவும் முன்னதாக பலராலும் வலிமையான அணியாக மதிப்பிடப்பட்டும் இருந்ததால் பிரேசிலே கோப்பையை எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

உருகுவை எதிர் பிரேசில்
(1950 உலகக்கோப்பை இறுதியாட்டம்)
நிகழ்வு1950 உலகக்கோப்பை காற்பந்து
நாள்16 சூலை 1950
இடம்மரக்கானா விளையாட்டரங்கம், இரியோ டி செனீரோ
ஆட்ட நடுவர்சியார்ச் ரீடர் (இங்கிலாந்து)
வருகைப்பதிவு199,854 [1]

ஆட்டத்தின் இரண்டாவது அரைப்பகுதி துவங்கிய சிறிது நேரத்தில் பிரியாகா மூலம் பிரேசில் முதல் இலக்கை (கோல்) அடித்தது. இதனை இரண்டாவது அரைப்பகுதியின் நடுவில் உருகுவையின் யுவான் ஆல்பெர்ட்டோ சியாஃபினோ சமன் செய்தார். ஆட்டம் முடிவதற்கு 11 நிமிடங்கள் இருக்கும்போது உருகுவையின் ஆல்சிடெசு கிக்கியா வெற்றிதரும் இலக்கை அடித்தார். இது காற்பந்தாட்ட வரலாற்றிலேயே மிகவும் ஏமாற்றம் தரும் தோல்வியாக அமைந்தது. [2] இந்த ஆட்டமும் மரக்காணசோ என அழைக்கப்படலாயிற்று.

மேற்சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரக்காணசோ&oldid=3607226" இலிருந்து மீள்விக்கப்பட்டது