கலிங்க மாகன்

(மாகோன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கலிங்க மாகன் 1215 ஆம் ஆண்டளவில் அதாவது 13 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அக்காலத்தில் இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையைக் கைப்பற்றி 40 ஆண்டுகள்வரை ஆண்டவன் ஆவான். பாளி மொழியிலுள்ள சிங்கள வரலாற்று நூல்கள் மாகன் கலிங்க நாட்டிலிருந்து 24,000 வீரர்களைக் கொண்ட படையுடன் இலங்கையில் இறங்கியதாகக் கூறுகின்றன. பௌத்த மதத்துக்கு எதிரான இவனது ஆட்சி, இலங்கை வரலாற்றில் பெரும் தாக்கங்களை உருவாக்கியது ஒருபுறம் இருக்க, யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி அரச பரம்பரையை உருவாக்கியவனும் இவனே என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்[1].

கலிங்க மாகனிற்கு வழங்கப்பெற்ற பெயர்கள் தொகு

  • காலிங்க விஜயபாகு
  • விஜய காலிங்கச் சக்கரவர்த்தி
  • விஜய காலிங்கன்
  • விஜய கூளங்கை ஆரியன்
  • விஜயபாகு காலிங்கன்
  • ஷோட கங்கன்

கலிங்க இளவரசன் தொகு

18 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண வைபவமாலையை இயற்றிய மயில்வாகனப் புலவர் உக்கிரசிங்கன் என்னும் அரசன் பற்றிக் குறிப்பிடுகிறார். பண்டைக் காலத்தில் கலிங்க நாடு அமையப் பெற்றிருந்த இக்கால ஒரிசாவில் அவனே கலிங்க மாகன். இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலேயே பண்டைய கலிங்க நாடு அமையப் பெற்றிருந்ததற்கு ஆதாரமாக, கலிங்க மரபு இளவரசனும் இலங்கையின் மன்னனுமான நிசங்க மல்லன் தன் கல்வெட்டுக்களில் கலிங்க நாட்டின் தலைநகரம் சிம்மபுரம் எனக் குறிப்பிட்டுள்ளதைக் கூறலாம். இன்றைய ஒரிசாவின் பண்டைய தலைநகரம் சிம்மபுரம் என்றே குறிப்பிடப்படுகிறது.

கலிங்கமாகனின் ஆட்சி பற்றிப் பல விபரங்களைத் தருகின்ற சூளவம்சம், ராஜாவலிய போன்ற பாளி நூல்கள் அவனை ஒரு கலிங்க தேசத்தவனாகக் கூறுகின்றன. மட்டக்களப்பின் வரலாறு கூறும் தமிழ் நூலான மட்டக்களப்பு பூர்வீக சரித்திர ஏடுகள் என்னும் நூல், அவனைக் கலிங்க மன்னான மனுவரதன் என்பவனின் மூன்றாவது மகன் என்கிறது. இவன் கலிங்க தேசத்தவனாக இருந்தபோதிலும், அவனுடைய படைகளில் படையில் தமிழரும், கேரளரும் அடங்கியிருந்ததாகத் தெரிகிறது.[2]

காலிங்க மாகன் - ஆரியச் சக்ரவர்த்திகள் : குழப்பங்களும் தெளிவும் தொகு

ஆரிய சக்ரவர்த்திகளின் முதல் அரசனான கூழங்கை சக்கரவர்த்தியை காலிங்க மாகனோடு சிலர் ஒப்பிடுவது , ஆரிய சக்ரவர்த்திகள் கீழைக் கங்கர் மரபு என்று பலர் கருதுவதாலும், குலச் சின்னம், இலட்சினை போன்றவை ஒத்துவருவதாலும் தான். இந்த குழப்பத்திற்கு மூல காரணமான கலிங்க மாகன் = கீழைக் கங்கர் என்ற தவறான புரிதலை அடுத்த பத்தி தெளியப்படுத்தும்.

நிசங்க மல்லன் காலகட்டம் 1187–1196. இவனது அக்காள் / தங்கை மகனான சோடகங்கன் வேறு அனந்தசோடகங்கன் வேறு என்பது சூளவம்சம் மூலமாகவும், கிடைத்த இவனது காசுகள் மூலமாகவும் தெளிவாகிறது. அதேபோல, வங்காள சிங்கபாகுக்கு பிறந்த விஜயனின் பரம்பரை கலிங்கமாண்ட பரம்பரையில் ஒன்று என்று கொண்டு, இந்த பரம்பரையே கலிங்கமாண்ட கீழைக் கங்கர்களுக்கு பெண் கொடுத்து பெண்ணெடுத்த சம்பந்திகளாக சில தலைமுறை இருந்தனர் என்பதும், கலிங்க மாகன் நிஸ்ஸங்க மல்லனின் பங்காளியாக வேண்டுமானால் இருக்கலாம் என்பதும், ஆனால் கீழைக் கங்கன் அல்ல என்பதும் தெளிவாகிறது.

கிபி 4 ஆம் நூற்றாண்டிலேயே தங்களை காங்கேயன் வழிவந்த சூரிய வம்சம் என்று செப்பேட்டில் குறித்து வைத்த மேலைக் கங்கர் மன்னன் மாதவனும் சரி, இக்ஷ்வாகு பரம்பரையில் வந்த சூரிய வம்சத்து காங்கேயன் வழியினரான மேலைக் கங்கன் கோலாஹலனிடம் இருந்து 80 தலைமுறை தாண்டி 4ஆம் நூற்றாண்டில் பிரிந்து வந்த முதல் கீழைக் கங்க மன்னன் இந்திரவர்மன் என்று விழியநகரம் கல்வெட்டு கூறுவதாலும், கண்கர்களோடு சம்பந்தம் செய்துவந்த காரணத்தால், கலிங்கர் தங்களை இக்ஷ்வாகு பரம்பரை என்று கூறிக்கொள்வது ஆச்சரியம் இல்லை. இதனால்தான் நிசங்க மல்லன் தன்னை கலிங்க நாட்டின் சிங்கபுரத்து, விஜய மன்னரின் பரம்பரை என்ற சொல்லோடு, சூரிய வம்சத்து இக்ஷ்வாகு வழியினன் என்றும் கல்வெட்டில் பொறித்துள்ளான். மேலும் நிசங்க மல்லனின் இரு மனைவியரில் ஒருவர் கீழைக் கங்க வம்சத்து கல்யானமாலை என்பவர் ஆவார்.

ஆக கீழைக் கங்கர் காலிங்க மாகன் அல்ல என்பது இவ்வாறு தெளியலாம்.

குறிப்புகள் தொகு

  1. சுவாமி ஞானப்பிரகாசர், யாழ்ப்பாண வைபவ விமர்சனம் - தமிழர் உகம், 1928, பதிப்பாசிரியர்: கந்தையா குணராசா, கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம், 2004.
  2. க.தங்கேஸ்வரி (1995). மாகோன் வரலாறு. அன்பு வெளியீடு. பக். 32. 

உசாத்துணை தொகு

  • க. தங்கேஸ்வரி (ப-106) ஈழ மன்னன் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய,சமுதாயப் பணிகள்,(2003).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிங்க_மாகன்&oldid=3619347" இலிருந்து மீள்விக்கப்பட்டது