மாத்தளை அருணேசர்

மாத்தளை அருணேசர் என்ற பெயரில் எழுதி வந்த அ. ச. அருணாசலம் (மே 30, 1905 - மே 3, 1986) இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். மாத்தளையில் மந்தந்தாவளை என்ற இடத்தில் வசித்து வந்தவர்.

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

அரு­ணாச்­சலம் கேகாலை மாவட்டம், சன்னிகிராப்ட் என்னும் இறப்பர் தோட்­டத்தில் 1905 ஆம் ஆண்டில் பிறந்தவர். இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் கல்வி பயின்று இலங்கையின் மலையகத்தில் தேயிலை, இறப்பர் தோட்டங்களிலும், பின்னர் பின்னர் இலங்கை அரச நெல் கொள்வனவுச் சபையிலும் பணியாற்றி 1964 இல் ஓய்வு பெற்றார்.[1]

எழுத்துலகில் தொகு

தமிழகத்தில் பரலி சு. நெல்லையப்பர் வெளியிட்ட லோகோபகாரி இதழில் இவருடைய கட்டுரைகள் 1920களில் வெளிவந்தன. ஆனந்தப் போதினி, அமிர்­த­கு­ண­போ­தினி, கலைக்­கதிர், கலை­மகள், மஞ்­சரி ஆகிய இதழ்களில் கட்டுரைகளை எழுதினார்.[1] சிங்கள மொழியில் வெளி­யான சில சமய, சரித்­திரக் கட்­டு­ரை­களை தமிழில் மொழிபெ­யர்த்து எழுதிய கட்டுரைகள் மஞ்சரியில் வெளியாகியுள்ளன. அ. ச. அருணாச்சலம் என்ற பெயரில் எழுதி வந்த இவர் மாத்தளை அருணேசர் என்ற பெயரில் 1947 இல் தந்தையின் உபதேசம் என்ற சிறுகதையை கலைமகளில் எழுதினார்.[1]

நவரத்தினங்கள் பற்றிய நூலை சென்னை அமுதா நிலை­யத்­தி­னூ­டாக ஒன்பது மணிகள் என்ற பெயரில் நூலாக 1962 ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்நூல் 1962 இல் மஞ்சரி இதழில் வெளிவந்தது. பின்னர் 1972 இல் மஞ்சரி இதன் சுருக்கத்தை புத்தகச் சுருக்கம் என்ற பகுதியில் வெளியிட்டது.[1]

இலங்கையில் கோ. நடேசையரின் தேச­பக்தன் (1929), மற்றும் வீரகேசரி, தினகரன், ஆத்மஜோதி, தினபதி, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளில் அருணேசரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

கௌரவம் தொகு

மல்லிகை இதழின் 1985 பெப்ரவரி இதழில் மாத்தளை கணேசரின் படத்தை அட்டைப் படத்துடன் வெளியிட்டு கௌரவப்படுத்தியது.

பிற்காலம் தொகு

1983 இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்ட அருணேசர் மாத்தளையை விட்டு வெளி­யேறி இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு, வாழைச்சேனையில் குடியேறினார். அங்கு அவர் தனது 80வது அகவையில் காலமானார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 துயர் பகிர்தல்: மாத்தளை அருணேசர், வீரகேசரி, அக்டோபர் 12, 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்தளை_அருணேசர்&oldid=3069359" இலிருந்து மீள்விக்கப்பட்டது