மாமல்லபுரம் இராமானுச மண்டபம்

மாமல்லபுரம் இராமானுச மண்டபம் என்பது, தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்குத் தெற்கே கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள பழங்காலத் துறைமுக நகரமான மாமல்லபுரத்தில் அமைந்துள்ள பல குடைவரைகளுள் ஒன்று. மகிடாசுரமர்த்தினி குடைவரைக்கும், கலங்கரை விளக்கத்துக்கும் இடையில் அமைந்துள்ள மிகப்பெரிய பாறை ஒன்றைக் குடைந்து இது உருவாக்கப்பட்டுள்ளது. சிவனுக்குரியதாக அமைக்கப்பட்ட இது முழுமையாக முடிக்கப்பட்ட குடைவரையாக இருப்பினும், பிற்காலத்தில் வைணவரின் கட்டுப்பாட்டுக்குள் இது வந்தபோது இதிலிருந்த பல சிற்பங்கள் செதுக்கி அகற்றப்பட்டுள்ளன.

அமைப்பு தொகு

செவ்வக வடிவான இதன் மண்டபத்தின் முகப்பை ஒட்டி ஒரு தூண் வரிசை உள்ளது. இதில் இரண்டு முழுத்தூண்களும், பக்கச் சுவர்களுடன் ஒட்டியபடி இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. தூண்களின் கீழ்ப்பகுதி இருக்கும் சிங்கத்தின் வடிவில் அமைந்தவை. பின்பக்கச் சுவரில் மூன்று கருவறைகள் குடையப்பட்டுள்ளன. நடுவில் உள்ள கருவறையின் பின்புறச் சுவரில் குழந்தை முருகனுடன் அம்மை அப்பர் இருக்கும் சோமாஸ்கந்த வடிவத்தின் புடைப்புச் சிற்பம் இருந்த அடையாளம் காணப்படுகின்றது. ஏனைய இரண்டு கருவறைகளும் எக்கடவுளருக்காக அமைக்கப்பட்டவை என்பதை அறிவதற்கான சான்றுகள் இல்லை. எனினும் இவை திருமால், நான்முகன் ஆகியோருக்காக அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கருவறைகளின் முகப்புப் பகுதியில், தாங்குதள அமைப்பு உள்ளது. கருவறை வாயில்களுக்கு மேல் போதிகை, உத்தரம் போன்ற கூறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. நடுக்கருவறை வாயிலின் இரண்டு பக்கங்களிலும் வாயிற் காவலர் சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தின் சுவர்களில் செதுக்கப்பட்டிருந்த திருமகள், கொற்றவைச் சிற்பங்களும் அழிக்கப்பட்டுள்ளன.[1]

கல்வெட்டுக்கள் தொகு

மண்டபத்தின் தரையில் பல்லவ கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்ட இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றுள் ஒன்று நான்கு எழுத்துக்களை மட்டுமே கொண்டது.

காலம் தொகு

இக்குடைவரைக் கோயில், கிபி ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த சிவபக்தனான பல்லவ அரசன் பரமேசுரவர்மனின் காலத்தில் கட்டப்பட்டது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 89
  2. இராசமாணிக்கம் பிள்ளை, மா., பல்லவர் வரலாறு, செல்லப்பா பதிப்பகம், மதுரை, 2009. பக். 144, 154.