மார்க்கபந்தீஸ்வரர் கோயில், சிறுபுலியூர்

மயிலாடுதுறையின் சிறுபுலியூர் என்னுமிட சிவன் கோவில்

மார்க்கபந்தீஸ்வரர் கோயில் என்பவை தமிழ்நாட்டில் மயிலாடுதுறை அருகே, சிறுபுலியூர் என்னும் இடத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம் தொகு

மயிலாடுதுறை, கொல்லுமாங்குடி வழியாக இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தக் கோயில், சிறுபுலியூர் என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ள சிற்றூரில் நாடா குடி என்று அழைக்கப்படுகின்ற இடத்தில் அமைந்துள்ள கோயிலாகும். எருக்கத்தம்புலியூரில் இருந்து சிதம்பரம், மாயவரம், கொல்லுமாங்குடி வழியாக 85 கிமீ தூரம் உள்ளது.[1] சிதம்பரம் நடராசர் அருளியபடி வியாக்கிரபாதர், திருச்சிறுபுலியூர் ஸ்தலசயனப்பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் இத்தலத்திற்கு திருச்சிறுபுலியூர் எனப் பெயராயிற்று என்பர்.

நவ புலியூர்க் கோயில்கள் கதை தொகு

ஆதிசேடனும் வியாக்ரபாத முனிவர் எனப்படுகின்ற புலிக்கால் முனிவரும் சிவபெருமானின் கூத்தினைக் காண மிக ஆவல் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் தைப்பூச நாளன்று வந்து தரிசிக்கும்படியாக சிவபெருமான் கூறினார். மேலும் அவர் அவர்கள் முன்பாக நடன தரிசனமும் தந்து அவர்களுக்கு அருளினார். அப்போது வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் மோட்சத்தை வேண்டி சிவனைத் தொழுது நின்றார்கள். அப்போது சிவபெருமான் ஒன்பது புலியூரைத் தரிசித்து, கடைசியாக திருவரங்கத்தில் அவர்களின் புனிதமான கோயில் யாத்திரையை நிறைவு செய்துகொள்ளுமாறுக் கூறினார். [2] திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள பெருமாளும், சிதம்பரத்தில் உள்ள நடராஜரும் ஒரே பரம்பொருளின் இரு வடிவங்கள் என்பதை உணர்த்திய யாத்திரை என்று இதனைக் கூறுவர். [3] இவர்கள் வழிபட்ட கோயில்கள் பின்வருமாறு அமையும். [2]

நவபுலியூர் யாத்திரை தொகு

புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் நவபுலியூர் யாத்திரையை மேற்கொண்டு அது தொடர்பான கோயில்களுக்கு இணைந்தே சென்று வந்தார்கள். மிகவும் வயதாகிய நிலையில் அவர்கள் சிறுபுலியூரை அடையும் போது இருட்டிவிட ஆரம்பித்தது. அப்போது அவர்கள் இந்த இடத்தில் இருந்தபடியே அரங்கனை நினைத்து இயலாமையால் மோட்ச மந்திரத்தை உச்சசரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சிதம்பரத்தில் இருந்து எம்பெருமான் வழித்துணைநாதராக எழுந்தருளி அவர்கள் இருவருக்கும், திருவரங்கத்தை அடைவதற்கு இன்னும் தூரம் உள்ளது என்று உணர்த்துகிறார். [1]

இறைவன், இறைவி தொகு

இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் வழித்துணை நாதர் என்றும் மார்க்கபந்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். [1]

வைணவத் தொடர்பு தொகு

அதே சமயம் திருவரங்கத்தில் இருந்து அரங்கனும் பாலரங்கனாக இங்கு எழுந்தருளிய பெருமை உண்டு. அந்த வகையில் இவ்விரு முனிவர்களுக்கும் அரங்கனும் இவர்களுக்கு தரிசனம் தந்ததால் சிறுபுலியூர் என்ற இந்தத் தலமானது 108 திவ்ய தேசத்திலும் ஒன்றான திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில் என்ற கோயிலுடன் இணைந்து பேசப்படுகின்ற சிறப்பினையும் பெற்றது. [1] சிறுபுலியூர் தலசயனப் பெருமாள் கோயிலின் ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மரம், பலி பீடம், கருடாழ்வார் சன்னதி ஆகியவை உள்ளன. அடுத்து உட்கோபுரமான சிறிய கோபுரம் உள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் விநாயகர், பெருமாள், விஷ்ணு துர்க்கை ஆகியோர் உள்ளனர். விஷ்வக்சேனர் உள் திருச்சுற்றில் உள்ளார். மூலவர் சன்னதி முன் வலது புறம் பள்ளியறை உள்ளது. வெளித்திருச்சுற்றில் ஆண்டாள் சன்னதி, பால அனுமார் சன்னதி, திருமாமகள் தாயார் சன்னதி, ஆழ்வார் சன்னதி, யாகசாலை, திருமடைப்பள்ளி, திருவாய்மொழி மண்டபம் ஆகியவை உள்ளன. பெருமானை பூஜித்து வைகுந்தம் அடைந்த வியக்ரபாதரை, பெருமாளின் திருவடிகளுக்கு அருகிலேயே பிரதிட்டை செய்துள்ளனர் என்பது இந்த வைணவத்தலத்தின் சிறப்பாகும்.

பரிகாலத் தலம் தொகு

இத்தலமானது புதன் பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது. [1]

அடிக்குறிப்பு தொகு