ரெட்டியார்சத்திரம்

ரெட்டியார்சத்திரம் (Reddiarchatram) என்பது தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல்லிலிருந்து பழநி செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் 13 கி. மீட்டர் தொலைவில் உள்ள ஊராட்சியாகும். இப்பகுதியில் புகழ் வாய்ந்த இரண்டு கோவில்கள் உள்ளன. இப்பகுதி பெரும்பான்மையாக விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட பகுதியாகும். இங்கு அரசு தோட்டக்கலைப் பண்ணை இயங்கி வருகின்றது.

கோயில்கள் தொகு

கதிர் நரசிங்கப் பெருமாள் கோயில் தொகு

இக்கோயில், ரெட்டியார்சத்திரம் ஊராட்சிக்குட்பட்ட கொத்தபுளி பஞ்சாயத்தில் உள்ளது. பெருமாளை மூலவராகக் கொண்டு இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் பாண்டியர் காலத்தைச் சார்ந்ததாகும்.

கோபிநாதர் சுவாமி கோயில் தொகு

இக்கோயில், ரெட்டியார்சத்திரத்திலிருந்து 3 கி. மீட்டர் தொலைவில் காமாட்சிபுரம் பஞ்சாயத்தில் உள்ளது. இக்கோயில் மலைக்குன்றின் மீது அமையப்பெற்றுள்ளது. குன்றின் உயரம் 450 அடியும், 619 படிக்கட்டுகளும் கொண்டதாகும். மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் மாடுகள் கன்று ஈன்றவுடன் அதன் பாலை காணிக்கையாகக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிசேகம் செய்கின்றனர்.

ஊராட்சி ஒன்றியம் தொகு

ரெட்டியார்சத்திரம் ஊராட்சியின் தலைமை அலுவலகம் இங்கு உள்ளது. இவ்வொன்றியத்தில் 2011ஆம் ஆண்டு மொத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 1,02,682 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 51,458; பெண்கள் 51,224 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 19,307 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 9,627; பெண்கள் 9,680 ஆக உள்ளனர்[1]

அரசு தோட்டக்கலைப் பண்ணை தொகு

இஸ்ரோ தொழில் நுட்பத்தில் புதிய முறையில் விவசாயம் செய்வதை உழவர்களுக்கு கற்றுத் தரும் பயிற்சி மையமாகவும், ஆராய்ச்சி நிலையமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மற்ற ஊராட்சி அலுவலர்கள் மற்றும் உழவர்களுக்கு இங்குப் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

கல்வி தொகு

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பல கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய பகுதியாகக் காணப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி, பி. எஸ். என். ஏ. பொறியியல் கல்லூரி, எஸ். எஸ் எம். பொறியியல் கல்லூரி, ஏ. பி. சி. பல்தொழில்நுட்ப கல்லூரி போன்றவை உள்ளன.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்டியார்சத்திரம்&oldid=3776730" இலிருந்து மீள்விக்கப்பட்டது