வயநாடு செட்டி

வயநாடு செட்டி என்பவர்கள் தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின், நீலகிரி மலையிலுகள்ள வய நாடு பகுதியில் வாழக்கூடிய ஒரு சாதியினர் ஆவர். இவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியிலில் இணைக்கபட்டவர்களாவர்.[1]

வய நாட்டுச் செட்டிகள் தொழிலால் உழவர்கள் ஆவர். இவர்களது மொழி வயநாடு செட்டி மொழி எனப்படுகிறது. இவர்கள் மலையாள மொழியையும் பேசுவதோடு, கேரளத்தின் மருமக்கள் தாய முறையையும் கடைப்பிடித்து ஒழுகுகின்றனர். வய நாட்டுச் செட்டிகளின் முன்னோர்கள் கோவை மாவட்டத்திலுள்ள தாராபுரத்திலிருந்து நீலகிரி மலைமீது குடிபுகுந்த வெள்ளாளச் செட்டியரே ஆவர். எனவே இவர்கள் இனத்தால் தமிழர், வய நாட்டுச் செட்டிகளிடையே இரண்டுவிதத் திருமணங்கள் இருந்தது. முதல்வகைத் திருமணத்தின்படி, பெண்ணானவள் கணவனிடம் தொடர்பு (marital relations} கொள்ளுவாள். ஆனால் கணவன் வீட்டுக்குச் சென்று வாழமாட்டாள். மற்றொரு வகைத் திருமணம் ‘மாலைக் கல்யாணம்' என்று சொல்லப்படுகிறது. அதன்படி மனைவி கணவனோடு வாழ அனுமதிக்கப்படுகிறாள். மருமக்கள் தாய முறையே இத் திருமண வேறுபாடுகளுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் வய நாட்டுப் பீடபூமியில், பாய்ந்துவரும் நீரருவிகளின் நீரைப்பாய்ச்சி நெல் விளைவிக்கின்றனர். அதோடு புன்செய்த் தானியங்களையும் விளைவிக்கின்றனர். வய நாட்டுச் செட்டிகளின் சமுதாயத்தில் ஐந்து குடும்பங்கள் தலைமைபெற்ற குடும்பங்களாகக் கருதப்படுகின்றன. அக்குடும்பத்தாரின் ஆணைவழி எல்லாரும் ஏற்றறு நடக்கின்றனர். இவர்கள் சிறந்த உழைப்பாளிகள், அமைதியான வாழ்க்கையை உடையவர்கள் ஆவர். இவர்கள் வேட்டையில் விருப்பமுடையவர்களாகவும், புலிகளை வலை போட்டுப் பிடித்து, ஈட்டியால் குத்திக் கொல்லும் வேட்டை முறையில் கைதேர்ந்தவர்களாகவும் இருந்தனர். வயநாட்டுச் செட்டியரில் பலர் நிலக்கிழார்களாக இருந்தாலும், பெரும்பாலோர் ஏழைகளாக உள்ளனர்.[2]

குறிப்புகள் தொகு

  1. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல், கீற்று இணையதளம்
  2. "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 95-208". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயநாடு_செட்டி&oldid=3142985" இலிருந்து மீள்விக்கப்பட்டது