வரலாறு என்னை விடுதலை செய்யும்

1953 இல் பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய உரை

வரலாறு என்னை விடுதலை செய்யும் (எசுபானியம்: La historia me absolverá ) என்பது 16 அக்டோபர் 1953 அன்று பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய இரண்டு மணி நேர உரையின் தலைப்பாகும். கியூபாவில் உள்ள மான்கடா படை முகாம் மீது பிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சி தோல்வியுற்ற நிலையில், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் காஸ்ட்ரோ தனது வாதத்தை முன்வைத்தார். பின்னர் சிறையில் அமர்ந்தபடி அவர் தன் உரையை எழுதியபோது தனது வாதத்தை மறுகட்டமைத்தார். அதில் அவர் நீதிமன்றத்தில் சொல்லாத சொற்றொடர்களையும் உண்மைகளையும் சேர்த்து வரலாறு என்னை விடுதலை செய்யும் உட்பட்ட ஒஆசகங்களைக் கொண்டு மறுகட்டமைத்தார். உண்மையில், அவர் நீதிமன்றத்தில் பேசிய கடைசி வார்த்தைகள்: "வரலாறு நிச்சயமாக அனைத்தையும் சொல்லும்"  என்பதாகும். இந்த உரை சிறையிலிருந்து வெளியே கடத்தப்பட்டது. பின்னர் இந்தப் பேச்சு அவரது 26 யூலை இயக்கத்தின் அறிக்கையாக மாறியது.

தாக்குதலில் ஈடுபட்டதற்காக 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், 1955 இல் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா வழங்கிய பொது மன்னிப்புக்குப் பிறகு கிளர்ச்சியாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மெக்சிகோவுக்கு இடம்பெயர்ந்த அவர் தன் தோழர்களுடன் 1956 திசம்பரில் கிரான்மா படகில் கியூபாவுக்கு மீண்டும் திரும்பினார். [1]

பிளாசா டெல் வேப்பரில் எல் கியூரிட்டா ஒரு துண்டுப் பிரசுரமாக இந்த உரையை இரகசியமாக அச்சிட்டார். பிளாசா டெல் வேப்பர் 1959 ஆம் ஆண்டு காஸ்ட்ரோ அரசாங்கத்தால் இடிக்கப்பட்டு எல் குரிட்டா என்ற பூங்காவாக ஆக்கப்பட்டது.[2]

நீதிமன்றத்தில் காஸ்ட்ரோவின் முதல் நேர்நிற்றல் தொகு

 
மொன்காடா தாக்குதலுக்குப் பிறகு காஸ்ட்ரோ 1953 யூலையில் கைது செய்யப்பட்டார்.

மொன்காடா தாக்குதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட சுமார் 100 பிரதிவாதிகளில் ஒருவராக, சாண்டியாகோ நீதிமன்றத்தில் 1953 செப்டம்பர் 21 அன்று காஸ்ட்ரோ முதன்முதலில் முன் நிறுத்தபட்டார். இவர்களில், 65 பேர் உண்மையில் இந்த நடவடிக்கையில் பங்கேற்காதவர்களாகவும், முன்னணி அரசியல்வாதிகளாகவும் இருந்தனர். அவர்களில் நாட்டின் கடைசியாக சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி கார்லோஸ் பிரியோவும் இருந்தார். அடிப்படையில் ஒரு வழக்கறிஞரான காஸ்ட்ரோ, மற்ற இரண்டு பிரதிவாதிகளைப் போலவே நீதிமன்றத்தில் சொந்தமாக தன் வாதத்தை முன்வைத்தார். மற்ற அனைவருக்கும் மொத்தம் 24 வழக்கறிஞர்கள் வாதாடினர். காஸ்ட்ரோ தனது வழக்காடலில் பாடிஸ்டா ஆட்சி சட்டவிரோதமானது என்று அவர் கருதியதால் அதற்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்கான குடிமகனின் உள்ளார்ந்த உரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டார். இந்தத் தாக்குதலுக்கு யார் காரணம் என்று கேட்டதற்கு, "இந்தப் புரட்சியின் அறிவுஜீவி எழுத்தாளர் ஒசே மார்த்தி, நமது சுதந்திரத்தின் வழிகாட்டி" என்று காஸ்ட்ரோ பதிலளித்தார். செப்டம்பர் 22 அன்று நீதிமன்றத்தின் இரண்டாவது அமர்வில் காஸ்ட்ரோவும் கலந்துகொண்டார், ஆனால் மூன்றாம் நாள் (செப்டம்பர் 25) அமர்வில் அவர் இல்லை. ஏனெனில் சிறை அதிகாரிகள் அவர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தவறாக நீதிமன்றத்தில் கூறினர். அமெரிக்காவின் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய காஸ்ட்ரோ தனது உயிருக்கு சிறப்புப் பாதுகாப்புக் கோரி நீதிமன்றத்தில் நீதிபதியிடம் கையால் எழுதப்பட்ட குறிப்பைத் தன் தோழர்கள் வழியாக கொடுத்தார். பின்னர் நீதிமன்றம் முதன்மை விசாரணையைத் தொடர முடிவுசெய்தது, காஸ்ட்ரோவின் கடிதத்தில் உள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவரது தனி வழக்கை பின்னர் ஒரு புதிய விசாரணைக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தியது.[3] இவர்களின் தரப்பு வாதம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது, 31 பேர் மட்டுமே குற்றவாளிகள் என உறுதிசெய்யபட்டது. மேலும் பெரும்பாலானவர்கள் பரிவுடன் நடத்தப்பட்டனர். 65 பொதுமக்களுடன் 19 கிளர்ச்சியாளர்களும் விடுவிக்கப்பட்டனர். ஆயுதம் ஏந்தாமல் தாக்குதலில் ஈடுபட்ட இரு பெண்களுக்கு மட்டும் ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தாக்குதலில் முக்கிய இடம் வகித்த மற்ற மூவருடன், காஸ்ட்ரோவின் தம்பி ரவுலுக்கும் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.[4][5]

காஸ்ட்ரோவின் உரை தொகு

 
காஸ்ட்ரோ சகோதரர்கள் அடைக்கப்பட்டிருந்த பைன்ஸ் தீவில் உள்ள சிறைச்சாலை பிரசிடியோ மாடலோ. அவர்களும் மற்ற தோழர்களும் சிறை வைக்கப்பட்டிருந்த தொகுதி இப்போது அருங்காட்சியகமாக உள்ளது. (2005 திசம்பரில் எடுக்கப்பட்ட ஒளிப்படம்.)

1953 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் காஸ்ட்ரோ வேறொரு நீதிமன்றத்தில் தண்டனைக்காகக் அழைத்துவரப்பட்டார். இங்குதான் அவர் தனது நான்கு மணி நேர உரையை நிகழ்த்தினார். அது ஒரு தற்காப்பு வாதமாக மட்டுமல்லாமல் கியூபாவின் எதிர்காலம் குறித்த கனவுத் திட்டங்களை கோடிட்டுக் காட்டியும் நிகழ்த்தினார். காஸ்ட்ரோவுக்கும் அவரது தம்பிக்கும் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், விசாரணையில் அவரின் உரையானது தீவில் அவரது மதிப்பை உயர்த்தியது.[4]

பேச்சின் விவரங்கள் தொகு

காஸ்ட்ரோவின் உரையில் "கியூப விடுதலையின் தந்தை" ஒசே மார்த்தியின் பல வழிகாட்டுதல்கள் இருந்தன. மேலும் தன் உரையில் பாடிஸ்டாவை ஒரு கொடுங்கோலராக சித்தரித்தார். காஸ்ட்ரோவின் கூற்றுப்படி, பாடிஸ்டா 1933 இல் கியூப ஜனாதிபதி ரமோன் கிராவை பதவி நீக்கம் செய்ய இராணுவப் புரட்சியைத் தொடங்கியபோது ஒரு மோசமான கொடூர மனிதர் என்பதை நிரூபித்தார். மேலும் காஸ்ட்ரோ, "வேலை இல்லாத 700,000 கியூபர்கள்" பற்றிப் பேசினார், கியூபாவின் தற்போதைய நலவாழ்வு மற்றும் பள்ளிக்கல்வியில் உள்ள குறைபாடுகளைக் குறித்த தாக்குதலைத் தொடங்கினார், மேலும் கியூபாவின் பண்ணை மக்களில் 30% பேர் தங்கள் பெயர்களைக் கூட எழுத முடியாதவர்களாக உள்ளனர் என்றார்.[6]

காஸ்ட்ரோவின் பிற்கால அறிக்கையில், அவரது 1953 உரையின் அடிப்படையில், அவர் தீவில் செயல்படுத்தப்படுவதைக் காண விரும்பிய "ஐந்து புரட்சிகர சட்டங்கள்" பற்றிய விவரங்களைக் கொடுத்தார்:[7]

  1. 1940 கியூப அரசியலமைப்பின் மறுசீரமைப்பு.
  2. நில உரிமைகளில் சீர்திருத்தம்.
  3. நிறுவனத்தின் லாபத்தில் தொழிலாளர்களுக்கு 30% பங்கு உரிமை.
  4. நிறுவன லாபத்தில் 55% பங்கு சர்க்கரை தொழிலாளர்களின் உரிமை.
  5. முந்தைய ஆட்சி அதிகாரத்தின் கீழ் மோசடி செய்த குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்தல்.

மேற்கோள்கள் தொகு

  1. Thomas (1986), p. 111.
  2. File:Parque El Curita.Dragones, Aguila. Havana.jpg
  3. De la Cova (2007), pp. 203–211 and 259–266.
  4. 4.0 4.1 Thomas (1998), p. 550.
  5. De la Cova (2007), pp. 261–264.
  6. Thomas (1986), p. 64.
  7. Thomas (1986), p. 170.