வார்லி ஓவியம்

வார்லி ஓவியம் (Warli painting) என்பது ஒரு பழங்குடியன மக்களின் ஓவியக் கலையாகும். இக்கலை இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மகாராட்டிரம், குசராத் மாநில எல்லைப்பகுதியில் வாழும் ஆதிவாசிகளான வார்லி மக்களால் வளர்க்கப்பட்ட கலையாகும். இந்த ஓவியக் கலைக்கும் இந்தியாவின் பிற வட்டார ஓவியக் கலைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் என்னவென்றால் இந்த வார்லி ஓவியக் கலையில் தெய்வ உருவங்கள் உருவாக்கப்படுவதில்லை; மேலும் இதில் இந்து மதச் சடங்குகளோ வழிபாடுகளோ இல்லை என்பது இதன் தனிச்சிறப்பு. இது தற்போது இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரவியுள்ளது.

காகிதத்தில் வரையப்பட்ட ஒரு வார்லி ஓவியம்
தில்லி சன்ஸ்கிரித்தி கேந்திர அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு வார்லி ஓவியம்
மகாராட்டிரத்தின், டாங் மாவட்டத்தில் ஒரு வார்லி ஓவியம்
அகமதாபாத்தில் ஒரு வார்லி ஓவியம்

யசோதர தால்மிய என்பவரின் புத்தகமான வார்லிகளின் ஓவிய உலகம் என்ற நூலில் வார்லி ஓவியக் கலை கி.மு. இரண்டாயிரத்து ஐநூறு முதல் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவிய பாரம்பரியத்தின் தொடர்ச்சியைக் கொண்டது, தொன்மையுடையது என்று கூறப்பட்டுள்ளது. மனிதன் குகைகளை வசிப்பிடமாகக் கொண்டிருந்த காலகட்டத்தில் தங்கள் அன்றாட நிகழ்வுகளை, சடங்குகளை அறிவிக்கும் வகையில் வரையப்பட்ட ஓவியங்களே வார்லி ஓவியங்கள். இந்த ஓவியக் கலைக்கும் மத்தியப் பிரதேசத்தின் பீம்பெத்கா பகுதில் கி.மு.500 அல்லது 3000 ஆண்டுகளைச் சேர்ந்தாகக் கருதப்படும் குகை ஓவியங்களுக்கும் தொடர்பு உள்ளது. இந்த இரு பகுதிகளில் ஓவியக் கலையும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

இந்த வார்லி ஓவியங்கள் எளிய அடிப்படை வடிவங்களை கொண்டே வரையப்படுகின்றன. அதாவது வட்டம், முக்கோணம், சதுரம் போன்ற வடிவங்களைக் கொண்டே தாங்கள் காணும் இயற்கை காட்சிகளை வரைகின்றனர்.[1] எடுத்துக் காட்டாக வட்ட வடிவத்தை சூரியன், சந்திரன் ஆகியவற்றை வரையவும், முக்கோணத்தை மலைகள், கூரான மரங்கள் போன்ற வடிவங்களை வரையவும், சதுர வடிவத்தை துண்டு நிலம் போன்றவற்றை குறிக்கும்வகையில் வரைகின்றனர்.[2] அவர்களின் அன்றாடப் பாடுகளின் பல நிலைகளை ஓவியமாக அம்மக்கள் தீட்டியிருக்கிறார்கள். அவர்களது திருமணத்தை ஒட்டி ஓவியங்கள் வரையும் பழக்கம் இருந்திருக்கிறது. ஆனால் அவை சடங்குகள் குறித்தானதாக அல்லாமல் பொதுவானவையாக இருந்திருக்கின்றன. ஆனால் மணமக்கள் குதிரையில் பயணிக்கும் ஒரு ஓவியத்தைக் காண முடிகிறது. வேட்டையாடுதல், மீன்பிடித்தல், விவசாயம், திருவிழாக்கள், நடனங்கள், மரங்கள், விலங்குகள், பெண்களின் அன்றாட வேலைகள் போன்றவற்றை காட்சிகளாக சித்தரித்து வரையப்பட்டுள்ளன. மனித உடல்கள், மற்றும் விலங்கு உடல் வடிவங்கள் ஆகியவற்றை முனையில் இணைந்த இரண்டு முக்கோணங்களைக் கொண்டு வரைகின்றனர். மேல் முக்கோணத்தை இடுப்புக்கு மேலுள்ள உடல் பகுதியை வரையவும் கீழ் முக்கோணத்தை இடுப்பை வரைந்தும் தலைப்பகுதிக்கு ஒரு வட்டத்தையும், கொண்டைக்கு இன்னொரு சிறிய வட்டத்தையும் வரைந்து சித்தரிக்கின்றனர். பல வார்லி ஓவியல்களில் வட்டமாக நடனம் ஆடுவது போன்ற ஓவியங்கள் காணப்படுகின்றன. வட்டமாக ஆண்கள் மற்றும் பெண் நடனக்கலைஞர்கள் தங்கள் கைகளை பின்னிக் கொண்டு, வட்டத்தை உருவாகுவது வாழ்க்கை வட்டத்தை ஒத்திருப்பதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.[3]


வார்லி பழங்குடியினர் தங்கள் வீட்டுச் சுவர் கட்டுமானத்துக்கு மண்ணைக் குழைத்துப் பயன்படுத்துகிறார்கள். இவர்களின் வீட்டின் உட்சுவர்களில் காவி வண்ணம் பூசுகிறார்கள். இந்தக் காவி பின்புலத்தில்தான் ஓவியங்கள் வரையப்படுகின்றன. காவிப் பின்புலத்தில் தெளிவாகத் தெரிவதற்காக வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துகிறார்கள். வெள்ளை நிறத்துக்கு அரிசி மாவைத் தண்ணீரில் குழைத்துப் பயன்படுத்துகிறார்கள். ஓவியங்களை வரைய மூங்கில் குச்சிகளின் முனையை நசுக்கி தூரிகைபோல பயன் படுத்துகின்றனர். இந்த ஓவியங்கள் பெரும்பாலும் திருமணம், அறுவடைவிழா போன்றவற்றிற்காக வீட்டை அலங்கரிக்கும் விதமாக வரைகின்றனர். இவற்றை வரைந்து 1970வரை பாதுகாத்தவர்கள் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது. 1970க்கு பிறகு வார்லி ஓவியங்கள் புகழ் பெறத்துவங்கின. வார்லி ஓவியம் கோகோ-கோலா விளம்பர பிரச்சாரமான 'தீபாவளியே வீட்டிற்கு வா' என்ற விளம்பரத்தில் 2010 இல் இடம்பெற்றது. இது மேற்கு இந்தியாவின் வார்லி பழங்குடிகளின் தனித்துவமான வாழ்க்கையின் கலைக்கு ஒரு அங்கீகாரமாக கருதப்படுகிறது.[4] வார்லி ஓவியக் கலை இன்றைக்கு சுவர் ஓவியம் என்ற நிலையில் இருந்து ஆடை வடிவமைப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சேலை, சுடிதார் போன்றவற்றில் வார்லி ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் திரைச் சீலைகள், படுக்கை விரிப்புகள் போன்றவையும் வார்லி ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

ஒரு வீட்டின் வரவேற்பறைச் சுவரில் வரையப்பட்ட வார்லி ஓவியம்

வார்லி ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் ஆடைகளுக்கும், விரிப்புகளுக்கும் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இது மட்டுமல்லாது ஓவியங்களாகவும் இவை இப்போது கிடைக்கின்றன. மேலும் வீட்டின் உள் அலங்கார வடிவமைப்பில் இந்த வார்லி ஓவியங்கள் முக்கியப் பங்கு வகுக்கின்றன. வார்லி பழங்குடியினரின் கொடையான இந்தக் கலை இன்று இந்தியா முழுவதும் வரையப்படும் கலையாக இருக்கிறது. [5]

மேற்கோள்கள் தொகு

  1. "பேசும் பொற்சித்திரங்கள்". தி இந்து (தமிழ்). 2016 -சூன் 4. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. Tribhuwan, Robin D.; Finkenauer, Maike (2003). Threads Together: A Comparative Study of Tribal and Pre-historic Rock Paintings. Delhi: Discovery Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7141-644-6. http://books.google.co.in/books?id=lBXdIQVeIS0C&pg=PA13&dq=Dev+Chowk&hl=en&ei=9f3CTKHMAou4vgO_ncDOCA&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CCwQ6AEwAQ#v=onepage&q=Dev%20Chowk&f=false. 
  3. "A Complete Warli painting Tutorial Guide". The Crafty Angels. 2015-04-22. பார்க்கப்பட்ட நாள் 2016-01-21.
  4. "Coca-Cola India celebrates ancient Warli folk art form - Launches | Business Standard News". Business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 2016-01-21.
  5. "சுவர் ஓவியம் 4 - வார்லி ஓவியங்கள்: பழங்குடியினரின் கொடை". தி இந்து (தமிழ்). 16 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்லி_ஓவியம்&oldid=3856594" இலிருந்து மீள்விக்கப்பட்டது