விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 4, 2012

முக்கோணத்தின் உள்வட்டம் மற்றும் வெளிவட்டங்கள்என்பன அம்முக்கோணத்தின் உள்ளேயும் வெளியேயும் அமையும் வட்டங்களாகும். வடிவவியலில் ஒரு முக்கோணத்தின் உள்வட்டம்அல்லது உள்தொடு வட்டம் என்பது அம்முக்கோணத்துக்குள் அமையக்கூடிய யாவற்றினும் மிகப்பெரியதொரு வட்டமாகும். இந்த வட்டம் முக்கோணத்தின் மூன்று பக்கங்களையும் தொட்டுக்கொண்டு இருக்கும். இவ்வட்டத்தின் மையமானது முக்கோணத்தின் உள்மையம்அல்லது உள்வட்டமையம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு முக்கோணத்திற்கும் அதன் ஒவ்வொரு பக்கங்களையும் தொட்டபடி, வெவ்வாறான மூன்று வெளிவட்டங்கள் உண்டு. வெளிவட்டத்தின் மையமானது வெளிமையம் (அல்லது வெளிவட்டமையம்) என அழைக்கப்படுகிறது. ஒரு முக்கோணத்தின் மூன்று உட்கோண இருசமவெட்டிகளும் உள்மையத்தில் வெட்டிக்கொள்ளும். ஒரு உட்கோண இருசமவெட்டியும் மற்ற இரு வெளிக்கோண இருசமவெட்டிகளும் முக்கோணத்தின் வெளிமையத்தில் வெட்டிக்கொள்ளும். மேலும்...


வ. சுப. மாணிக்கம் தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ் வளர்ச்சியைப் பற்றியே சிந்தித்து பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப் பணிக்காகவே வாழ்ந்த மூதறிஞர். தமிழின் சிறப்புக்களைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் தமிழ் இமயம் என்று தமிழறிஞர்களால் போற்றப்பட்டவர்; பன்முக ஆற்றல் உடையவர். மிகச் சிறந்த சிந்தனையாளர்; இவர் எழுதிய நூல்கள் இவரை சிறந்த கவிஞராகவும், உரைநடை ஆசிரியராகவும், உரையாசிரியராகவும், நாடக ஆசிரியராகவும், ஆய்வாளராகவும் நமக்கு சுட்டிக் காட்டும் தன்மை உடையன.புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் இனத்தில், வ.சுப்பிரமணியன் செட்டியார் - தெய்வானை ஆச்சி அவர்களுக்கு ஐந்தாவது மகனாக 1917ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதியன்று பிறந்தார். இவருடைய இயற் பெயர் அண்ணாமலை. மாணிக்கம் என்றும் அழைக்கப்பட்டதால் அந்தப் பெயரே பிற்காலத்தில் இவருக்கு நிலைத்துவிட்டது. மேலும்