அலம் ஹல்பா சண்டை

இரண்டாம் உலகப்போரின் மேற்கு பாலைவன போர்முனையில் நடந்த ஒரு தாக்குதல் நடவடிக்கை
(அலாம் எல் அல்ஃபா சண்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அலாம் எல் அல்ஃபா சண்டை (Battle of Alam el Halfa) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு தாக்குதல் நடவடிக்கை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் எர்வின் ரோம்மல் தலைமையிலான அச்சுநாட்டுப் படைகளின் கிழக்கு நோக்கி முன்னேற்றத்தை நேச நாட்டுப் படைகள் தடுத்து நிறுத்தின.

அலாம் எல் ஹைஃபா சண்டை
மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி
நாள் 30 ஆகஸ்ட் – 5 செப்டம்பர் 1942
இடம் 30°40′N 29°10′E / 30.667°N 29.167°E / 30.667; 29.167
எல் அலாமீன் அருகே, எகிப்து
மேல்நிலை உத்தியளவில் நேச நாட்டு வெற்றி[1]
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
 நியூசிலாந்து
 ஜெர்மனி
 இத்தாலி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் பெர்னார்ட் மோண்ட்கோமரி நாட்சி ஜெர்மனி எர்வின் ரோம்மல்l
பலம்
பிரிட்டானிய 8வது ஆர்மி
4 டிவிசன்கள்
பான்சர் ஆர்மி ஆப்பிரிக்கா:
6 டிவிசன்கள்
இழப்புகள்
1750 பேர்[2]
68 டாங்குகள்[2]
67 வானூர்திகள்[3]
2900 பேர்[2]
49 டாங்குகள்[2]
36 வானூர்திகள்
60 பீரங்கிகள்[2]
400 போக்குவரத்து வண்டிகள்[2]

ஜுலை 1942ல் நடைபெற்ற முதலாம் எல் அலாமீன் சண்டை யாருக்கும் தெளிவான வெற்றியில்லாமல் முடிவடைந்ததைத் தொடர்ந்து நேச நாட்டுப் படைகளை அழிக்க அடுத்த மாதம் ரோம்மல் மற்றொரு முயற்சி மேற்கொண்டார். இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் நடந்து கொண்டிருந்த போர் ஆகஸ்ட் 1942ல் ஒரு திருப்புமுனையை எட்டியிருந்தது. நேச நாட்டுப் படைகளின் எண்ணிக்கை பலம் மற்றும் தளவாட பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதே நேரம், ரோம்மலின் படைகளுக்கு நடுநிலக்கடல் வழியாக அனுப்பபடும் தளவாடங்களின் எண்ணிக்கை நேச நாட்டு வான்படை/கடற்படைத் தாக்குதலகளால் குறைந்து கொண்டே போனது. இந்த ஆயுத/படை வேறுபாடு அதிகமாகி வடக்கு ஆப்பிரிக்க களத்தில் வெற்றியென்பது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகும் முன்னர் நேச நாட்டுப் படைகளை அழிக்க ரோம்மல் முயன்றார். இதற்காக எல் அலாமீனிலுள்ள பிரிட்டானிய 8வது ஆர்மியின் மீது ஆகஸ்ட் மாத இறுதியில் தாக்குதலைத் தொடங்கினார்.

ரோம்மலின் தாக்குதல் நிகழ்ப்ப் போகிறது என்பதை அல்ட்ரா திட்டத்தின் (ஜெர்மானிய வானொலி செய்திகளை இடைமறித்து, ரகசியக் குறியீடுகளை உடைத்து அவற்றைப் படிக்கும் திட்டம்) மூலம் அறிந்து கொண்ட 8வது ஆர்மியின் தளபதி பெர்னார்ட் மோண்ட்கோமரி அச்ச்ப் படைகளை அழிக்க ஒரு பொறியினைத் தயார் செய்தார். எல் அலாமீன் களத்தின் தெற்கில் வேண்டுமென்றே பலவீனமான படைகளை நிறுத்தி அதிலிருந்து 20 கிமீ தொலைவிலிருந்த அலாம் எல் அல்ஃபா முகட்டில் அதிகமான எண்ணிக்கையில் டாங்குகளையும், பீரங்கிகளையும் நிறுத்தியிருந்தார். களத்தின் தெற்குப்பகுதி பலவீனமாக இருப்பதாக எண்ணி ஏமாந்த ரோம்மல் அந்தப் பகுதியில் தன் படைகளைத் தாக்க உத்தரவிட்டார். வேகமாக முன்னேறிய அச்சுப் படைகள் மோண்ட்கோமரியின் பொறியில் சிக்கிக் கொண்டன. மறைவான பகுதியிலிருந்து பிரிட்டானிய டாங்குகளும் பீரங்கிகளும் அலாம் அல்ஃபா முகட்டுக்கு முன் தேங்கி நின்ற அச்சுப் படைப்பிரிவுகள் மீது குண்டுமழை பொழிந்தன. போர்க்களத்தில் வான் ஆதிக்கம் பெற்றிருந்த பிரிட்டானிய வான்படையும் அச்சுப்படைகளைத் தாக்கி பெரும் சேதத்தை விளைவித்தது. ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 5 வரை நடைபெற்ற இச்சண்டையில் அச்சுப்படைப் பிரிவுகள் பெரும்பாலும் அழிந்து போயின. செப்டம்பர் 5ம் நாள் எரிபொருள் பற்றாக்குறை, படைப்பிரிவுகளின் சேதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ரோம்மல் அலாம் அல்ஃபா மீதான தாக்குதலைக் கைவிட்டார்.

ஆனால் பின்வாங்கும் அச்சுப்படைகளை நேச நாட்டுப் படைகள் விரட்டித் தாக்கவில்லை. மாறாக அடுத்து நிகழவிருந்த இரண்டாம் எல் அலாமீன் சண்டைக்குத் தயாராகின. மேற்குப் பாலைவனப் போர்முனையில் நிகழ்ந்த இறுதி அச்சுத் தாக்குதல் இதுவே. இதன்பின் ரோம்மலின் படைகள் பின்வாங்கவே நேரிட்டது.

குறிப்புகள் தொகு

  1. Naveh (1997), p. 149
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Watson (2007), p. 14
  3. Buffetaut pp.90-91

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலம்_ஹல்பா_சண்டை&oldid=3698090" இலிருந்து மீள்விக்கப்பட்டது