இந்தியாவில் காதலர் தினம்

இந்தியாவில் காதலர் தினம் (Valentine's Day in India) பொருளாதார தாராளமயமாக்கலைத் தொடர்ந்து பிரபலமாகத் தொடங்கியது. காதலர் தினக் கொண்டாட்டம் என்பது மேற்கத்திய செல்வாக்கு என்று கருதும் குழுக்கள் இதை எதிர்த்து வருகின்றன.[1] ஏறக்குறைய ஒவ்வோர் ஆண்டும், போராட்டம் காரணமாக இந்தியாவில் பல நகரங்களில் பிப்ரவரி 14 அன்று சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.[2] இடைக்காலத்தில், வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதலர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு, சில சமயங்களில் கவுரவக் கொலைகளும் நடந்துள்ளன.[1][3] கைகளைப் பிடித்துக்கொள்வது, முத்தமிடுவது போன்ற அன்பை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் பொதுவெளியில் காட்சியாக்கப்படுவது இந்தியாவில் இன்றும் ஏற்றுக்கொள்ள முடியாததாகக் கருதப்படுகிறது.[3]

காதலர்தினம் ஒரு பார்வை தொகு

1990 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் நிகழ்ந்த பொருளாதார தாராளமயமாக்கலைத் தொடர்ந்து வெளிநாட்டு தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் வாழ்த்து அட்டைக் கடைகளை நோக்கி படையெடுக்கும் ஒரு புதிய நடுத்தர வர்க்கம் உருவானது. காதலர் தினம் இந்த நடுத்தர வர்க்கங்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. ஆனால் குறைந்த வருவாய் வகுப்புகளில் இப்போக்கு அதிகம் இல்லை.[1] பல இளம் மற்றும் உழைக்கும் இந்தியர்கள் தங்கள் குடும்பங்களை விட்டு விலகி தொலைவில் வாழ்கின்றனர். இச்சூழல், குறிப்பாக பெண்கள், தங்கள் இணையைத் தெரிவு செய்ய ஒரு வாய்ப்பை வழங்குகிறது. களவொழுக்கத் தளங்களில் இளைஞர்களுக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.[3] வணிக நிறுவனங்கள் இந்த புதிய துணை கலாச்சாரத்தை பணமாக்க முயற்சித்து வருகின்றன.[2][3][4]

மறுக்கப்படும் காதல் சில நேரங்களில் துன்புறுத்தலை சந்திக்கிறது. கேலிசெய்தல் என்ற சொற்றொடராக மாற்றப்பட்டு இயலாமையென சாயம் பூசப்பட்டு அறியப்படுகிறது. எப்போதாவது அது வன்முறையாகவும் வெடிக்கிறது. அமிலத் தாக்குதல்களும் ஆங்காங்கே நடக்கின்றன.[1]

விமர்சனங்களும் எதிர்ப்புகளும் தொகு

பொதுவாக காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், காதலர் தினத்தை தடை செய்ய கோரியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அத்தோடு மட்டுமில்லாமல் காதல் தின வாழ்த்து அட்டைகளைக் கிழித்தும் அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.[5]

இந்தியாவில் மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கமே காதலர் தினம் என பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவிக்கின்றன. சிலர் இதை பெருநிறுவனங்கள் தங்களின் பொருளாதார ஆதாயத்திற்காக செய்யும் மோசடியாகவும் கருதுகின்றனர்.[2]

காதலர் தினம் என்பது இந்திய கலாச்சாரத்தின் மீது மேற்கத்திய நாடுகளின் தாக்குதல் என்றும், வணிக இலாபத்திற்காக இளைஞர்களை குற்றிவைத்து ஈர்க்கும் மோசடி என்றும் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூறிவருகிறார். அன்றைய தினம் வன்முறையை விரும்பாதவர்கள் இத்தினத்தை கொண்டாட வேண்டாம் என்று சிவசேனா தலைவர் பால்தாக்கரே போன்றவர்கள் மக்களிடம் கோரிக்கை வைக்கின்றனர்.[6] காதலர் தின விழா கொண்டாடுவது வெட்கமற்ற செயல் என்றும் அது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் இவர்கள் தொடர்ந்து பரப்புரை செய்கின்றனர்.[7] மகாராட்டிர மாநிலத்தில் காதலர் தினத்தை கொண்டாடும் பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் இக்கட்சியினரால் அடிக்கடி மிரட்டப்படுகிறது.[8] சிவசேனாவின் மும்பை நகரப் பிரிவுத் தலைவர் நானா வடேகர், காதலர் தினம் ஆபாசமான மற்றும் மோசமான செயல்களை ஊக்குவிக்கிறது என்று கருத்து கூறியுள்ளார்.[9] காதலர் தினத்தன்று பொது இடங்களில் காதலர்களைப் பிடித்தால் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படும் என சிறீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவிக்கிறார். இத்தம்பதிகள் எதிர்த்தால் பெண், பையனுக்கு ராக்கி கட்ட கட்டாயப்படுத்தப்படுவார். இது அவர்களை உடன்பிறந்தவர்களாக மாற்றும் ஒரு சடங்காகும்.[10] என்று காரணம் கூறப்படுகிறது.

விசுவ இந்து பரிசத்,[11] பச்ரங் தள்,[11] அகில பாரதிய வித்யார்த்தி பரிசத்,[12] சிறீ ராம் சேனா,[10] இந்திய மாணவர் இசுலாமிய அமைப்பு,[13] இந்து முன்னணி,[14] இந்து மக்கள் கட்சி,[15] போன்றவை காதலர் தினத்தை எதிர்க்கும் அரசியல் மற்றும் மத அமைப்புகள் சிலவாகும். காதலர் தின எதிர்ப்பு ஆர்வலர்கள் வாழ்த்து அட்டை கடைகளில் சோதனை நடத்துவதும் காதலர் தின அட்டைகள் மற்றும் பூக்களை கைப்பற்றி எரிப்பதும் ஆங்காங்கே நடக்கிறது.[6][16] விசுவ இந்து பரிசத் மற்றும் பச்ரங் தள் உறுப்பினர்கள் அழுகிய தக்காளியை காதலர்கள் மீது வீசுவதும் அறியப்படுகிறது.[11] மக்கள் சில உணவகங்களைத் தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகின்றன.[7][16] பச்ரங் தளம் கட்சியினர் காதல் தம்பதிகள் கைகளைப் பிடிக்க வேண்டாம் என்று விளம்பரப் பலகைகளை வைத்து எச்சரிப்பதும் அறியப்படுகிறது. பொது இடங்களில் காதலை வெளிப்படுத்தும் நபர்களின் புகைப்படம் எடுக்கப்படும் என்றும், அந்த புகைப்படங்கள் அவர்களது குடும்பத்தினருக்கு அனுப்பப்படும் என்ற எச்சரிக்கைகளும் விடுக்கப்படுகின்றன.[3] பொதுப் பூங்காக்களில் சுற்றித் திரியும் காதலர்கள் சில சமயங்களில் காவலர்களால் பிடிக்கப்பட்டு, அவர்களின் தலைமுடி வெட்டப்பட்டு, அவர்களை அவமானப்படுத்தும் வகையில் முகத்தில் கறுப்பு வர்ணம் பூசப்படும் நிகழ்வுகளும் நடக்கின்றன.[7][16] சில குழுக்கள் ஆடு மற்றும் நாய், அல்லது நாய் மற்றும் குதிரை போன்ற வெவ்வேறு விலங்குகளின் திருமணங்களை நடத்துகின்றன. இந்த நாளில் காட்டப்படும் காதல் போலியானது என்பதை அடையாளப்படுத்துவது இத்திருமணங்களின் நோக்கமாக கூறப்படுகிறது.[14][15]

"குழுவாக கூடி அமைதியை சீர்குலைப்பது, சத்தமாக மேளம், தாளம் அல்லது வேறு ஏதேனும் இசை கருவிகளை இசைப்பது, ஆபாசத்திற்கு சமமான வழிகளில் பாசம் காட்டுவது, குடிபோதையில் வண்ணங்களை வீசுவது, பொது இடங்களில் அமைதியை சீர்குலைப்பது போன்ற நடவடிக்கைகளை புனே காவல்துறை 2010 ஆண்டு தடை செய்தது. புனே காவல் துறையின் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து பொது மற்றும் தனியார் இடங்களிலும் உள்ள பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், பள்ளிகள், கல்லூரிகளில் மோசமான செயல்களைச் செய்தல் மற்றும் சமூக விரோத செயல்களை ஊக்குவித்தல்" போன்றவை சட்டவிரோதமானது எனவும் பிரிவு 144ன் கீழ் நடைவடிக்கை எடுக்கப்படும் எனவும் அப்போது அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை மீறுபவர்கள் ஐபிசியின் பிரிவு 188 இன் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் அறிவித்தனர்.[9]

பிப்ரவரி 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்து மகாசபையைச் சேர்ந்த சந்திர பிரகாசு கௌசிக்கு காதலர் தினத்தைச் சுற்றியுள்ள வாரத்தில் பேரங்காடிகள் மற்றும் உணவகங்கள் போன்ற பொது இடங்களில் காதலர் தினம் கொண்டாடுவதைக் கண்டால் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படும் என்று எச்சரித்தார். அவர்களில் ஒருவர் இந்து அல்லாதவராக இருந்தால், அவர்/அவள் திருமணத்திற்கு முன்பே இந்துவாக மாற்றப்படுவார் என்றும் அறிவிப்பு வெளியானது. முகநூல் முதலான பல்வேறு சமூக ஊடகங்களும் சமூக ஊடகக் குழுவினர் கண்காணிப்பர் என்றும், இணையவழியில் காதலை வெளிப்படுத்தும் எவருக்கும் திருமணம் செய்து வைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.[17]

பெற்றோர் வழிபாட்டு நாள் தொகு

2012 ஆம் ஆண்டில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சுயமாக அறிவித்துக் கொண்ட மதத் தலைவர் ஆசாராம், பிப்ரவரி 14 ஆம் தேதியை "பெற்றோர் வழிபாட்டு நாளாக" அனுசரிக்க வேண்டும் என்று கூறினார். காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக இளைஞர்களுக்கு ஒரு மாற்று வழியை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.[18]

2015 ஆம் ஆண்டில், சத்தீசுகர் மாநிலம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதியை பெற்றோர் தினம் அல்லது மாத்ரு-பித்ரு திவாசு என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆசாராமின் அறிவுரையின் பேரில் 2008 ஆம் ஆண்டு முதல் இம்மாநிலம் பெற்றோர் வழிபாட்டு நாளை அனுசரிக்க ஆரம்பித்தது. 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில், அறிவுறுத்தல்களுடன் தனி சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்த நாளில் பெற்றோர்கள் பள்ளிக்கு அழைக்கப்படுகிறார்கள். மாணவர்கள் அவர்களுக்கான பிரார்த்தனை செய்கிறார்கள்.[19]

ஆதரவும் எதிர்ப்பும் தொகு

சனவரி 2009-ல், சிறீராம் சேனா என்ற குழுவைச் சேர்ந்தவர்களால் மங்களூரில் ஒரு கேளிக்கைவிடுதி தாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காதலர் தினத்தை முன்னிட்டு, தனது அமைப்பினரும் போராட்டம் நடத்தப் போவதாக இந்தக் குழுவின் தலைவர் பிரமோத் முத்தாலிக் அறிவித்தார். முகநூலில் "கன்சார்டியம் ஆஃப் பப்-கோயிங், லூசு அண்ட் ஃபார்வர்டு வுமன்" என்று ஒரு குழு அமைக்கப்பட்டது. இது வெளிர்சிவப்பு நிற உள்ளாடைகளை முத்தாலிக்கிற்கு அனுப்புமாறு மக்களைக் கேட்டுக் கொண்டது. போராட்டத்திற்கு இளஞ்சிவப்பு உள்ளாடை பிரச்சாரம் என்று பெயரிடப்பட்டது.[20] சுமார் 34,000 பேர் இதில் கலந்து கொண்டனர்.[21]

தமிழ்நாட்டில் திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு ஆகியவை இவ்விழாவை ஆதரிக்கின்றன.[14][22] இந்நாளில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் கலப்புத் திருமணங்களை நடத்தியதுடன், இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களைக் கௌரவித்துள்ளது.[22]

2015 ஆம் ஆண்டு இந்து மகாசபையின் அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் பலர், புது தில்லி மந்திர் மார்க்கில், இந்து மகாசபை அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பலர் திருமண ஆடைகளை அணிந்திருந்தனர் மற்றும் இவர்களுடன் திருமண இசைக்குழுவினரும் வந்தனர். இந்து மகாசபை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற 220 மாணவர்களைப் போராட்டத்திற்கு அனுமதி பெறாததால் காவல்துறையினர் கைது செய்தனர்.[23]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "India's fascination with Valentine's Day". BBC News. 14 February 2002. http://news.bbc.co.uk/2/hi/south_asia/1820440.stm. பார்த்த நாள்: 27 January 2015. 
  2. 2.0 2.1 2.2 "Mobocracy and anti Valentine Day protest". தி இந்து. 1 March 2013. http://www.thehindu.com/opinion/op-ed/mobocracy-and-anti-valentine-day-protest/article4465418.ece. பார்த்த நாள்: 27 January 2015. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Valentine's Day wins Indian hearts". BBC News. 14 February 2007. http://news.bbc.co.uk/2/hi/business/6358531.stm. பார்த்த நாள்: 27 January 2015. 
  4. "India takes Valentine's Day to heart". BBC News. 14 February 2000. http://news.bbc.co.uk/2/hi/south_asia/642644.stm. பார்த்த நாள்: 27 January 2015. 
  5. "காதலர் தினம் பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?- ஆய்வில் சுவாரஸ்ய தகவல்கள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.
  6. 6.0 6.1 "Hindu and Muslim anger at Valentine's". BBC News. 11 February 2003. http://news.bbc.co.uk/2/hi/world/south_asia/2749667.stm. பார்த்த நாள்: 27 January 2015. 
  7. 7.0 7.1 7.2 "Tough love for Indian Valentines". BBC News. 14 February 2001. http://news.bbc.co.uk/2/hi/south_asia/1169077.stm. பார்த்த நாள்: 27 January 2015. 
  8. Amrita Shah (13 Feb 2003). "Debate, or the moral police". இந்தியன் எக்சுபிரசு. http://www.indianexpress.com/oldStory/18311/. பார்த்த நாள்: 7 December 2014. 
  9. 9.0 9.1 "City cops turn moral police ahead of V-Day". இந்தியன் எக்சுபிரசு. 2 February 2010. பார்க்கப்பட்ட நாள் 7 December 2014.
  10. 10.0 10.1 "We’ll not spare dating couples on Valentine’s Day: Muthalik". தி இந்து. 6 February 2009. http://www.thehindu.com/todays-paper/well-not-spare-dating-couples-on-valentines-day-muthalik/article348725.ece. பார்த்த நாள்: 27 January 2015. 
  11. 11.0 11.1 11.2 "Valentine’s Day: Bajrang Dal, VHP activists throw rotten tomatoes on couples". தி இந்து. 14 February 2014. http://www.thehindu.com/news/national/other-states/valentines-day-bajrang-dal-vhp-activists-throw-rotten-tomatoes-on-couples/article5689272.ece. பார்த்த நாள்: 27 January 2015. 
  12. "ABVP prevents Valentine’s Day celebrations". தி இந்து. 15 February 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/abvp-prevents-valentines-day-celebrations/article710483.ece. பார்த்த நாள்: 27 January 2015. 
  13. "Muslims told to stay away from Valentine's Day". தி இந்து. 14 February 2012. http://www.thehindu.com/news/cities/Hyderabad/muslims-told-to-stay-away-from-valentines-day/article2890093.ece. பார்த்த நாள்: 27 January 2015. 
  14. 14.0 14.1 14.2 "V-Day Sees Love and Hate in State". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 15 February 2015 இம் மூலத்தில் இருந்து 6 பிப்ரவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150206210737/http://www.newindianexpress.com/states/tamil_nadu/V-Day-Sees-Love-and-Hate-in-State/2014/02/15/article2057655.ece. பார்த்த நாள்: 27 January 2015. 
  15. 15.0 15.1 "Protests against Valentine’s Day celebrations". தி இந்து. 15 February 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/protests-against-valentines-day-celebrations/article4417173.ece. பார்த்த நாள்: 27 January 2015. 
  16. 16.0 16.1 16.2 "Valentine attackers held in India". BBC News. 14 February 2009. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7890457.stm. பார்த்த நாள்: 27 January 2015. 
  17. "Posted ‘I love you’ on Facebook? Get married!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 February 2015. http://timesofindia.indiatimes.com/city/meerut/Posted-I-love-you-on-Facebook-Get-married/articleshow/46124798.cms. பார்த்த நாள்: 6 February 2015. 
  18. "Worship parents on Valentine's Day, says Asaram Bapu". இந்தியா டுடே. 29 January 2012. http://indiatoday.intoday.in/story/worship-parents-on-valentines-day-asaram-bapu/1/171080.html. 
  19. "Valentine’s Day to be Parents’ Day in Chhattisgarh". தி இந்து. 7 February 2015. http://www.thehindu.com/news/national/other-states/feb-14-is-parents-day-in-chhattisgarh/article6869015.ece. பார்த்த நாள்: 14 February 2015. 
  20. "Underwear protest at India attack". BBC News. 10 February 2009. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7880377.stm. பார்த்த நாள்: 27 January 2015. 
  21. "'Pink chaddi' campaign a hit, draws over 34,000 members". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 February 2009. http://timesofindia.indiatimes.com/india/Pink-chaddi-campaign-a-hit-draws-over-34000-members/articleshow/4126529.cms. பார்த்த நாள்: 28 January 2015. 
  22. 22.0 22.1 "Demonstrations against Valentine’s Day". தி இந்து. 15 February 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/demonstrations-against-valentines-day/article4417057.ece. பார்த்த நாள்: 27 January 2015. 
  23. "More than 200 Delhi college students detained for protesting outside Akhil Bharatiya Hindu Mahasabha". இந்தியன் எக்சுபிரசு. 14 February 2015. http://indianexpress.com/article/cities/delhi/more-than-200-delhi-college-students-detained-for-protesting-outside-akhil-bharatiya-hindu-mahasabha/. பார்த்த நாள்: 14 February 2015.