இராஜம் புட்பவனம்

இராஜம் புட்பவனம் (Rajam Pushpavanam; 1918 - 6 திசம்பர் 1991), பழம்பெரும் கருநாடக இசைப் பாடகியும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் இசைக்கலைஞர் வித்துவான் புட்பவனம் ஐயரின் மகளும்,[1] மதுரை மணி ஐயரின் சிறிய தகப்பனாரின் மகளும் ஆவார்.

இராஜம் புட்பவனம்
ராஜம் புஷ்பவனம்
பிறப்புபிப்ரவரி 1918
மதுரை, இந்தியா
இறப்பு6 திசம்பர் 1991 (அகவை 73)
செயற்பாட்டுக்
காலம்
1930–1943 (கருநாடக இசை வாய்ப்பாட்டு)
வாழ்க்கைத்
துணை
எஸ். ஆர். வெங்கட்ராமன் (இ. 1950)

இளமைக் காலம் தொகு

மதுரை புட்பவனம் ஐயருக்கும் சுந்தரத்தம்மாளுக்கும் மகளாக பிப்ரவரி 1918-இல் பிறந்த இராஜம் தனது இரண்டு அல்லது மூன்று வயதில் தந்தையை இழந்தார். தனது தாயாரும் தாத்தா பாட்டியினால் வளர்க்கப்பட்டும் இசை கற்பிக்கப்பட்டும் பாடகி ஆனார். இவர் 1930-இல் தனது 12ஆவது வயதில் கொலம்பியா இசைத்தட்டில் இசைப் பதிவு ஒன்றைச் செய்தார்.[2][3] கருநாடக இசைக்கச்சேரிகள் அடுத்தடுத்து தொடர்ந்து செய்த இராஜம், 1920களின் பிற்பகுதியிலிருந்து 1940களின் முற்பகுதி வரை வெற்றிகரமான பாடகியாக இருந்தார்.

மைலாப்பூரில் 1939ஆம் ஆண்டில் 4550 ரூபாய்க்கு நிலத்தை வாங்கி, தனது தாயின் பெயரில் பதிவு செய்த பிறகு மாளிகை ஒன்றைத் தனது 21ஆவது வயதில் கட்டினார். 1940ஆம் ஆண்டில் ஓட்டுநர் உரிமம் பெற்ற இவர், சொந்தமாக வாகனம் ஒன்றை வாங்கினார். கருநாடக இசைக்கலைஞர்களில் சொந்தமாக வாகனம் ஒன்றை இயக்கும் திறன் பெற்ற முதன்மையர் என்ற பெருமையைப் பெற்றார்.

இராஜம் தென்னிந்தியாவின் முதல் பெண் இசையமைப்பாளர் ஆவார்.[4] இவர் 1937ஆம் ஆண்டில் எம். ஆர். ராதா நடித்த ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி என்ற படத்திற்கு இசையமைத்தார்.[5]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இராஜம் தனது 22 வயதில், இராம்நாத் இராச்சியத்தின் திவானாக இருந்த சுவாமிநாத ஐயரின் மகன் எஸ். ஆர். வெங்கட்ராமனை மணந்தார். சீனிவாசன் என்ற மகன் 1942-இல் பிறந்தார். 1944ஆம் ஆண்டில், இவர் கச்சேரி ஒன்றில் பங்கேற்ற போது இவருடைய இளம் மகன் நிமோனியாவின் திடீர் தாக்குதலுக்கு ஆளாகி இறந்தார். தனது மகன் இறந்தபோது இவர் தனது இசை வாழ்க்கையிலிருந்து விலகி கச்சேரி பாடுவதைக் கைவிட்டு வாழ்ந்தார்.[6]

இவருடைய கவனம் இப்போது இவருடைய குடும்பத்தின் மீது மாறியது. இவருக்கு மேலும் நான்கு குழந்தைகள் இருந்தனர். இவரது கணவர் 1950ஆம் ஆண்டில் தனது 30களின் முற்பகுதியில் இறந்தார். பிற்காலத்தில், கணவர் இறந்த பிறகு, இவர் அனைத்திந்திய வானொலியில் பாடுவது, மாணவர்களுக்குக் கற்பித்தல் என இரண்டு தசாப்தங்களாகத் தொடர்ந்து செய்து வந்தார்.

இறப்பு தொகு

இராஜம் தனது வாழ்நாள் முழுவதும் தனது மூத்த மகனுடன் வாழ்ந்தார். 1991-இல் செகந்திராபாத்தில் உள்ள தனது இரண்டாவது மகனின் வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். இவர் 8 திசம்பர் 1991 அன்று இறந்தார்.

பெருமை தொகு

சென்னை பாரத் கலாச்சாரில் இவரது நினைவாக "பால ஞான கலா பாரதி" என்ற விருது நிறுவப்பட்டுள்ளது. முதல் விருது திசம்பர் 14, 2019 அன்று தெலங்காணா ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் செல்வி சூர்யகாயத்ரிக்கு வழங்கப்பட்டது.[7][8]

பாடல்கள் தொகு

இராஜத்தின் சில பாடல்கள் யூடியூபிலும், கருநாடகப் பழைய மற்றும் அரிய பதிவுகள் தொகுப்பிலும் கிடைக்கின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Sruti. P.N. Sundaresan. 2006. https://books.google.com/books?id=tSYqAQAAIAAJ. பார்த்த நாள்: 30 July 2018. "... Those who understand carnatic music know the value of Rajam Pushpavanam's records. Not only has she a superb voice 'with beauty of tone and delicacy of expression' and style but in addition a great charm which comes through well on her ..." 
  2. Npedia Technology PVT LTD. "Rajam Pushpavanam [256]". Sruti.com. Archived from the original on 3 April 2015. பார்க்கப்பட்ட நாள் 28 March 2015.
  3. "Winding back to the yore". The New Indian Express. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 28 March 2015.
  4. "They set the trend...". https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/they-set-the-trend/article2278114.ece. 
  5. "இப்படித்தான் வளர்ந்தது தமிழ் சினிமா.. இதோ சில 'முதல்கள்'!". 25 June 2015.
  6. "Rajam Pushpavanam".
  7. "Bharat Kalachar Award Function".
  8. "Kuldeep M Pai". YouTube (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜம்_புட்பவனம்&oldid=3915789" இலிருந்து மீள்விக்கப்பட்டது