ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

சைவ சமய 63 நாயன்மார்களில், 'காடவர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மார்.

ஐயடிகள் காடவர்கோன் நாயனர் (காலம் கி.பி. 570 இல் இருந்து கி.பி. 585) என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[1][2].

ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
பெயர்:ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
குலம்:அரசர் (வன்னியகுல சத்திரியர்)
பூசை நாள்:ஐப்பசி மூலம்
அவதாரத் தலம்:திருக்கச்சி
முக்தித் தலம்:திருக்கச்சி

பெயர் விளக்கம் தொகு

காடர் என்பது பல்லவ மன்னர் வன்னியர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூவாகும். ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும்.இவர் பல்லவ மன்னராகக் காஞ்சிபுரத்தில் அரசாட்சி செய்து வந்தார்.இவர் வடமொழியில் சிம்ஹாங்க, பாதசிம்ஹா, பஞ்சபாதசிம்ஹா என்று அழைக்கப்பட்டார். மேலும் இவர் துறவறம் பூண்ட பொழுது தன் இரு மகன்களான சிம்மவிட்ணு,பீமவர்மன் ஆகியோரில் மூத்தவனான சிம்மவிட்ணுவை அசரனாக்கியதாக வடமொழிக் கதை ஒன்று கூறுவதன் மூலம், சிம்மவிட்ணு, பீமவர்மன் ஆகியோரின் தந்தை மூன்றாம் சிம்மவர்மன் என்ற பல்லவ அரசரே ஐயடிகள் காடவர் கோன் ஆகிறார்.[சான்று தேவை] மேலும் ஐயடிகள் என்பதன் வடமொழியாக்கமே "பஞ்ச பாத" ஆகும்.

துறவுள்ளம் தொகு

மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம்மன்னர் அரசுரிமையை தன் சிவனடித் தொண்டிற்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்து தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவதலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப் பாடினார். அவ்வெண்பாக்களில் 24 பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப்பெறுகின்றது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் இருக்கக் காணலாம்.

நுண்பொருள் தொகு

  1. அரச வாழ்விலும் அடியாராய் வாழ்தல் மேலானது
  2. திருத்தல தரிசனம் திருவடிப் பேறு நல்கும்

ஐயடிகள் காடவர்கோன் குருபூசை நாள்: ஐப்பசி மூலம்

மேற்கோள்கள் தொகு

  1. 63 நாயன்மார்கள், தொகுப்பாசிரியர் (01 மார்ச் 2011). ஐயடிகள் காடவர்கோன் நாயனார். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=1959. 
  2. மகான்கள், தொகுப்பாசிரியர் (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=39. 
  1. 11ஆம் திருமுறை, தருமை ஆதினம்.
  2. அறுபத்து மூவர் அறிமுகம் : திருமதி கெளரி ராஜகோபால்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை