கதர் கட்சி

இந்திய விடுதலையின் தீவிரப் போராட்டம், இந்திய,செருமானிய கூட்டுச் சதி

கதர் இயக்கம் அல்லது கதர் கட்சி (Ghadar Party, தேவநாகரி: ग़दर पार्टी, நாட்டலீக்கு: غدر پارٹی, பஞ்சாபி: ਗ਼ਦਰ ਪਾਰਟੀ) அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் வாழ்ந்த பஞ்சாபி இந்தியர்களால் உருவாக்கப்பட்ட இயக்கமாகும்.[1] இவ்வியக்கம் அமைதிப்பெருங்கடற்பகுதியில் பணியாற்றிய இந்தியர்களால் தொடங்கப்பட்டது. மியான்மர், சிங்கப்பூர், மலேசியா, சப்பான், ஆப்கானித்தான், செருமனி, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த இந்தியர்கள் அங்கிருந்தபடியே பிரித்தானியருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய நாட்டின் விடுதலைக்கு உதவிடும் நோக்கில் பல அமைப்புகளை உருவாக்கினர். அவற்றில் ஒன்று கதர் இயக்கமாகும். லாலா ஹர்தயாள், ராஷ் பிஹாரி போஸ் (இந்தியத் தேசப் படையை நிறுவியவர்), சசீந்திர சன்யால், கணேஷ் பிங்களே, சோகன் சிங் வாக்னா, தோஹி கர்த்தார் சிங் ஆகியோர் இந்திய விடுதலைக்காக வெளியிலிருந்து உதவும் பொருட்டு இவ்வமைப்பைத் தொடங்கினர்.[2]

கதர் கட்சி
கலைப்பு1919
முன்னர்அமைதிப் பெருங்கடல் இந்துசுத்தான் அமைப்பு
கொள்கைபுரட்சிகரச் சமவுடைமை
இந்தியத் தேசியம்
நிறங்கள்சிவப்பு, குங்குமப்பூ, பச்சை

கதர் இயக்கமும் ஆங்கிலேயரும் தொகு

செப்டெம்பர், 1914இல் 400 கதர் வீரர்களைச் சுமந்துகொண்டு கோம்காதா மாரு என்ற கப்பல் கொல்கத்தாத் துறைமுகம் வந்தது. அங்கு வெள்ளையப் படைகளுக்கும் கதர் வீரர்களுக்கும் இடையே கடும் போர் மூண்டது. இதில் கதர் வீரர்கள் வீரமரணம் எய்தினர். சிலரே தப்பித்தனர். இதனால் கதர் இயக்கம் சளைத்துவிடவில்லை. பெப்ரவரி 21, 1915ஆம் திகதி பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை துவக்குவதற்கு நாள் குறித்து அதற்கான மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஏராளமான நிதி திரட்டி ஆயுதங்களை வாங்கிக் குவித்த கதர் இயக்கம், தெற்காசிய நாடுகளின் படைகளில் இருந்த இந்தியப் படை வீரர்களையும் பிரித்தானிய அரசிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்யுமாறு தூண்டியது.

சதிவழக்குகள் தொகு

கதர் இயக்கத்தில் ஊடுருவியிருந்த பிரித்தானிய ஒற்றர்களால் இத்திட்டம் காலனிய அரசுக்குத் தெரிந்து விட்டது. அதன் மறைமுகத் திட்டங்களை கிர்பால் சிங் என்பவர் வெள்ளையர் அரசிடம் தெரிவித்தார். உடனடியாக முக்கியத் திட்டத்தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டதால் இக்கலகம் நிகழ்வது தவிர்க்கப்பட்டது. எனினும் ஆங்காங்கே கலகங்களும் புரட்சிகளும் மூண்டன. அவை காலனிய அரசால் அடக்கப்பட்டன. லாகூர் சதி வழக்கு, இந்து-ஜெர்மானிய சதி வழக்கு ஆகிய வழக்குகள் தொடரப்பட்டன. இதன் விளைவாக காலனிய அரசின் இந்தியக் கொள்கைகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன.

மேற்கோள்கள் தொகு

  1. "Ghadr (Sikh political organization)" (in English). Encyclopædia Britannica. Retrieved 18 September 2010.
  2. Strachan, Hew (2001), The First World War. Volume I: To Arms, Oxford University Press. USA, ISBN 0199261911.

இவற்றையும் காண்க தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதர்_கட்சி&oldid=3812989" இலிருந்து மீள்விக்கப்பட்டது