கலிவரின் பயணங்கள்

ஜோனத்தன் சுவிப்டின் 1726ஆம் ஆண்டுப் புதினம்
(கல்லிவரின் பயணங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கல்லிவரின் பயணங்கள் அல்லது டிராவல்ஸ் இண்டு செவெரல் ரிமோட் நேசன்ஸ் ஆப் த வேர்ல்டு. இன் 4 பார்ட்ஸ். பை லெமுவேல் கல்லிவர், பர்ஸ்ட் எ சர்ஜியன், அன்ட் தென் எ கேப்டன் ஆப் செவெரல் ஷிப்ஸ் என்பது ஒரு உரைநடை வடிவில் உள்ள நையாண்டி புத்தகமாகும்.[1][2] இது 1726 ஆம் ஆண்டு அயர்லாந்தின் எழுத்தாளர் மற்றும் மதகுருவான ஜோனதன் ஸ்விப்டால் எழுதப்பட்டது. இது மனித இயல்பு மற்றும் பயணக் கதைகள் இலக்கிய துணை வகை ஆகிய இரண்டையுமே நையாண்டி செய்தது. ஸ்விப்டால் முழுவதுமாக எழுதப்பட்ட வேலைப்பாடுகளிலேயே இது பிரபலமானதாகும். ஆங்கில இலக்கியத்தின் ஒரு உன்னதமான படைப்பாக இது கருதப்படுகிறது. தான் கல்லிவரின் பயணங்கள் நூலை எழுதியது உலகத்தை வெறுப்பேற்ற தானே தவிர அதனை  நல்வழிப்படுத்த அல்ல என ஸ்விப்ட் கூறியுள்ளார்.

கல்லிவரின் பயணங்கள்
கல்லிவரின் பயணங்கள் முதல் பதிப்பு
நூலாசிரியர்ஜோனதன் ஸ்விப்ட்
நாடுஇங்கிலாந்து
மொழிஆங்கிலம்
வகைநையாண்டி, கற்பனை
வெளியிடப்பட்டது28 அக்டோபர் 1726 (297 ஆண்டுகள் முன்னர்) (1726-10-28)
வெளியீட்டாளர்பெஞ்சமின் மோட்டே

கதை தொகு

பாகம் ஒன்று: லில்லிபுட்டுக்கு ஒரு பயணம் தொகு

 
லில்லிபுட்டில் மக்களால் சூழப்பட்ட கலிவரைச் சித்தரிக்கும் சுவரோவியம்.

பயண நூல் ஒரு சிறிய முன்னுரையுடன் தொடங்குகிறது, அதில் லெமுவேல் கலிவர் தனது பயணங்களுக்கு முன் தனது வாழ்க்கை மற்றும் வரலாற்றை சுருக்கமான விளக்கத்தை அளிக்கிறார்.

4 மே 1699 - 13 ஏப்ரல் 1702

தனது முதல் பயணத்தின் போது, ​​கலிவர் ஒரு கப்பல் விபத்தினால் கரை ஒதுங்கினார். அவர் கரை ஒதுங்கிய தீவான லில்லிபுட் தீவு நாட்டு மக்களான 6 அங்குலத்துக்கும் (15 செமீ) குறைவான உயரமுள்ள, குட்டி மனித இனத்தவரின் கைதியாக ஆக்கபடுகிறார். கலிவர் தன் நன் நடத்தைக்கு உத்தரவாதம் அளித்த பிறகு, அவருக்கு லில்லிபுட்டில் ஒரு குடியிருப்பு வழங்கப்படுகிறது. மேலும் லில்லிபுட் அரசவையின் விருப்பமானவராக மாறுகிறார். லில்லிபுட் மன்னரால் அவர் தனது குடிமக்களைத் துன்புறுத்தக்கூடாது என்ற நிபந்தனையுடன் நகரத்தை சுற்றி வந்து பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறார்.

முதலில், லில்லிபுட் மக்கள் கலிவருக்கு விருந்தோம்பல் செய்கிறார்கள். ஆனால் அவரது பெரிதான உடல் அளவால் தங்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படுமோ என்று அவர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். லில்லிபுட்டியர்கள் அற்ப விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மக்களாக இருக்கின்றனர். உதாரணமாக, ஒரு நபர் உணவுக்காக முட்டையின் எந்த முனையை உடைக்கிறார் என்பதைக் கொண்டு அந்த தேசத்திற்குள் ஆழமான அரசியல் பிளவுகள் நிலவுகின்றன. கலிவர் லில்லிபுட்டியர்களின் அண்டை தீவு நாடான பிளெஃபுஸ்குடியன்களின் போர் அச்சுறுத்தல்களில் இருந்து அவர்களது போர்க் கப்பல்களை திருடிக்கொண்டு வந்தவதன் மூலம் அவர்களைக் கட்டுப்படுத்தி உதவிசெய்கிறார். இருப்பினும், அவர் அண்டை தீவு நாடான பிளெஃபுஸ்குவை லில்லிபுட் நாட்டின் ஒரு பகுதியாக மாற்ற மறுத்ததால், அரசருக்கும் அரசவையின் அதிருப்திக்கும் ஆளாகிறார்.

கலிவர் அரண்மனையில் ஏற்பட்ட தீயை அணைத்த போது அரசியின் மாளிகையின்மீது சிறுநீர் கழித்து தீயை அணைத்தார். அரண்மனை மீது சிறுநீர் கழித்தது போன்ற குற்றங்களுக்காக அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு. அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு கண்பார்வையை பறிக்க தண்டனை விதிக்கப்படுகிறது. அவர்மீது அன்பு கொண்ட ஒரு நண்பரின் உதவியால் இதை அறியும் கலிவர், பிளெஃபுஸ்கு தீவு நாட்டுக்குத் தப்பிச் செல்கிறார். அங்கே, அவர் கடலில் ஒரு கைவிடப்பட்ட படகைக் கண்டறிந்து அதன் வழியாக தப்பிச்செல்கிறார். அவ்வாறு தப்பிச் செல்லும்போது தன்னுடன் அளவில் சிறியதாக உள்ள சில லில்லிபுட்டியன் விலங்குகளையும் கொண்டு செல்கிறார்.

பாகம் இரண்டு: பிரோப்டிங்நாக்கிற்கு ஒரு பயணம் தொகு

 
கலிவரை பிரோப்டிங்நாக் விவசாயி காட்சிப்படுத்துதல் (ரிச்சர்ட் ரெட்கிரேவ் வரைந்த ஓவியம்)
20 சூன் 1702 – 3 சூன் 1706

கல்லிவர் விரைவில் மீண்டும் கப்பலில் புறப்படுகிறார். அட்வென்ச்சர் என்ற பாய்மரக் கப்பலானது புயலால் அடித்துச் செல்லப்படுகிறது. குடி நீரைத் தேடி தரைப்பகுதிக்குச் செல்லும்போது, கலிவரை அவரது தோழர்கள் வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குக் கடற்கரையில் உள்ள ஒரு தீபகற்பத்தில் தனித்து விட்டுச் சென்றுவிடுகின்றனர்.

பிரோப்டிங்நாக்கில் உள்ள புல் மரத்தைப் போல உயரமானது. அதைப்போல வே உயிரினங்களும் மிகப்பெரியவை. பின்னர் அவர் சுமார் 72 அடி (22 மீ) உயரமுள்ள ஒரு விவசாயியால் கண்டுபிடிக்கப்படுகிறார். அந்த இராட்சத விவசாயி கலிவரை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார். அவரது மகளான கிளூம்டால்க்ளிச் கலிவரை கவனித்துக் கொள்கிறாள். விவசாயி கலிவரை ஒரு அபூர்வ உயிரினமாக கருதி பணத்திற்காக காட்சிப்படுத்துகிறார். காட்சிப்படுத்த தொடர்ந்து ஊர் ஊராக எடுத்துச் சென்றதனால் கலிவர் நோய்வாய்ப்படுகிறார். பின்னர் விவசாயி அவரை நாட்டின் அரசிக்கு விற்றுவிடுகிறார். கிளூம்டால்க்ளிட்ச் (கலிவரைக் காட்சிப்படுத்தும் போது தன் தந்தையுடன் வந்தவள்) அந்தச் சிறிய மனிதனைக் கவனித்துக்கொள்வதற்காக அரசியால் அரண்மனையில் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படுகிறாள். கலிவர் அவர்களின் பெரிய இருக்கைகள், படுக்கைகள், கத்திகள், முட்கரண்டிகள் போன்றவற்றை பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகச் சிறியவர் என்பதால், அரசி அவருக்காக பிரத்தியேகமாக ஒரு சிறிய வீட்டைக் கட்டும்படி கட்டளையிடுகிறார். இது அவரது "பயண பெட்டி" என்று குறிப்பிடப்படுகிறது.

இராட்சத குளவிகளுடன் சண்டையிடுவது, குரங்கால் கூரைக்கு கொண்டு செல்லப்படுவது போன்ற சின்னசின்ன சாகசங்கள் நடக்கின்றன. இதற்கிடையில் அவர் பிரோப்டிங்நாக் மன்னருக்கு ஐரோப்பா பற்றி விளக்குகிறார். குறிப்பாக துப்பாக்கிகள், பீரங்கிகளைப் போன்றவற்றை ஐரோப்பாவில் பயன்படுத்துவதை கல்லிவரின் மூலமாக அறிந்த மன்னர் அதுகுறித்து மகிழ்ச்சியடையவில்லை. ஒரு கடலோரப் பயணத்தின்போது, கலிவர் வசிக்கும் பயணப் பெட்டியை ஒரு பெரிய கழுகு தூக்கிச் செல்கிறது. அது கல்லிவருடன் அந்தப் பெட்டியை கடலில் போட்டுவிடுகிறது. அவரை ஒரு கப்பலில் உள்ள மாலுமிகளால் மீட்கபட்டு இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பாகம் மூன்று: லாபுட்டா, பால்னிபார்பி, லுக்நாக், குளுப்டுப்டிரிப், யப்பானுக்கு பயணங்கள் தொகு

 
கல்லிவர், மிதக்கும்/பறக்கும் தீவான லாபுட்டாவைப் பார்க்கிறார் (ஜே. ஜே. கிராண்ட்வில்லின் சிதரிப்பு)
5 ஆகத்து 1706 - 16 ஏப்ரல் 1710

மீண்டும் கப்பல் பயண் மேற்கொள்கையில், கலிவரின் கப்பல் கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுகிறது. அதன்பிறகு அவர் இந்தியாவிற்கு அருகிலுள்ள ஒரு பாறைகள் நிறைந்த தீவுக்கு அருகில் சிக்கிக்கொள்கிறார். இசை, கணிதம், வானியல் ஆகிய கலைகளில் தீவிர ஆர்வம் கொண்ட ஒரு இராச்சியமான லாபுட்டா என்ற பறக்கும் தீவுவாசிகளால் அவர் மீட்கப்படுகிறார். தரையில் கிளர்ச்சியில் ஈடுபடும் நகரங்களை வழிக்கு கொண்டுவர படைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவற்றின் மீது பாறைகளை வீசுவதை லபுட்டா வழக்கமாகக் கொண்டிருந்தது.

கலிவர், லாபுட்டாவில் இருந்து ஆட்சி செய்த பால்னிபார்பியில், அரசவையின் விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அபத்தமான பல திட்டங்களை ஆராய்வதில் பெரும் செல்வமும் மனிதவளமும் வீனாக்கபடுவதைக் காண்கிறார். கலிவர் பின்னர் பால்னிபார்பியின் முக்கிய துறைமுகமான மால்டோனாடாவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கிருந்து அவரை யப்பானுக்கு அழைத்துச் செல்ல ஒரு வர்த்தகர் காத்திருக்கிறார்.

பால்னிபார்பியின் தென்மேற்கே உள்ள கிளப்டுப்டிரிப் தீவுக்கு கல்லிவர் ஒரு குறுகிய காலப் பயணத்தை மேற்கொள்கிறார். கிளப்டுப்டிரிப் தீவில், அவர் ஒரு மந்திரவாதியின் இருப்பிடத்துக்குச் சென்று வரலாற்று கால நபர்களின் ஆவிகளுடன் வரலாற்றைப் பற்றி விவாதிக்கிறார். ஆவிகளில் யூலியசு சீசர், புருடஸ், ஓமர், அரிசுட்டாட்டில், ரெனே டேக்கார்ட், பியர் கேசெண்டி ஆகியோரை சந்திக்கிறார்.

லுக்னாக் தீவில், அவர் இறப்பற்ற சிரஞ்சீவி மனிதர்களை சந்திக்கிறார். அவர்களுக்கு நித்திய இளமை என்னும் பேறு இல்லை. அதனால் முதுமையின் குறைபாடுகள் இருந்தன. மேலும் எண்பது வயதில் சட்டப்பூர்வமாக இறந்ததாக அவர்கள் கருதப்பட்டடனர்.

பின்னர் கல்லிவர் யப்பானை அடைகிறார். கல்லிவர் தனது எஞ்சிய நாட்களை தன் வீட்டிலேயே தங்கிவிட வேண்டும் என்ற தீர்மானத்துடன் வீடு திரும்புகிறார்.

பாகம் நான்கு: இயூனங்களின் நிலத்துக்கு ஒரு ஒரு பயணம் தொகு

 
இயூனம்களுடன் கலந்துரையாடும் கலிவர் (1856 இல் ஜே.ஜே. கிராண்ட்வில்லின் சித்தரிப்பு).

சொந்த ஊரிலேயே இனி இருக்க வேண்டும் என்ற அவர் முதலில் எண்ணினார். கப்பலில் அறுவைசிகிச்சை நிபுணராக பணியாற்றுவதில் சலிப்பு ஏற்பட்டவராக இருந்த நிலையில், கலிவர் ஒரு வணிக கப்பலில் தலைவனாக கப்பல் வேலைக்கு வருகிறார். இந்தப் பயணத்தில், அவருக்கு எதிராக கப்பல் குழுவினர் கலகம் செய்கின்றனர். சிறிது காலம் அவரை அடக்கி வைத்திருந்த குழுவினர், அவர்கள் முதலில் எதிர்கொள்ளும் நிலத்தில் அவரை விட்டுவிட்டு, கடற்கொள்ளையர்களாக செயல்பட முடிவு செய்கிறார்கள். ஒரு நிலத்தில் தரையிறங்கும் அவர் அசிங்கமான காட்டுமிராண்டித்தனமான மனித உருவம் கொண்ட யாகூ என்ற உயிரினங்களை எதிர்கொள்கிறார். அவற்றிடம் வன்முறை கொண்ட எதிர்ப்புணர்வால் அச்சுறுத்தப்படுகிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் பேசும் குதிரை இனமான இயூனங்களை சந்திக்கிறார். அவர்கள் அந்த நிலத்தின் ஆட்சியாளர்களாக உள்ளனர், அதே நேரத்தில் மனிதர்களை ஒத்த அருவருப்பான உயிரினங்கள் யாகூக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கல்லிவர் ஒரு குதிரையின் குடும்பத்தில் உறுப்பினராகி, இயூன்ம்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையைப் போற்றவும் அதைப் பின்பற்றவும் செய்கிறார். அவர்களின் வாழ்க்கை முறை மனிதரின் வாழ்க்கை முறையைவிட அறத்தில் மேம்பட்டதாக உணர்கிறார். இருப்பினும், இயூனங்களின் கூட்டமைப்பானது, ஒரு யாகுவான கலிவரால் தங்கள் நாகரீகத்திற்கு ஆபத்து என்றும், அவர் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே மீண்டும் நீந்தி செல்லவேண்டும் என்று கட்டளையிடுகிறனர். கலிவருக்கு அடைக்கலம் கொடுத்திருந்த, இயூனம், அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். கலிவர் புறப்படுவதுக்கு ஏதுவாக ஒரு படகை உருவாக்க அவருக்கு நேரம் அளிக்கப்படுகிறது. மற்றொரு ஆபத்தான பயணத்திற்குப் பிறகு, ஒரு போர்த்துகீசிய கப்பல் மூலம் அவரது விருப்பத்திற்கு மாறாக மீட்கப்படுகிறார். யாகூ என்று அவர் கருதும் கப்பல் தலைவர் பெட்ரோ டி மென்டெஸ் ஒரு புத்திசாலி, மரியாதையும், தாராள மனப்பான்மையும் கொண்டவர் என்பதைக் கண்டு அவர் கொண்டுகொள்கிறார்.

இறுதியில் அவர் இங்கிலாந்தில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்புகிறார், ஆனால் மனிதர்களை "யாகூக்கள்" என கருதும் அவர் யாகூக்களுக்கு இடையில் வாழ்வதில் சமரசம் செய்து கொள்ள முடியாமல் தவிக்கிறார். தன் மனைவி உள்ளிட்ட குடும்பத்தாருடன் ஓட்டாமல் ஒரு தனிமனிதனாக மாறி, தனது வீட்டில் தங்கி, ஒரு நாளில் பல மணி நேரம் குதிரைகளுடன் தனது குதிரை லாயத்தில் கழித்து அவற்றுடன் பேசிக்கொண்டு வாழ்கிறார்.

தமிழ் மொழிபெயர்ப்பு தொகு

கலிவரின் பயணங்கள் புதினத்தை தமிழில் யூமா. வாசுகி மொழிபெயர்த்துள்ளார்.[3] அதன் முதற்பதிப்பு 2013 ஆம் ஆண்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

உசாத்துணை தொகு

  1. Swift, Jonathan (2003). DeMaria, Robert J. ed. Gulliver's Travels. Penguin. பக். xi. 
  2. Swift, Jonathan (2009). Swift's 'I' Narrators. ed. Gulliver's Travels. W. W. Norton. பக். 875. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-393-93065-8. 
  3. "யூமா வாசுகி: மொழிபெயர்ப்பாளராய் ஒரு படைப்பாளி!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிவரின்_பயணங்கள்&oldid=3438405" இலிருந்து மீள்விக்கப்பட்டது