குறிப்புரை (இலக்கணம்)

குறிப்புரை என்னும் இலக்கணத் தொடரைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இத்தொடரை அது இன்ன என்னும் குறிப்புரை என்று தெளிவாக்கிக் குறிப்பிடுகிறது. இந்த வகையான குறிப்புரைப் பேச்சு இலக்கியங்களில் மட்டுமே வரும். பேச்சு மொழியில் இவ்வாறு கூறப்பட்டால் அது உருவகம் எனக் கொள்ளப்படும். வாராத இயற்கைப் பொருளை வா என்று அழைப்பதும், பேசாத பொருள்களைப் பேசுவது போலக் கூறுவதும் இயற்கைஐயின்மேல் தன் குறிப்பை ஏற்றும் குறிப்புரை ஆகும் என அது குறிப்பிடுகிறது.[1]

எடுத்துக்காட்டு தொகு

தொல்காப்பியம் குறிப்பிடும் இந்த வகையான குறிப்புரை இரண்டு வகையில் அமையும். தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் அவற்றிற்குத் தரும் எடுத்துக்காட்டுகள் இவை:

வாரா மரபின வரக் கூறுதல்
மலை வந்து கிடந்தது. நெறி வந்து கிடந்தது. - இவறை இக்காலத்தில் மலை அருகில் வந்தது. இந்த வழி கருவூருக்குப் போகும். - என்றெல்லாம் பேசுகிறோம்.
என்னா மரபின எனக் கூறுதல்
நிலம் வல்லென்றது, நீர் தண்ணென்றது, இலை பச்சென்றது - இப்படி வரும். வனமையாகக் கெட்டிப்பட்டுக் கிடத்தல் நிலத்தின் இயல்பு. இதனை வன்மை ஆயிற்று எனக் கூறுதல் கூறுபவனின் குறிப்பு.
புலவர் பிசிராந்தையார் "அன்னச் சேவல், அன்னச் சேவல்" என அழைத்து கோப்பெருஞ் சோழனிடம் தன்னைப்பற்றித் தூது சொல்லி அவை அணிந்துகொள்ளாத அணிகலன்களை அவனிடமிருந்து பரிசாகப் பெற்றுக்கொள்ளுமாறு கூறும் புறநானூற்றுப் பாடல் குறிப்புரை இலக்கணப் பாங்கிற்கு இலக்கியமாகத் திகழ்கிறது.

அடிக்குறிப்பு தொகு

  1. வாரா மரபின வரக் கூறுதலும்
    என்னா மரபின எனக் கூறுதலும்
    அன்னவை எல்லாம் அவற்று அவற்று இயலான்
    இன்ன என்னும் குறிப்புரை ஆகும்.(தொல்காப்பியம் எச்ச-இயல் 26)

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறிப்புரை_(இலக்கணம்)&oldid=2746264" இலிருந்து மீள்விக்கப்பட்டது