சப்படி பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

சப்படி பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், சப்படி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:சப்படி, ஓசூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஓசூர்
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:பிரசன்ன வெங்கட்ரமணசாமி
தாயார்:ஸ்ரீதேவி, பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:4ம் சனி, வைகுண்ட ஏகாதசி
வரலாறு
கட்டிய நாள்:பதிமூன்றாம் நூற்றாண்டு

தலச்சிறப்பு தொகு

இக்கோயிலானது ஆமையின் வடிவொத்த மூன்று கற்குன்றங்களின் உச்சியில் அமைந்துள்ளது. இதனால் இத்தலம் ஆமைமலை என்ற பொருள்படும் கூர்மகிரி என்று அழைக்கப்படுகிறது. இது முன்னாட்களில் கஸ்யபசைலம் என அழைக்கப்பட்டது.

வரலாறு தொகு

இக்கோயில் பதிமூன்றாம் நூற்றாண்டில் ஸ்ரீனிவாச பண்டிதர் என்பவரால் அமைக்கப்பட்டது. இதனால் இந்த இடம் இவர்பெயராலேயே ஸ்ரீனிவாச பண்டித அக்ராரம் என அழைக்கப்படுகிறது.[2]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயில் மூன்று மலைகள் மீது கோட்டை போன்ற பிரம்மாண்ட மதில் சுவர்களுடன் நாயக்கர் கலைபாணியில் கட்டப்பட்ட கோயிலாக உள்ளது. இக்கோயிலின் மதில்சுவர் 17 அடி உயரத்துடன் கோட்டை அமைப்பில் செவ்வக வடிவில் கிழக்கு மேற்காக 144 அடி நீளமும், வடக்குத் தெற்காக 135 அடி அகலமும் கொண்டு பிரம்மாண்டமான ஏழு வாயில்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. முதன்மை வாயில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலின் முன்புறம் தீபத்தூணும், பலிபீடமும் அமைந்துள்ளன. பலிபீடத்தை ஒட்டி கருடாழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. அழகிய சிற்பங்களுடன்கூடிய நான்கு தூண்களைக் கொண்டதாக மகாமண்டபம் உள்ளது. அதையடுத்து துவாரபாலகர்கள் முன்னாள் நிற்க அர்த்த மண்டபம் உள்ளது. அதையடுத்து கருவறை உள்ளது. கருவறையில் பிரசன்ன வெங்கட்ரமணசாமி நின்ற கோலத்தில் சங்கு சக்ரதாரியாக, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சன்னதியில் உள்ளார். கருவறையின் தென்மேற்குப் பகுதியில் லட்சுமி நரசிம்மர் சந்நிதி உள்ளது. வடமேற்குத் திசையில் அனுமன் சந்நிதியும் நவக்கிரகங்கள் சந்நிதியும் உள்ளன. மேலும் திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள், அலமேலு மங்கை உபசன்னதிகள் போன்றவை உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் 4ம் சனி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது.

அமைவிடம் தொகு

கிருஷ்ணகிரி -ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் 21 கி.மீ தொலைவில் உள்ள சூளகிரியில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் சப்படி உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
  2. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. பக். 103-105. 
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)