சரி கோயில், யோக்யகர்த்தா

சரி கோயில் (Candi Sari) ( இந்தோனேசிய மொழி: Candi Sari மேலும் Candi Bendah எனவும் அழைக்கப்படும்) இந்தோனேஷியாவில் யோக்யகர்த்தாவில் சலேமான் ரீஜன்சி, கலாசன், தீர்த்தோமார்த்தனி, டஸ்பன் பெண்டன் என்னுமிடத்தில் அமைந்துள்ள 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்தக் கோயில் ஆகும்.. :90 இக் கோயில் கலாசன் கோயிலிலிருந்து வடகிழக்கில் சுமார் 130 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் மரக் கற்றைகள், மாடிகள், ஜன்னல்கள் மற்றும் கதவுகளால் கட்டப்பட்ட படிக்கட்டுகள் ஆகியவற்றைக் கொண்ட இரண்டு மாடி கட்டிடமாக இருந்தது; அனைத்தும் தற்போது சிதைந்து விட்டது. இந்த கட்டிடத்தின் அசல் கட்டடம் விகாரை எனப்படுகின்ற துறவிகள் வசிக்கும் இடமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. [1] கோயிலின் பெயர் சரி அல்லது சரே ஜாவானிய மொழியில் "தூங்குவது" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இது கட்டிடத்தின் வசிப்பிட தன்மையையும் உறுதிப்படுத்துகிறது.

சரி கோயில், முன் பக்கத் தோற்றம்
சரி கோயில், பின் பக்கத் தோற்றம்
சரி கோயிலின் உட்புறம்
சரி கோயிலின் மாதிரி வடிவம்

வரலாறு தொகு

கலாசன் கோயில் இருந்த அதே காலகட்டத்தில் இந்த கோயில் கட்டப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். சமஸ்கிருதத்தில் நாகரி எழுத்தில் எழுதப்பட்ட, கி.பி. 778 ஆம் நாளிட்ட கலாசன் கல்வெட்டின்படி[2] இக்கோயில்  ''குரு சங் ராஜா சைலேந்திரவம்சதிலகா'' (சைலேந்திர [3] குடும்பத்தின் நகை) என்பவரின் விருப்பப்படி அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் மகாராஜா தேஜபூர்ணபன பனங்கரனை [4] (கல்வெட்டின் மற்றொரு பகுதியில் கரியானா பனங்கரன் என்றழைக்கப்படுகிறது) வற்புறுத்தி தாராபவனம் என அழைக்கப்படுகின்ற, (போதிசத்வதேவி) தாராவிற்காக புனித கட்டிடத்தையும் ஒரு விகாரை (சைலேந்திரர் குடும்பத்தினருக்காக) அமைக்கவும் தூண்டியுள்ளார். [5] :89 இதற்காக பனங்கரன், கலரா என்னும் கிராமத்தை சங்கத்திற்கு (பௌத்தத் துறவற சமூகம்) வழங்கினார். [6] இந்த கல்வெட்டின் அடிப்படையில், அருகிலுள்ள கலாசன் கோயிலுக்கு சேவை செய்த துறவிகளுக்கு சரி கோயில் அநேகமாக ஒரு மடம் போல இருந்து வந்துள்ளது.

1920 களின் முற்பகுதியில் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன, 1929 ஆம் ஆண்டில், கோயிலை புனரமைக்கும் முயற்சி தொடங்கப்பட்டு 1930 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. இருப்பினும் இது முழுமையடையவில்லை. ஏனெனில் கோயிலைச் சுற்றியுள்ள வெளிப்புறத் தளம், மற்றும் கோயிலின் கிழக்குச் சுவரிலிருந்து ஒரு காலத்தில் இருந்த முன் அறை மற்றும் முன் படிக்கட்டுகள் உட்பட பல பகுதிகளைக் காணவில்லை. [1]

கட்டிடக்கலை தொகு

கோயில் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை அடிப்படை, உடல் மற்றும் கூரை என்ற மூன்று நிலைகளில் அமையும். இந்தக் கோயில் செவ்வக வடிவில் உள்ளது, இது 17.3 மீ வடக்கு-தெற்கு, 10 மீ மேற்கு-கிழக்கு, மற்றும் 17 மீ உயரம் கொண்டதாகும். அடித்தளத்தின் சில பகுதிகள் மட்டுமே காணப்படுகின்றன. வெளிப்புற அடித்தள கற்கள் காணவில்லை. நுழைவு கதவு கிழக்குப் பகுதியில் காலா மற்றும் யானை செதுக்கலால் அலங்கரிக்கப்பட்ட வாயிலைக் கொண்டு அமைந்துள்ளது. சுவர்களைச் சுற்றி, கீழ் மற்றும் மேல் வரிசைகளில் ஜன்னல்கள் போன்ற அமைப்பு உள்ளது. சுவரைச் சுற்றி ஒரு கிடைமட்ட நடுத்தர "பெல்ட்" கோடு உள்ளது. அதன்மூலமாக அது இரண்டு மாடி கட்டிடம் ஆக இருந்திருக்கலாம் என்று எண்ண முடிகிறது. [1]

உட்புறம் மூன்று அறைகளைக் கொண்டுள்ளது. அவை வடக்கு அறை, மத்திய அறை மற்றும் தெற்கு அறை என்பனவாகும். ஒவ்வொன்றும் 3 மீ x 5.8 மீ அளவினைக் கொண்டுள்ளன. இந்த மூன்று அறைகள் வடக்கு-தெற்கு அச்சில் அறையின் கிழக்குப் பக்கத்தில் கதவுகளைக் கொண்டு இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையின் சுவரிலும் மரக் கற்றைகளைத் தாங்குகின்ற கல் தொகுதிகள் மற்றும் மேல் மற்றும் கீழ் தளங்களை பிரிக்கும் ஒரு மர மேற்கூரை வரிசைகள் காணப்படுகின்றன. அப்பகுதியில் மர படிக்கட்டு இருந்திருக்கலாம் என்பதை உணர்த்தும் வகையில் கட்டட அமைப்பு உள்ளது.

 
சரி கோயில், புகைப்படம் : கிறிஸ்டியன் பெஞ்சமின் நியுவென்ஹுயிஸ் (1901)

மேல் நிலை அநேகமாக துறவிகளால் தியானம் அல்லது வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்டதாக இருந்திருக்கலாம். துறவிகள் தங்க, ஓய்வெடுக்க அல்லது தூங்குவதற்கான இடமாக மேல் அறைகள் பயன்படுத்தப்பட்டதாக சிலர் கருதுகின்றனர். அதே நேரத்தில் கீழ் அறைகள் வழிபாட்டுக்கான இடமாக இருந்தன. கீழ் அறைகளில் சிலைகள் வைக்கப்பட்டிருந்த சில உயரமான பகுதிகள் உள்ளன. ஆனால் தற்போது அங்கு சிலைகள் காணப்படவில்லை. பக்கச் சுவர்களில் எண்ணெய் விளக்குகள் வைக்க, மாடங்கள் போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு சாளரத்தின் உள் பகுதியிலும் மர ஜன்னல் கம்பிகளைப் பொருத்தும் அளவிற்கு துளைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அறைகள் காலா-மகரஸால் அலங்கரிக்கப்பட்ட மூன்று குதிரைக்குளம்பு வடிவிலான மாடங்களைக் கொண்டு இடங்களுடன் இருந்தன. மேலும் அதற்கு மேல் மூன்று வரிசை ஸ்தூபிகள் உள்ளன. இந்த வளைந்த மாடங்களுக்கிடையில் மழை-நீர் வடிகால் அமைப்பு உள்ளது. "ஜலத்வாரா" நீர் வெளிவருவதைப் போல அது உள்ளது. ஒரு மாபெரும் உருவம் பாம்பின் மீது அமர்ந்திருப்பதைப் போல அது காணப்படுகிறது.

வெளிப்புறச் சுவர் பெளத்த தெய்வங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வெளியில் தாரா சிலைகள் உள்ளன. அவை மலர்களுடன் உள்ளன. போதிசத்துவர் சிலைகள் இசைக்கருவிகளைக் கொண்டு அமைந்துள்ளன.[7] இவை இரண்டு மேல் மற்றும் இரண்டு கீழ் வரிசை என்ற நிலைகளில் அமைக்கப்பட்டு ஜன்னல்களின் ஒவ்வொரு பக்கத்திலும் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக மொத்தம் 36 சிலைகள் காணப்படுகின்றன. அவை முறையே கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு பக்கங்களில் 8 எண்ணிக்கையாகவும், மற்றும் மேற்கு பக்கத்தில் 12 எண்ணிக்கையாகவும் காணப்படுகின்றன. இந்த பௌத்தச் சிலைகள் வழக்கமான திரிபங்காவின் அழகிய நிலையில் காணப்படுகின்றன, சிவப்பு அல்லது நீல தாமரைகளை வைத்துக்கொண்டு அமைதியான முகபாவனைகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. காண்பிக்கும். கின்னாரா-கின்னாரி உருவங்களும் சுவர்களை அலங்கரிக்கின்றன.

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 The information board at the Sari Temple vicinity
  2. "Kalasan inscription", Wikipedia (in ஆங்கிலம்), 2019-06-27, பார்க்கப்பட்ட நாள் 2019-12-05
  3. "Shailendra dynasty", Wikipedia (in ஆங்கிலம்), 2019-11-22, பார்க்கப்பட்ட நாள் 2019-12-05
  4. "Panangkaran", Wikipedia (in ஆங்கிலம்), 2019-09-30, பார்க்கப்பட்ட நாள் 2019-12-04
  5. George Coedès (1968). Walter F. Vella. ed. The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8248-0368-1. 
  6. Soetarno, Drs. R. second edition (2002). Aneka Candi Kuno di Indonesia (Ancient Temples in Indonesia), pp. 41. Dahara Prize. Semarang. ISBN 979-501-098-0.
  7. Dumarçay, Jacques (1978). translated by Michael Smithies. ed. Borobudur. Oxford University Press. பக். 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-580379-2. https://archive.org/details/borobudur00duma. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரி_கோயில்,_யோக்யகர்த்தா&oldid=3243236" இலிருந்து மீள்விக்கப்பட்டது