வசன சாகித்தியம்

வசன சாகித்தியம் அல்லது வசனம் என்பது, கன்னடப் பாட்டியலின் ஒரு வகையாகும். கி.பி 11ஆம் நூற்றாண்டில் உருவாகி, 12ஆம் நூற்றாண்டளவில் பெருமளவு வளர்ச்சிகண்ட இது, மிக இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய எளிய சொல்லாடல்களால் ஆனது.வசனங்கள் தோன்றிய அதே காலப்பகுதியில் எழுந்த வீரசைவ இயக்கத்தின் முக்கியமான கொள்கைபரப்புங் கருவியாகவும் அது காணப்பட்டது. தமிழில் எழுந்த தேவாரங்களுடன் இவற்றை ஒப்பிடலாம்.

வரலாறு தொகு

பதினோராம் நூற்றாண்டு மேலைச் சாளுக்கியர் ஆட்சியின் கீழ் வாழ்ந்த ஓர் தாழ்குலத்து ஞானியான "மாதர சென்னையா" என்பவரே, இத்தகைய கவிதைகளை முதன்முதலில் உருவாக்கியவராகச் சொல்லப்படுகிறார். பிற்காலத்தில், தென்காலச்சூரி அரசின் முதலமைச்சரும், வீர சைவத்தை முன்னெடுத்தவருமான பசவர், சென்னையாவையே தன் வசனங்களின் தந்தை என்று போற்றுகின்றார்.


வசனங்களின் அமைப்பு தொகு

 
வசனங்களை எழுதியோரில் ஒருவர். வீரசைவப் பெருமகன் பசவண்ணர்.

"வசன" என்றால் கன்னடத்தில் "சொல்லப்பட்டது" எனப்பொருள்படும். பெரியோரால் சொல்லப்பட்ட அரிய விடயங்கள், வசனகலு என்று அறியப்பட்டன. வசனங்கள் வாழ்க்கையின் நிலையாமை, சிவபக்தி நோக்கிய அடியவனின் நகர்வு, பாகுபாடின்மை,சிவனை அடைவதற்காக உலக இச்சையிலிருந்து விலகுதல் [1] போன்றவற்றைப் பாடுபொருளாய்க் கொண்டமைந்தவை. மிகச்சிறிய பந்தி அமைப்புக் கொண்டவை. அவற்றின் இறுதி, சிவனைக் குறிக்கும் ஏதாவது ஒரு விளியுடன் முடிவுறும். அவ்விளியைக் கொண்டு பாடியவர் யாரென்று இனங்கண்டுகொள்ளமுடியும். உதாரணமாக, பசவர், கூடல சங்கமேசுவரா என்றும், அல்லமப் பிரபு குகேசுவரா என்றும், அக்கா மகாதேவி சென்ன மல்லிகார்ச்சுனா என்றும் முடிப்பார்கள்.


வசனங்களும் சரணர் இயக்கமும் தொகு

 
வசனம் எழுதப்பட்ட ஓர் எழுத்தோலை (11- 12ஆம் நூற்.).

பசவர் முதலான சரணர்களின் வசனங்கள், இறையுணர்வுடன் கூடிய சமூக விழிப்புணர்வுக்கு வழிவகுத்தன. வசனங்களை இயற்றிய சுமார் 200 சரணர்கள், வீரசைவ மரபில் அறியப்படுகின்றனர். இவர்களில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்.[2] பசவர், அக்கா மகாதேவி, சென்னபசவர், சித்தாராமர் முதலானோர் புகழ்பெற்ற வசனங்களை இயற்றியுள்ளனர். [3]

சில வசனங்கள் தொகு

ಉಳ್ಳವರು ಶಿವಾಲಯ ಮಾಡುವರು ನಾನೇನು ಮಾಡಲಿ ಬಡವನಯ್ಯಾ
ಎನ್ನ ಕಾಲೇ ಕಂಬ, ದೇಹವೇ ದೇಗುಲ, ಶಿರವೇ ಹೊನ್ನ ಕಳಸವಯ್ಯಾ
ಕೂಡಲಸಂಗಮದೇವಾ ಕೇಳಯ್ಯಾ, ಸ್ಥಾವರಕ್ಕಳಿವುಂಟು ಜಂಗಮಕ್ಕಳಿವಿಲ್ಲ

உள்ளவரு சிவாலய மாடுவரு நானேனு மாதலி படவனையா
என்ன காலே கம்ப தேஹவே தேகுல சிரவே ஹொன்ன களசவய்யா
கூடல சங்கம தேவ கேளையா ஸ்தாவரக்களிவுண்டு ஜங்கமக் களிவில்லா

(வசதி) உள்ளவர்கள் சிவாலயம் அமைப்பார்கள். நானோ ஒரு ஏழை, என் செய்வேன் ஐயா?
என் கால்களே தூண்கள், உடலே கோயில், தலையே தங்கக் கலசம் ஐயா!
கூடல் சங்கம தேவா, கேளையா! நிற்பவைக்கு அழிவுண்டு, ஆனால் அசைபவைக்கு அழிவில்லை!

பசவர், Speaking of Siva, by A. K. Ramanujan. Penguin. 1973. p. 1


ಇವನಾರವ ಇವನಾರವ ಇವನಾರವನೆಂದು ಎನಿಸದಿರಯ್ಯ.
ಇವ ನಮ್ಮವ ಇವ ನಮ್ಮವ, ಇವ ನಮ್ಮವನೆಂದು ಎನಿಸಯ್ಯ.
ಕೂಡಲ ಸಂಗಮದೇವಾ ನಿಮ್ಮ ಮನೆಯ ಮಗನೆಂದು ಎನಿಸಯ್ಯ.

இவனாரவ இவனாரவ இவனாரவனெண்டு எனிசடிரய்யா
இவ நம்மவ இவ நம்மவ இவ நம்மவனெண்டு எனிசய்யா
கூடல சங்கம தேவா நிம்ம மனெய மகனெண்டு எனிசய்யா

இவன் யாரவன் இவன் யாரவன் இவன் யாரவனென்று எனை எண்ணச் செய்யாய் ஐயா
இவன் என்னவன், இவன் என்னவன், இவன் என்னவனென்று எண்ணச் செய் ஐயா,
கூடல் சங்கம தேவா, நின் வீட்டில் நான் மகனென்று எண்ணச் செய் ஐயா!

பசவர், Shaivam.org[4]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. Edward Rice, A History of Kannada Literature, 1921, Asian Educational Services, (Reprinted 1982), pp 56
  2. Sastri (1955), p361
  3. Narasimhacharya 1988, p20)
  4. "Don't be a seperatist". n.d. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2016. {{cite web}}: Check date values in: |date= (help)

உசாத்துணைகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசன_சாகித்தியம்&oldid=2454514" இலிருந்து மீள்விக்கப்பட்டது